இனி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்: ரயில்வே அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2018

இனி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்: ரயில்வே அறிவிப்பு

தவிர்க்க முடியாத காரணத்திற்காக ரயிலில் பயணம் செய்ய முடியாமல் போனால், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகிலேயே 4-வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இந்திய ரயில்வேயின் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பிட்ட நாளில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்யக் கூடிய வசதியும் இந்திய ரயில்வேயில் உள்ளது.

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் முன்பதிவு செய்து இருக்கை உறுதியான பின்பும் நம்மால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்றால் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. இந்திய ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்டு முக்கிய ரயில் நிலையங்களில் பணியாற்றும் தலைமை முன்பதிவு மேற்பார்வையாளர்கள் மூலம், வேறு ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்.

முன்பதிவு செய்தவர் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகளும் நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியராக இருந்தால் பணியின் காரணமாக செல்லும் போது, 24 மணி நேரம் முன்பாக எழுத்துப்பூர்வமாக விண்ணப்பித்து பெயரை மாற்றிக் கொள்ளலாம். இதே போல் பயணிகளும் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பாக தமது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தனது பெயரில் பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மாற்றிக் கொள்ள கோரிக்கை விடுக்கலாம்.

மாணவர்கள் பெயரில் பள்ளி, கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட டிக்கெட்டுகளையும் வேறு மாணவர்கள் பெயரில் 48 மணி நேரம் முன்பாக மாற்றிக் கொள்ளலாம். தேசிய மாணவர் படையினருக்கும் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இதேபோல் திருமண நிகழ்ச்சிக்காக மொத்தமாக ரயில் பயணம் செய்பவர்கள், 24 மணி நேரத்துக்கு முன்பாக கடிதம் எழுதி கொடுத்து இந்த வாய்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி