நாளை ( 13.01.2020 ) பள்ளிகள் & அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் - அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 13, 2020

நாளை ( 13.01.2020 ) பள்ளிகள் & அரசு அலுவலகங்களில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் - அரசு அறிவிப்பு.

நாளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் (தேசிய கொடி ஏற்றப்படும்  பள்ளிகள் & அரசு அலுவலகங்கள் ) தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என இந்திய அரசு அறிவிப்பு.

ஓமன் நாட்டின் சுல்தான் மறைவுக்கும் நாளைய தினம் இறுதி ஊர்வலம் நடைபெறுவதாலும் , இந்திய அரசு நாளை 13/01/2020 அன்று துக்கம் அனுசரிப்பதால் தேசிய கொடிகள் அனைத்து பள்ளிகள் அலுவலகங்களில் அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.

அரசின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும்.

ஓமன் நாட்டின் சுல்தான் பற்றிய சில தகவல்கள் :

ஒமான் நாட்டின் அரசர் சுல்தான் காஃபூஸ் பின் செய்த் (Qaboos bin Said al Said) காலமானார்..

*ஒரு மக்கள் நலன் விரும்பும் அரசன் எப்படி இருப்பான் என்பதற்கு ஓமான் சுல்தான் சுல்தான் காஃபூஸ் பின் செய்த் (Qaboos bin Said al Said) எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். கொஞ்சம்கூட அரசன் என்ற தோரணையோ, மமதையோ இல்லாமல் மக்களுடன் கலந்து இருந்த ஒருவர்.

*இஸ்லாத்தின் கோட்பாடான “உன் மதம் உனக்கு, என மதம் எனக்கு” என்ற சமய நல்லிணக்கத்தைத், உண்மையிலேயே செய்து காட்டியவர்.

*பல ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு ஜெர்மனில் சிகிச்சை பெற்றவர்..

*சுல்தான் காபூஸ் அவர்கள் விரைவில் நலம்பெற வேண்டி, பெங்களூரைச் சேர்ந்த சந்திரசேகர் ஸ்வாமி என்ற ஜோதிடர் தலைமையில் 22 மந்திர விற்பன்னர்கள் குழு ஓமானில் அவர் மாளிகையில் அரச விருந்தினர்களாகத் தங்கி யாகம் நடத்தினர்...

*சிவன் கோவில் ஒன்றும், கிருஷ்ணன் கோவில் ஒன்றும் ஒமானில்  கட்டிக்கொள்ள அனுமதியளித்தவர். சில தேவாலயங்களும் உண்டு. ஒரு தற்காலிக விநாயகர் ஆலயம் ஒன்றும் காலா (Ghala) என்ற இடத்தில் உண்டு,

*ஆரம்பத்தில் வியாபாரத்திற்காக வந்து, ஓமான் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த குஜரத்தி கிம்ஜி ராம்தாஸ் என்பவருக்கு ஓமானின் குடியுரிமையையும் கொடுத்தவர். கிம்ஜி ராம்தாஸ் குடும்பத்தினரின் குடும்பத் தலைவர் ஷேக் ஆஃப் இண்டியன் கம்யூனிட்டி என அழைக்கப்படுகின்றனர்.

*இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஸ்ரீ சங்கர் தயாள் சர்மா அவர்களின் மாணவராக இந்தச் சுல்தான், சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

*இந்தியாவில் புனேயில் வந்து படித்திருக்கிறார். அவரை ஓமானுக்கு வரவழைத்து மரியாதையைக் காண்பிப்பதற்காக, சங்கர்தயாள் சர்மா அவர்களை அமரவைத்து, காரைச் சுல்தானே அரண்மனை வரை ஓட்டிச் சென்றிருக்கிறார். தனக்குச் சொல்லிக் கொடுத்த ஆசிரியனுக்கு அவர் காண்பித்த மரியாதை அது.

* ஹிந்துக்கள் யாரேனும் ஓமானில் இறந்து போய் அங்கேயே அடக்கம் செய்யவோ, தகனம் செய்யவோ நேர்ந்தால், அதற்கென தனியே Sohar என்னுமிடத்தில் 1 acre அளவுள்ள ஹிந்துக்களுக்கான ஒரு மயானம் அமைக்கப்பட்டுள்ளது. Khimji Ramdas &company யால் அது நிர்வகிக்கப் படுகின்றது.  இறுதிச்சடங்குகளை செய்வதற்கென்றே ஒரு புரோகிதரும் (குஜராத்தி) அங்கே இதற்காகவே உள்ளார். மிகச்சிறப்பான முறையில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்படுகின்றது. அரபு நாடுகளில் வேறு எந்த நாட்டிலும் ஹிந்துக்களுக்கு தனி மயானம் உள்ளதாகவோ அங்கு தகனம் செய்ய அனுமதி உள்ளதாகவோ எனக்குத் தெரிய வில்லை.

*கிபி 1970 - பாலைவனத்தில் போதுமான குடிநீர் வசதி கிடையாது. மொத்த நாட்டிலுமே ஆறு கிலோமீட்டர் தான் சாலை வசதி உள்ள பகுதி. மின்சாரம் கிடையாது. ஒரே ஒரு சிறிய மருத்துவமனை தான் மொத்த தேசத்திற்கும். மூன்று பள்ளிகளைத் தவிர கல்விநிலையங்களோ கல்லூரிகளோ இல்லாத நாடு. வறுமையின் கோரப்பிடியில் மக்கள். உள்நாட்டு கலவரம் வேறு. இறப்பு விகிதம் மிக அதிகம். படிப்பறிவு குறைவு. சொந்தமாக கரன்சி கூட இல்லாத நாடு.

ஆனால் இன்று ..


*ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வலிமைமிக்க முப்படைகள் கொண்ட இராணுவம் அமைக்கப்பட்டது. அந்நிய தலையீடுகள் தடுக்கப்பட்டன. நாடெங்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. புதிய துறைமுகங்கள், விமானநிலையங்கள் அமைக்கப்பட்டன.

*ஒமான் ஏர் எனப்படும் விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. புதிதாக அரசு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டன. நாடெங்கும் மின்சார வழித்தடங்கள் அமைக்கப்பட்டன.

 *எண்ணெய் வளம் மிக குறைந்த,மலை, பாலைவனங்கள் என கடுமையான நிலப்பரப்பு உடைய தேசமானாலும் மின்வசதி, சாலைவசதி இல்லாத இடமே இல்லை எனும் நிலை உருவாகியுள்ளது.

*48 வருடங்களுக்கு முன்பு மூன்றே மூன்று பள்ளிகள் இருந்த தேசத்தில் இன்று 1500க்கும் மேற்பட்ட பள்ளிகள். அனைவருக்கும் கல்வி வசதி. கிட்டத்தட்ட 100% ஆரம்பக்கல்வி.

*15,000 பேர் படிக்கும் மிகப்பெரிய பல்கலைக்கழகம். பல்வேறு கல்லூரிகள். மாணவர்கள் அரசின் உதவியோடு வெளிநாட்டிற்கு சென்று படிக்க வசதி..

*1970ல் ஒரே ஒரு மருத்துவமனை இருந்த தேசத்தில் இன்று கிட்டத்தட்ட எழுபது பெரிய மருத்துவமனைகள், ஆயிரம் சிறு கிளினிக்கள்.1970ல்  49 ஆண்டுகளாக இருந்தத சராசரி ஆயுட்காலம் இன்று 77 ஆண்டுகளுக்கும் மேல்.
 ‎
*பிறப்பின் போது ஏற்படும் குழந்தை இறப்புகள் 1000 குழந்தைக்கு 118 என இருந்தது. இப்போது 1000 குழந்தைகளுக்கு 9 ஆக குறைந்துள்ளது. கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியாத வளர்ச்சி இது.

*மகப்பேறின் போது ஏற்படும் தாய் இறப்பு விகிதமும் (maternal mortality rate) மிக மிக குறைவு  (17/100000 live birth).

*ட்ரகோமா எனும் பரவும் நோயை  ஒழித்த முதல் நாடாக ஒமான் உள்ளது. பொது மருத்துவத்துறையில் ஒமானின் வளர்ச்சி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இணையானதாக உள்ளது.

*வருடாவருடம் உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து பாராட்டு பெறும் நாடாக உள்ளது. இவை அனைத்தையும் 48 வருடங்களில் சாத்தியப்படுத்தியது செயற்கரிய செயல்.

*மிக அதிக மனிதவள குறியீடு கொண்ட நாடு (Very High Human Development Index). அமைதியும் வளர்ச்சியும் அதன் அடையாளங்கள்.

*1970ல் இருந்த நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சியடைந்த நிலையை 50 வருடங்களுக்கும் குறைவான காலத்தில் ஒமான் அடைய ஒரே காரணம் ஆளுமைத் திறன் மிக்க தலைவர் - சுல்தான் காபூஸ்

*வளைகுடா போர்களிலும் தற்போதைய ஏமன் போரிலும் பாதிக்கப்பட்டோருக்கு உணவு மருத்துவ உதவி செய்பவர்களாக ஒமானிகள் உள்ளனரே தவிர போர்களில் ஈடுபடுவதில்லை.

*கேரள வெள்ளத்தின் போதும் விமானம் நிறைய நிவாரணப் பொருட்களை அனுப்பி மனிதத் தன்மையை நிரூபித்தனர் தலைவனைப் போன்ற மக்கள். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை யுனெஸ்கோ நிறுவனத்தின் மூலம் உலக அளவில் சிறந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பாளர்களுக்கு விருதும் வழங்குகிறார் சுல்தான்

*அவர் செய்ததில் முக்கியமானது ஓமனைசேஷன் என்ற, ஓமானிகளுக்கு வேலைகளில் முன்னுரிமை அளிப்பது. படிப்படியாக ஓமானிகளை ”வேலை செய்ய”ப் பழக்கினார். அதுவரை அரசு தரும் இலவசங்களை மட்டும் நம்பி இருந்த மக்களை வேலை வாய்ப்பைத் தருகிறேன், பிழைத்துக்கொள் என்ற கொள்கையை ஆரம்பித்து, மானியங்களைப் படிப்படியாகக் குறைத்தார்.

*எத்தனை ஆண்டுகள் இலவசங்கள் வழங்கியே மக்களைக் காப்பாற்ற முடியும் என நினைத்ததன் விளைவே இந்த ஓமானிமயமாக்கல் அல்லது ஓமனைசேஷன். 2002இல் ஐந்து சதவீதமாக ஆரம்பித்த ஓமனைசேஷன் ஒன்று 60 சதவீதத்தைத் தாண்டிச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளில் 100% அரசு வேலைகளும், 60% தனியார் வேலைகளும் உள்ளூர் மக்களுக்கே என்ற நிலையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜிசிசி எனப்படும் சுற்றியுள்ள நாடுகளின் நிலையைக் கருத்தில் கொண்டால் இது அசுர சாதனை.


*. ஆண்டுக்கு 1 மாதம் வரை ஓமான் முழுக்கச் சுற்றுப் பயணம் செய்து, கிராமங்களில் தங்கி மக்களுக்கு என்ன தேவை என்பதை நேரடியாகக் கேட்டுச் செய்து கொடுக்கும் “மீட் த பீப்பிள்” என்ற திட்டத்தை ஆரம்பித்தார்.

*ஒரு பெரும் அமைச்சர்கள் படையே உடன் செல்லும். என்னென்ன தேவை, எத்தனை நாளில் வேலை முடிக்கப்படும், என்ன செலவு, யார் பொறுப்பு என்பதெல்லாம் அங்கேயே முடிவாகும். அதன் ஆடிட்டிங் ரிப்போர்ட் அரசருக்குக் கிராம வாரியாக, அவர் இட்ட உத்தரவுகள் வாரியாக மாதாமாதம் செல்லும். ஆரம்பத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு சுற்றுப் பயணம் செய்யும்போதுகூட வேலையை முடிக்காமல் வைத்திருந்த மந்திரிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.


* சாலையை பிரிக்கும் டிவைடர்கள் 40 நாட்களுக்குள் 1 மீட்டர் உயரத்தில் கான்க்ரீட்டில் டிவைடர்கள் வைத்தாக வேண்டும் எனச் சொல்லி, செய்தும் காண்பித்தார். 40 கிலோமீட்டருக்கான டிவைடர்கள் 40 நாட்களில் போடப்பட்டது. சாலையைக் கடக்க நடை மேடைகளும் ஒரு கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற கணக்கில் அமைக்கப்பட்டது. எல்லாம் சுல்தானின் நேரடி மேற்பார்வையில் நடந்தது. அதை அமைத்த பின்னர், சாலையை அபாயகரமாகக் கடப்போர், விசா கேன்சல் செய்து ஊருக்கு அனுப்பப்பட்டனர்.

இவ்வளவு தூரம் மக்கள் நலன் விரும்பும் அரசனாகவும், இந்தியர்கள் மற்றும் இந்தியா மீதான கரிசனமும் கொண்ட, மத நல்லிணக்கத்தை விரும்பும் சுல்தான் காஃபூஸ் பின் செய்த் பூரன் இன்று காலமானார்...

2 comments:

  1. நம் நாட்டு தலைவர்களுக்கு இவர் போன்றோர் ஒரு பாட புத்தகம்

    ReplyDelete
  2. Makkalin nalan virumbi oaman arasarukku ennudaya irangalayum vanakkathayum thrivithukolgiren. Ivarai parthu nam nattu thalaivargal thrunthattum kadavule....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி