தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 709 தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தடுக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டில் தனியார் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 90-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை விசாரித்த நீதிபதி சம்பத் ஆணையம், அரசுக்கு அளித்த பரிந்துரைப்படி, தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளை அரசு உருவாக்கியது.பள்ளிகளில் தீயணைப்புச் சாதனங்களை பொருத்துவது, கான்கிரீட் கட்டிடங்களில் மட்டுமேபள்ளிகளை நடத்துவது, போதிய இட வசதி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இந்நிலையில் 2011-ல் நடந்த ஆய்வில் அடிப்படை வசதிகள் இல்லாத 2,500 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டன.அதன் பிறகும் குறைந்தபட்ச நிலப்பரப்பை உறுதி செய்ய தனியார் பள்ளிகளுக்கு பல முறை அரசு காலஅவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் 2015-16-ம் கல்வி ஆண்டுடன் முடிந்தது. அதன் பிறகும், விதிமுறையைக் கடைபிடிக்காத 746 பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடையாது என அரசு அறிவித்தது.இருந்தபோதிலும், மாணவர்களின் நலன் கருதி 2017 மே 31 வரை மட்டும் தாற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதில் பெரும்பாலான பள்ளிகள் அங்கீகாரம் பெறாமலேயே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் ஜோசப்ரோஸ், சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் அங்கீகாரமின்றி 709 தனியார் பள்ளிகள் செயல்படுவதாக கல்வித்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அதேபோல, நூற்றுக்கும் மேற்பட்ட போலி சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படுகின்றன. அங்கீகாரமற்ற பள்ளிகளின் பெயர், முகவரியை கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
அதேபோல, அந்தந்த மாவட்டங்களில் முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளில் வெளியிட வேண்டும். இப்பள்ளிகளில்மாணவர் சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அங்கீகாரமற்ற பள்ளிகளை கட்டுப்படுத்தினால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரசு பள்ளிகளில் உள்ள தகுதியற்ற ஆசிரியர்களை இந்த அரசு வீட்டுக்கு அனுப்பினாலே எண்ணற்ற மாணவர் சேர்க்கை நடைபெறும்
ReplyDeleteதொடர் அங்கீகாரம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளிடம் இருந்து ஏராளமான லட்சங்களை அதிகாரிகள் எதிர்பார்பதால் இதுபோன்ற நிலை உருவாகி உள்ளது....
ReplyDelete