ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்குஉயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 30, 2018

ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் லாரி, டூவீலர் இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்குஉயர்வு

நாடு முழுவதும் இயங்கும் லாரி, டூவீலர் உள்ளிட்ட அனைத்து வித வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரி மற்றும் டூவீலர்,டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இதையறிந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தன.இந்நிலையில், இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் திடீரென லாரி, டூவீலர் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, 7,500 கிலோ முதல் 12,000 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 23 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், 12,000 முதல் 20,000 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு (6 சக்கர லாரி) இன்சூரன்ஸ் கட்டணம் 12சதவீதமும், 20,000 முதல் 40,000 கிலோ எடையுள்ள வாகனங்களுக்கு(10, 12, 14 சக்கர லாரி) இன்சூரன்ஸ் கட்டணம் 26 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 40,000 கிலோவுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

மேலும், டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 151 சிசி முதல் 350 சிசி வரையுள்ள டூவீலர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 11 சதவீதமும், 350 சிசிக்கு மேல் உள்ள டூவீலர்களுக்கு இன்சூரன்ஸ் கட்டணம் 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இன்சூரன்ஸ் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது லாரி உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தனராஜ் கூறுகையில், ''டீசல், பெட்ரோல், சுங்கச்சாவடி கட்டண உயர்வால் லாரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, இன்சூரன்ஸ் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் ஜிஎஸ்டி 18 சதவீதமும் செலுத்த வேண்டியுள்ளது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சாதகமாக இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே, 3ம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்த முடியாமல், 2000க்கும் மேற்பட்ட வாகனங்களை எடைக்கு போட்டுள்ளோம். தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வால், லாரி தொழிலை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,'' என்றார்.

உயர்த்தப்பட்ட கட்டண விவரம்:

வாகனம் பழைய கட்டணம் புதிய கட்டணம்

7,500 முதல் 12,000 கிலோ வாகனங்களுக்கு ரூ19,667 ரூ24,190

12,000 முதல் 20,000 கிலோ வாகனங்களுக்கு ரூ28,889 ரூ32,367

20,000 முதல் 40,000கிலோ வாகனங்களுக்கு ரூ31,620 ரூ39,849

40,000 கிலோ வாகனங்களுக்கு மேல் ரூ33,024 ரூ38,308

151 சிசி முதல் 350சிசி வரையுள்ள டூவீலர் ரூ887 ரூ985

350 சிசிக்கு மேல் உள்ள டூவீலர் ரூ1,019 ரூ2,323

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி