பள்ளிக் குழந்தைகள் சுதந்திரத் திருநாள் விழாவினை காண நேரில் வர வேண்டாம் - தமிழக அரசு செய்தி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 13, 2020

பள்ளிக் குழந்தைகள் சுதந்திரத் திருநாள் விழாவினை காண நேரில் வர வேண்டாம் - தமிழக அரசு செய்தி வெளியீடு.

செய்தி வெளியீடு எண் : 582 

நாள் : 13.08.2020 

செய்தி வெளியீடு 

இந்தியத் திருநாட்டின் 74 - வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் திங்கள் 15 - ஆம் நாள் காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும் , பொது மக்களும் , மாணவர்களும் , பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர் . இந்த ஆண்டு கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள் , கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது . சுதந்திர போராட்ட தியாகிகளின் வயது மூப்பினை கருத்தில் கொண்டும் , கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாகவும் , மாவட்டந்தோறும் பத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது . மேலும் ஒவ்வொரு ஆண்டும் , சுதந்திரத் தின விழாவின் ஒரு பகுதியாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலைமை செயலக 2 வளாகத்தில் , இனிப்புப் பெட்டகம் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சார்பாக மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர் அவர்கள் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று , சமூக இடைவெளியை பின்பற்றி இனிப்பு பெட்டகத்தை மாணவர்களுக்கு வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக , அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள் . சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன . கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு , பொது மக்கள் , மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வரவேண்டாம் எனவும் , சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில் , கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . 


வெளியீடு : 

இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி