'சீருடை அணிந்திருந்தால் பஸ் பாஸ் தேவையில்லை!' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2019

'சீருடை அணிந்திருந்தால் பஸ் பாஸ் தேவையில்லை!'


''பள்ளி மாணவர்கள், சீருடை அணிந்திருந்தால், 'பஸ் பாஸ்' தேவையில்லை,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து பிரிவுக்கு உட்பட்ட, தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வு, சென்னை, அடையாறு, செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், நேற்று நடந்தது.ஆய்வு இந்த ஆய்வில் பங்கேற்ற, போக்குவரத்து துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறியதாவது :பள்ளி வாகனங்களில் உள்ள, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய, போக்குவரத்து கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழு, பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள, 32 ஆயிரத்து, 576 தனியார் பள்ளி வாகனங்களில், 31 ஆயிரத்து, 143 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில், 1,009 வாகனங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளது; 1,433 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வு செய்யப்படாத வாகனங்களை இயக்க முடியாது.'ஹெல்மெட்' அணியாதவர்களின், 'லைசென்சை' பறிமுதல் செய்வது தொடர்பாக, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுவரை, அபராதம் விதிக்கும் நடைமுறை தான் உள்ளது.

சாலை விபத்துக்களை குறைப்பதற்கு, தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை தவிர, மற்ற இடங்களில், ஓட்டுனர்களிடம், ஹெல்மெட் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து,போதிய விழிப்புணர்வு இல்லை; அதை ஏற்படுத்த முயற்சிக்கிறோம்.பள்ளிகளில், புதிய பாடத்திட்டத்தில், சாலை விதிகள் குறித்த பாடங்களையும், சாலை பாதுகாப்பு மன்றங்களையும் ஏற்படுத்தி, விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி மாணவர்கள், சீருடை அணிந்திருந்தாலும், கல்லுாரி மாணவர்கள், பழைய பாஸ் வைத்திருந்தாலும், பஸ்களில் இலவச பயணத்தை அனுமதிக்க உத்தரவிட்டுள்ளோம்.

புதிய பஸ் பாஸ், விரைவில் வழங்கப்படும்.ஒப்புதல்: நாட்டிலேயே முதலில், மின்சார பஸ்களை வாங்க, தமிழக அரசு தான் ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு மானியத்தில், முதல் கட்டமாக, 500 மின்சார பஸ்களை வாங்க திட்டமிட்டுள்ளோம். அடுத்து, 2,000 மின்சார பஸ்கள் வாங்க திட்டமிட்டுள்ளோம். ஆட்டோக்களுக்கு, விரைவில், எச்சரிக்கை பட்டனுடன் கூடிய, மீட்டர்கள் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி