1980-ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருப்பவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு சென்னை பல்கலைக்கழகம் முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2019

1980-ம் ஆண்டு முதல் அரியர் வைத்திருப்பவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு சென்னை பல்கலைக்கழகம் முடிவு


தொலைதூர கல்வி நிறுவனத்தில் 1980-ம் ஆண்டு முதல் தோல்வி அடைந்த பாடத்தை (அரியர்) தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்க சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு முடிவு செய்துஇருக்கிறது.

சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பி.துரைசாமி தலைமை தாங்கினார். இதில் நடப்பு கல்வியாண்டில் கல்வி முறையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், சில முக்கிய முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

அந்த கூட்டத்தில், ‘சென்னைபல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் 1980-ம் ஆண்டு முதல் அரியர் (தேர்ச்சி அடையாத பாடம்) வைத்திருப்பவர்களுக்கு தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கலாம்’ என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைவார்கள் என்று பல்கலைக்கழக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 1980-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுகலை படிப்புகளில் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துஇருக்கிறது. அரியர் வைத்து இருக்கும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எம்.பி.ஏ. படிப்பை படித்தவர்கள் ஆவார்கள். அரியர் தேர்வு எழுதுவதற்கு சென்னை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு கூட்டம் 2 முறை வாய்ப்பு கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த2 வாய்ப்புகளிலும் அனைத்து தாள்களில் வெற்றி பெறுபவர்கள் பட்டம் பெறுவார்கள். அதுவே 2 வாய்ப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட தாள்களில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக... சான்றிதழ் படிப்பு அல்லது டிப்ளமோ சான்றிதழ் பெறுபவர்கள் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பை தொடருவதற்கு ஆசைப்பட்டால், 2-ம் ஆண்டு சேர்க்கையில் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியாவிலேயே இந்த திட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் தான் முதன்முறையாக கொண்டு வரப்பட்டு இருக்கிறது என்றும், ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்துவிட்டதால் விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி