குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல பெற்றோருக்கு 10 ஆலோசனைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2019

குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல பெற்றோருக்கு 10 ஆலோசனைகள்!


குழந்தைகள் உற்சாகமாகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமா? இந்த 10 ஆலோசனைகளைக் கடைப்பிடிங்க பேரண்ட்ஸ்!

பள்ளி திறக்க சில நாள்களே இருப்பதால் நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டைப்போடுவதில் தொடங்கி, புத்தகப்பை மற்றும் ஷூ சாக்ஸ் வாங்குவது எனப் பெற்றோர் பிஸியாக இருப்பார்கள். நீண்ட விடுமுறையில் நேரம் காலம் பார்க்காமல் விளையாட்டு, டூர் எனப் பிள்ளைகள் நினைத்த மாதிரி இருந்திருப்பார்கள். இந்தச் சூழலில், இப்போது பள்ளிக்கு அனுப்புவது பெற்றோருக்குக் கொஞ்சம் சிரமமான டாஸ்க்தான். சில குழந்தைகள் அழுது அடம்பிடிப்பார்கள்.குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்ல, பெற்றோருக்குக் குழந்தைகள் மனநல மருத்துவர் கண்ணன் தரும் 10 ஆலோசனைகளை இங்கு பார்ப்போம்.

1.    குழந்தைகள் பள்ளி செல்வதில் பெற்றோருக்குத்தான் அதிக பொறுப்பு இருக்கிறது.இரவில் நீண்டநேரம் கண்விழித்திருக்க அனுமதிக்காமல் சரியான நேரத்துக்குத் தூங்குவதற்குப் பழக்க வேண்டும். இதனால் நிம்மதியாக உறங்கி மறுநாள் காலை உற்சாகமாக எழுந்துகொள்வார்கள்.

2. ‘மிஸ் திட்டுவாங்க...' `மத்த பிள்ளைகள் சண்டை போடுவாங்க' என்பன போன்ற நெகட்டிவ்வான விஷயங்கள் பற்றி அறிவுரை கூறுவது குழந்தைகளுக்கு அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். மாறாக, 'உங்க ப்ரண்ட்ஸை மீட் பண்ணலாம்', 'மிஸ் புதுசு புதுசா நிறைய விஷயங்கள் சொல்லித் தருவாங்க...' என்று பாசிட்டிவாகப் பேசலாம். முதல்தடவை பள்ளி செல்லும் குழந்தைகளாக இருந்தால், `உங்க மிஸ் ரொம்ப நல்லவங்க', `ஸ்கூல்ல நல்ல ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க, அங்கே விளையாடலாம்' என்று பாசிட்டிவாகப் பேசி அவர்களைத் தயார்படுத்துங்கள்.

3.    புத்தகப்பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் பாக்ஸ் ஆகியவற்றை, குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் விருப்பத்தின்படி வாங்கிக்கொடுங்கள். இது பள்ளிக்குச் செல்லும் ஆர்வத்தைக் குழந்தைகளிடம் உண்டாக்கும்.

4.     குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகளைச் செய்து கொடுப்பது நல்லது. காலையில் ஒரு உணவு, மதியம் வேறு உணவாக இருப்பது அவர்களுக்குச் சாப்பாட்டின்மீது ஆர்வத்தை உண்டாக்கும். குறைந்தபட்சம் பள்ளி தொடங்கும் முதல் வாரம் மட்டுமாவது பெற்றோர் இதைப் பின்பற்ற வேண்டும்.

5.    பள்ளி செல்லும்போது குழந்தைகளிடம் இரண்டு டிபன் பாக்ஸ்களை கொடுத்தனுப்பலாம். ஒன்றில் சாப்பிடும் உணவையும் மற்றொன்றில் ஹெல்த்தி ஸ்நாக்ஸ் அல்லது நறுக்கிய பழங்களை வைத்தும் அனுப்பலாம்.

6. ஆரம்பகாலங்களில் குழந்தைகளைக் கிளப்புவதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். உடன் குளிப்பது, பல் துலக்குவது எனக் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். சிறிது நாள்களுக்குப் பிறகு, 'நீங்களே செய்யுங்கள்...' எனக் குழந்தைகளை உற்சாகப்படுத்தி, காலையில் எழுந்ததும் காலைக்கடன்களை முடிக்க பழக்க வேண்டும்.

7. பள்ளியைவிட்டு வீடு திரும்பியதும் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றிக் கேட்க வேண்டும். முக்கியமாக, `ஆசிரியர் என்ன சொல்லி கொடுத்தார்?' என்று குழந்தையிடம் தினமும் கேளுங்கள். அதோடு குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களையும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும்.

8. குழந்தைகள் பயன்படுத்தும் நோட்டு, புத்தகங்களுக்கு விதவிதமான நிறங்களில் அட்டை போட்டுக் கொடுப்பது, கார்ட்டூன் படம் உள்ள லேபிள்களை ஒட்டிக் கொடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதோடு படிப்பில் ஆர்வத்தை உண்டாக்கும்.

9. குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன் முத்தம் கொடுப்பது, அணைத்துக்கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களைக் கனிவோடு வழியனுப்பிவையுங்கள். பள்ளியிலிருந்து வந்ததும் அவர்களைக் கட்டியணைத்து முத்தம் கொடுங்கள். இது அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும்; மேலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான உறவை வலுப்படுத்தும்;

10. `ஏன் பள்ளி செல்ல வேண்டும்?' என்பது போன்ற கேள்விகளை, குழந்தைகள் கேட்கும்போது, அவர்களுக்குப் புரியும் வகையில் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் பள்ளிப் பருவத்தை நீங்கள் எப்படி மகிழ்ச்சியாகக் கழித்தீர்கள் என்பதைச் சொல்லி அவர்களுக்கு நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்துங்கள். இது மகிழ்ச்சியாக பள்ளி செல்ல உதவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி