1-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் தலைமறைவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2016

1-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியர் தலைமறைவு.

கிருஷ்ணகிரியில் 1-ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி சான்றிதழ் மூலம் அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (42). இவர் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பிளஸ் 2 வரை படித்த, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன் (37) என்பவருக்கு இவர் போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன்மூலம் முனியப்பன் அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்துள்ளார்.


இதுபோல போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (37) என்பவரும் போலி சான்றிதழ் மூலம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். இதையடுத்துதருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திரன், முனியப்பனையும், கிருஷ்ணகிரி போலீஸார் செந்தில்குமாரையும் கைது செய்தனர். போலி ஆசிரியர் விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்குத் தொடர் விடுமுறை எடுத்த ஆசிரியர்கள் குறித்த விவரத்தை குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சந்தேகத்துக்கு உரியவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட் டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் கங்கோஜி கொத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் அருள்சுந்தரம் (42) என்பவர், போலி கல்விச்சான்றுகள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வேப்பனப்பள்ளி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையில், அருள்சுந்தரம் காவேரிப்பட்டணம் அருகே கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சப்பன் என்பவரது மகன் ராஜா என்பவதும், இவர் கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ராஜா என்ற பெயரில் கடந்த 31-07-1978-ல் 1-ம் வகுப்பு சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அருள்சுந்தரம் என்கிற ராஜாவை, புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்த நேற்று (12-ம் தேதி) நேரில் ஆஜராகுமாறு, அதிகாரிகள் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும், பள்ளிக்கு வராமல், அலைபேசியை அணைத்து வைத்துள்ளார். இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த 25-08-2001-ம் ஆண்டு தருமபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் போலி கல்விச்சான்றிதழ்கள் மற்றும் சாதிச்சான்றிதழ் சமர்பித்துள்ளார்.


29-08-2001 முதல், வேப்பனப்பள்ளி ஒன்றியம் பி.கே.பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக, அருள்சுந்தரம் என்கிற பெயரில் பணிபுரிந்துள்ளார். மேலும், ஆதிதிராவிடர் என சாதிச்சான்றிதழ் பெறப்பட்டு பணிவாய்ப்பு பெறப்பட்டுள்ளது. 1-ம் வகுப்பு சேர்ந்து மேற்கொண்டு படிக்கவில்லை என விசாரணையில் தெரிய வருகிறது. இவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாபு,மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி