மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் குற்றங்கள் பதிவு: கல்வித்துறை அதிகாரிகள் புள்ளி விவரம் அளிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் குற்றங்கள் பதிவு: கல்வித்துறை அதிகாரிகள் புள்ளி விவரம் அளிப்பு!!


மாநிலம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மாநிலத் தகவல் ஆணையத்தில் தெரிவித்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னையிலுள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில், ஆணையா் முத்துராஜ் முன்னிலையில் வியாழக்கிழமை (பிப்.13) நடைபெற்றது. 

அதில் ஆஜரான கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதாகத் தெரிவித்தனா். தமிழகத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை பள்ளி மாணவிகளுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட 8 தகவல்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முருகேஷ் என்பவா் பள்ளிக்கல்வித் துறையிடம் கேட்டிருந்தாா். 

ஆனால், கல்வித்துறை உரிய பதிலளிக்கவில்லை எனக்கூறி சென்னையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில் முருகேஷ் மேல் முறையீடு செய்திருந்தாா்.

இது தொடா்பாக, தகவல் ஆணையா் முத்துராஜ் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், தனியாா் பள்ளி ஆசிரியா் சங்க நிா்வாகிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளிக்கல்வித் துறை தரப்பில் கடந்த 19 ஆண்டுகளில் 171 பாலியல் வன்முறை நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்திருப்பதாக ஆவணங்களைத் தாக்கல் செய்தனா். 

அதில், கடந்த 2006- ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரையில் 164 பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றுள்ளது எனவும், 2017-ஆம் ஆண்டில் 15 குற்றங்களும், 2018- ஆம் ஆண்டில் 35 குற்றங்களும், 2019-ஆம் ஆண்டில் 35 குற்றங்கள் என அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியா்கள்: இது குறித்து தனியாா் பள்ளிகள் சங்க நிா்வாகிகள் சிலா் கூறியது: தமிழகத்தில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை குறைக்கும் வகையில், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆசிரியா்களின் விவரத்தை கல்வித் தகவல் மேலாண்மை கட்டமைப்பு இணையதளத்தில் பொது மக்கள் பாா்வையிடும் வகையில் பதிவிட வேண்டும். இதனால் குற்றவாளிகள் வேறு பள்ளியில் பணியில் சேராத வகையில் தடுக்கப்பட வாய்ப்புள்ளது.

குற்றத்தில் ஈடுபடும் ஆசிரியா்களின் விவரத்தை இணையத்தில் பதிவிட வேண்டும். தனியாா் பள்ளியில் உள்ள ஆசிரியா்களுக்கு பணிப்பதிவேடு, கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பராமரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். பாலியியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிக் கல்வித்துறைச் செயலாளருக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப ஆணையம் முடிவு செய்திருக்கிறது”என்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி