TNPSC - தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது: சென்னை உயர்நீதிமன்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2019

TNPSC - தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது: சென்னை உயர்நீதிமன்றம்


குரூப்-1 தேர்வை ரத்துசெய்யக் கோரி விக்னேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.  இந்த தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில்  வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

இதை ஏற்காமல் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதனை எதிர்த்து விக்னேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கேள்வித்தாள் குளறுபடி மற்றும் வெளிப்படையின்மை ஆகிய காரணங்களால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது 24 கேள்விகள் தான் தவறானவை என்றும், மாதிரி விடைத்தாளில் குறைபாடு ஏதுமில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது. அத்துடன், நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில்,

மனுதாரர் உள்ளிட்ட மனு அளித்த அனைவருக்கும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டதாகவும் டிஎன்பிஎஸ்சி கூறியது. தவறான விடைகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கினாலும் மனுதாரர் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மனுதாரருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியும் மனுதாரர் தேர்ச்சி பெறவில்லை என்ற டிஎன்பிஎஸ்சியின் வாதத்தை ஏற்ற உயர் நீதிமன்றம், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி