ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்ப் புலவர்கள் புறக்கணிப்பு - வைகோ கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2019

ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்ப் புலவர்கள் புறக்கணிப்பு - வைகோ கண்டனம்


ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழ்ப் புலவர்கள் புறக்கணிக்கப்படுவதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி இன்றுவரையிலும், மதுரை தமிழ்ச் சங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் கரந்தைக் கல்லூரி, நா.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி, ஒரத்தநாடு கல்வியியல் கல்லூரி, மயிலம் தமிழ்க்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில், தமிழ் இலக்கியச் செறிவு, தமிழ் இலக்கிய ஆளுமை, இலக்கணப் புலத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழ் மரபுக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது.

இப்போது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் கல்லூரி ஆகியவற்றிலும் தமிழ்ப்புலமை வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

3 ஆண்டுகள் தமிழ்ப் புலவர், இளங்கலை இலக்கிய இளையர் (பி.லிட்) படித்து, அதன் தொடர்ச்சியாக 6 மாத தமிழ்ப் பண்டிதர் பயிற்சியும் முடித்தவர்களுக்கு, 1987 முதல் அரசுப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அவர்கள், தகுதி நிலை 1, தகுதி நிலை 2 என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

6-ம் வகுப்பு முதல் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களுக்குப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என பேராசிரியர் பி. விருத்தாசலனார், பெரும்புலவர் கி.த. பச்சையப்பன் ஆகியோர் விடுத்த வேண்டுகோளை ஏற்று, 2009-ல் கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபொழுது பிறப்பித்த அரசு உத்தரவின்படி, மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.

இவர்கள், இளங்கலை இலக்கிய இளையர் (Bachelor of Oriental Literautre) பட்டதாரி தமிழ் ஆசிரியர்களாக, புலவர் என்ற தகுதியோடு, தனித்தமிழ் ஆசிரியர்கள் என அழைக்கப்பட்டு வந்தனர்.

அதன்படி தமிழ்நாட்டில், மொழிப்பாட ஆசிரியர்கள், கல்வியியல் கல்விக்கு (பி.எட்) இணையாகக் கருதப்பட்டுகின்றது.

2012-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட அரசு அறிவிப்பு ஆணையின்படி, “ஆசிரியர்களுக்குத் தகுதி காண் தேர்வு நடத்த வேண்டும்; மொழி ஆசிரியர்கள் குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்ட முடிவின்படி, தமிழ்ப்புலமைப் படிப்புகளில் தகுதி பெற்றவர்கள், கடந்த 2017 வரையிலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகுதித் தேர்வு (Teacher’s Eligibility Test-TET) எழுதி உள்ளனர்.

ஆனால், தற்போது தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு ஆணை 70-ல், ஆசிரியர் தகுதிகாண் தேர்வு 2019-ல், தமிழ்ப் பண்டிதர்கள், தேர்வு எழுதுவதற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை.

இதனால், 40,000-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பண்டிதர்கள், தேர்வு எழுத விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்துள்ளனர்.

எனவே, தமிழக அமைச்சரவை இந்தப் பிரச்சினையில் விரைவில் முடிவு எடுத்து, தமிழ்ப் பண்டிதர்கள் தகுதித் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி