+2 பொதுத் தேர்வு கணினி பயன்பாடு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2020

+2 பொதுத் தேர்வு கணினி பயன்பாடு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ்

பொதுத் தேர்வு டிப்ஸ்

பிளஸ் 2 பொதுத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வெழுதி வெற்றி பெற மாதிரி வினாத்தாள் மற்றும் அவர்களுக்கான ஆலோசனைகளைக் கொடுத்துவருகிறோம். அந்த வகையில் கணினி பயன்பாடு பாடப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறுவது எவ்வாறு என்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் கணினி ஆசிரியர் வெ.குமரேசன் M.Sc.,B.Ed. அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்…

கணினி பயன்பாடு வினாத்தாள் 4 பகுதிகளை உள்ளடக்கியது.

i) 15 ஒரு மதிப்பெண் வினாக்கள்
ii) 9 இரண்டு மதிப்பெண் வினாக்கள் (ஒரு கட்டாய வினா)
iii) 9 மூன்று மதிப்பெண் வினாக்கள் (ஒரு கட்டாய வினா)
iv) 10 ஐந்து மதிப்பெண் வினாக்கள் (அல்லது வகை)

பகுதி I: ஒரு மதிப்பெண் வினாக்கள் 1 முதல் 15 வரை உள்ளது. முதலில் புத்தக வினாக்களையும் பின்பு கூடுதல் வினாக்களை ஒவ்வொரு பாடத்திலும் 15 முதல் 20 வரையிலான ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான கேள்வியையும் அதற்கான பதிலையும் தயார் செய்துகொள்ள வேண்டும்.  படிக்கும் நாமே கேள்விகளையும் பதில்களையும் தயார் செய்துகொள்வதன் மூலம் முழுமையான 15 மதிப்பெண்களைப் பெறலாம். கூடுதல் வினாக்கள் எடுக்கும்போது கண்டிப்பாக இரண்டு, மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் விடைகளில் வரும் வினாக்களாக இருக்கக்கூடாது.

பகுதி II: இரண்டு மதிப்பெண் வினாக்கள் 16 முதல் 24 வரை உள்ள வினாக்கள். இதில் மொத்தம் உள்ள 9 வினாக்களில் 6 வினாக்களுக்கு விடை எழுத வேண்டும். இதில் 1 வினா கட்டாயமாக எழுதவேண்டும். முழு மதிப்பெண் பெற இருக்கும் மாணவர்கள் புத்தக வினாக்கள் மட்டுமில்லாமல் கூடுதல் வினாக்களையும் பயிற்சி செய்துகொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் வரும் ‘நினைவில் கொள்க’ பகுதியைப் படித்தால் முழு மதிப்பெண் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

பகுதி III: 25 முதல் 33 வரை உள்ள 9 வினாக்களில் 6 வினாக்களுக்கு விடை எழுதவேண்டும். அதில் ஒன்று கட்டாய வினா வகை. 5, 6, மற்றும் 7 பாடப்பகுதிகளில் வரும் கட்டளை அமைப்பு வினாக்களை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்து வினாக்களையும் நன்கு படித்து அதன் பிறகு விடையளிக்க வேண்டும். அப்போதுதான் முழு மதிப்பெண்களைப் பெற முடியும். 2 மற்றும் 3 மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கும் முன் கட்டாய வினாவைத் தவிர மற்ற 5 வினாக்களை நமக்குத் தெரிந்த எளிமையான வினாக்களைத் தேர்வு செய்து எழுதவும்.

பகுதி VI: 34 முதல் 38 வரை உள்ள 5 மதிப்பெண் வினாக்கள் (அல்லது வகை) இந்தப் பகுதியில் நாம் 5 வினாக்களுக்கு விடையளிக்கவேண்டும். இதில் ‘அல்லது’ வகை வினாக்களைத் தேர்வு செய்யும்போது நன்கு படித்த எளிமையான வினாக்களைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும். அப்போதுதான் முழு மதிப்பெண்களான 5 மதிப்பெண்களையும் பெற முடியும். 5 மதிப்பெண் வினாக்களைப் படிக்கும்போது மொத்தமுள்ள 18 பாடங்களை 5 பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.

பகுதி I = 1 முதல் 3 பாடம் = 3
பகுதி II = 4 முதல் 7 பாடம் = 4
பகுதி III = 8 முதல் 9 பாடம் = 2
பகுதி IV = 10 முதல் 14 பாடம் = 5
பகுதி V  =15 முதல் 18 பாடம் = 4 .



முழுமையான மதிப்பெண் பெறஅனைத்து வகை வினாக்களையும் நன்கு பயிற்சிசெய்து தேர்வுக்கு முன் தவறில்லாமல் எழுதிப் பார்த்துக்கொள்ள வேண்டும். இரண்டு பாடப் பகுதியில் புத்தக வினாக்கள் அனைத்தையும் நன்கு பயிற்சி செய்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடப்பகுதியைப் படிப்பதற்கு முன்பு ‘நினைவில் கொள்க’ பகுதியைப் படித்து விட்டுச் சென்றால் எளிமையாகப் படிக்க முடியும்.
வினாத்தாள்களிலுள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கும் முன் (ஒரு மதிப்பெண் தவிர) எளிமையான நன்கு படித்த முழு மதிப்பெண் தரக்கூடிய வினாக்களைத் தேர்வு செய்து விடையளிக்க வேண்டும்.

மெல்ல கற்போர்

மெல்ல கற்போர் முதலில் எளிமையான பாடங்களைத் தேர்வுசெய்துகொண்டு படிக்க வேண்டும். கணினி பயன்பாடு மாணவர்கள் 15, 16, 17, 18 ஆகிய பாடங்கள் வணிகம் சார்ந்துள்ளதால், இதிலுள்ள 5, 3, 2 மதிப்பெண்களுக்கு எளிமையாக விடையளிக்கலாம். 1, 2, 3 ஆகிய பாடங்களையும் 6, 7 பாடங்களையும் நன்றாகப் படித்தால் தேர்வில் எளிதில் வெற்றிபெற முடியும். பின்பு நல்ல மதிப்பெண்கள் பெற மற்ற பாடங்களைக் கவனமாக படித்துக்கொள்ள வேண்டும்.

திரு வெ.குமரேசன் MSC CS., B.Ed., D.TED.
கணினி பயிற்றுனர் .      


மாதிரி வினாத்தாள் காண:


SOURCE : குங்குமச் சிமிழ்

2 comments:

  1. TRB தேர்வு முறைகேடுகள் மறைக்கப்படுகிறதா?
    |Mar 03, 2020|

    சமீபத்தில் TNPSC குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது. உடனே TNPSC ஆணையம், தவறு செய்த 99 பேரை வாழ்நாள் தடை செய்துவிட்டு அத்தேர்வை தொடர்ந்து நடத்துகிறது. இது சம்மந்தமாக சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் "நேர்மையாகத் தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகவே தேர்வு ரத்துசெய்யப்படவில்லை" என்று விளக்கம் கொடுத்தார்.

    இதேபோல, 2017-இல் TRB நடத்திய அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தேர்வு ரத்து செய்யப்பட்டது. நேர்மையாக தேர்வெழுதி வெற்றி பெற்றவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், முறைகேட்டில் ஈடுபட்ட 196-பேரை TRB வாரியம் இதுவரை தடை செய்ய வில்லை. யார் அந்த 196 பேர் என்று கூட இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது 2019-இல் TRB-ன் புது அறிவிப்பாணை மூலம் மறுதேர்வு நடக்கும் நிலையில், அந்த 196 தேர்வர்களும் மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளனரா என்பதும் புதிராக உள்ளது. TNPSC-க்கு ஒரு நியாயம் TRB-க்கு ஒரு நியாயமா, என்று இளைஞர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

    2017-ஆம் ஆண்டின் TRB தேர்வு ரத்து செய்தபோது மறுதேர்வுக்கு எந்த விண்ணப்ப கட்டணமும் வசூல் செய்யமாட்டோம் என்று அரசு சார்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்று மறுதேர்வுக்கு லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடம் தேர்வு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

    மறுதேர்வு நடக்கும் முன்னரே பல முரண்பாடுகள் நிறைந்து உள்ளதால், 2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட TRB மறுதேர்வை நிறுத்திவைக்க (stay) வேண்டும் என, சமூக சேவகர் திரு.K.M.கார்த்திக் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொது நல மனு (Diary no.5193/2020), நீதிபதி. திரு.நாகேஸ்வ்ர் ராவ் அடங்கிய அமர்வு முன் நேற்று (02/03/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கை நடத்தலாம் என உரிமை வழங்கி, வழக்கை முடித்து வைத்தனர்.

    கடந்த 2019-இல் உச்சநீதிமன்றத்தின் இதே அமர்வின் உத்தரவின் பேரிலேயே TRB வாரியம் புது (2019) அறிவிக்கையை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைப்படி மதுரை அல்லது சென்னை அமர்வின் முன் இந்த வழக்கு விரைவில் எதிர்பார்க்க படுகிறது.

    இது சம்மந்தமாக மனுதாரரும் சமூக சேவகருமான திரு.K.M.கார்த்திக் கூறியதாவது: விண்ணப்பித்த அனைவரும் ஏமாறும் வகையில் TRB வாரியம் நடந்து கொண்டுள்ளது. TRB வாரியம் தனது இரண்டு அறிவிக்கைகளின் கீழ் விண்ணப்பம் செய்த அணைத்து தேர்வர்களையும் இன்று திருப்தி படுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆகவே 2017-ல் நேர்மையான தேர்வெழுதியவருக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க வேண்டும். 2019-ன் அறிவிப்பாணையில் நிலுவையில் உள்ள சுமார் 400/500 காலி இடங்களை இணைத்து, புதிதாக சேர்க்கப்படும் அந்த காலியிடங்களுக்கு தேர்வை தொடர்ந்து நடத்த வேண்டும். இந்த வகையில் இரு தரப்பை சேர்ந்த தேர்வர்களும் பலன் அடைவார்கள். மாணவருக்கும் தகுதியான ஆசிரியர் கிடைப்பார்கள். அரசுக்கும் செல்வு மிச்சம், என்றார்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி