மினி கோர்மன் - அறியப்படாத ஆசிரியர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2020

மினி கோர்மன் - அறியப்படாத ஆசிரியர்.



கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள அகம்படம் பகுதியைச் சேர்ந்தவர்தான் மினி கோர்மன். 44 வயதான இவர் அதே மாவட்டத்திலுள்ள அம்புமாலா எனும் மலைக்கிராமத்தில் அமைந்துள்ள பழங்குடியின குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

இப்பள்ளியில் சுமார் 30 மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதால் அங்கு மினி கோர்மன் மட்டுமே தனியொரு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதுபோன்ற ஒற்றை ஆசிரியர் கொண்ட 270 பள்ளிகள் கேரளாவில் இயங்கி வருகிறது.


ஆனால் இங்கே ஆச்சரியம் ஒற்றை ஆசிரியர் என்பதல்ல. 44 வயதான மினி கோர்மன் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு சுமார் 16 கி.மீ தூரம் நடந்தே சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார் என்பதுதான்.

 

அதுவும் அம்புமாலா பழங்குடி பள்ளி அமைந்துள்ள பகுதி, புதிய அமரம்பலம் வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி ஆகும். யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இந்த காட்டுப்பாதை ஊடாகத்தான் மினி கோர்மன் நடந்து பள்ளியை சென்றடைகிறார். இப்படி கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபயணமாக பள்ளிக்கும் வீட்டிற்கும் போய் வருகிறார் மினி கோர்மன்.

அம்புமாலாவிற்கு செல்லும் வழியில் ஆற்றைக் கடக்கும் வகையில் ஒரு பாலம் இருந்தது. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கின்போது இந்த பாலம் இரண்டுமுறை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது மூங்கிலைக் கொண்டு ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மூங்கில் பாலத்தை கடந்துதான் மினி கோர்மன் செல்கிறார்.

 

காலை மாலை வேளைகளில் தான் நடந்தும் செல்லும் வழியில் யானை, புலி உள்ளிட்ட விலங்குகளை பலமுறை எதிர்கொண்டதாக மினி கோர்மன் கூறுகிறார்.

 

‘’ஒருமுறை வழியில் புலி குட்டிகளை பாதையில் பார்த்தேன். முதலில் அதை பூனைகள் என்று நான் நினைத்தேன். ஆனால் உற்றுப்பார்த்த போதுதான் அவை புலி குட்டிகள் என்பதை உணர்ந்தேன். மலைப்பாம்புகளையும் அடிக்கடி பார்த்துள்ளேன். இவற்றை பார்க்கும் போதெல்லாம் பயத்தில் பள்ளிக்கூடம் திரும்பி விடுவேன். அங்கிருந்து மெயின் ரோடு வரை யாராவது துணைக்கு வருவார்கள்,

 

மேலும் மழை நேரத்தில் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் பாயும். அந்த நேரத்தில் மூங்கில் பாலத்தை கடப்பதற்கு பயமாக இருக்கும். அது ஆபத்தும் கூட. அந்த மாதிரி நேரங்களில் அம்புமாலா கிராமத்திலேயே தங்கி விடுவேன்’ என விவரிக்கிறார் மினி கோர்மன்.

 

கொரோனா ஊரடங்குக்கு முன்னர் பத்தாவது ப்ளாக் வரை சில உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் பஸ் நேரம் மினி கோர்மனுக்கு பள்ளி சென்றுவர ஏற்றதாக இல்லாததால் பணியில் சேர்ந்த நாள்முதல் தற்போது வரை ஆறு வருடங்களாக நடைப்பயணம் ஒன்றே அவரது உதவிவருகிறது.

 

ஆசிரியர் பயிற்சி பட்டம் பெற்றவரான மினி கோர்மான் நீதிமன்ற பணியாளர், வணிக வரி அலுவலகத்தில் எழுத்தர் பணி எனப் பல்வேறு பணிகளில் இருந்து வந்துள்ளார். 2010-ம் ஆண்டு கிராம விரிவாக்க அலுவலராக பணியாற்றி வந்த வந்த மினி கோர்மன், பழங்குடி குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக 2015-ம் ஆண்டு கிராம விரிவாக்க அலுவலர் வேலையை விட்டுவிட்டு, அம்புமாலா பழங்குடி பள்ளியில் ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தார்.

 

முதலில் மாணவர்கள் பள்ளிக்கு வர தயக்கம் காட்டினதாக கூறும் மினி கோர்மான், குழந்தைகள் மற்றும் இங்கு வாழும் குடும்பங்களுடன் ஒரு நல்லுறவை உருவாக்க அவருக்கு ஆறு மாதங்கள் ஆகியுள்ளன.

இப்போது மினி கோர்மான் பழங்குடி மக்களில் ஒருவராக பழகி அவர்களின் குமுறல்களை புரிந்து வைத்திருக்கிறார். அம்புமாலா மக்கள் தேன், நெல்லிக்காய் மற்றும் பிற பழங்கள் மற்றும் கிழங்குகளை சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வருவதாக கூறும் மினி கோர்மான், கல்வி என்ற ஒன்றே வறுமையை ஒழிக்க உதவும் ஆயுதம் என்பதை புரியவைக்க அனுதினமும் மெனக்கிட்டு வருவதாக சொல்கிறார்.

 

மினி கோர்மான் அம்புமாலா கிராமத்திற்கு வருவதற்கு முன்பு மின்சார வசதி கிடையாது. தற்போது அவரின் முயற்சியால் பள்ளிக்கு மின்சார இணைப்பு கிடைத்துள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பு நடத்த டிவியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 28 மாணவர்கள் மாநில கல்வித் துறையால் தொடங்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக பள்ளிக்கு வருவதாக கூறுகிறார் மினி கோர்மான்.

 

image

 

கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரவிருக்கும் செமஸ்டருக்கான செயல்பாடாக ஆன்லைன் கல்வியை நோக்கி திரும்பியுள்ளன. ஆனால், இந்த ஆன்லைன் வகுப்புகளை அணுகுவதற்கான அதிவேக இணைய இணைப்புகள் மற்றும் மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் கிடைக்காதது, பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும், குறிப்பாக பழங்குடி சமூகங்களின் மாணவர்களுக்கும் மாற்றத்தை கடினமாக்குகிறது’’ எனக் கூறும் மினி கோர்மன், தன்னை போன்றே மாநிலத்தில் பணியாற்றி வரும் பல்வேறு ஒற்றை ஆசிரியர்கள் ஒழுங்கற்ற சம்பளம் வழங்கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்.

 

‘’ஆனால் நான் எங்கள் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறேன். அதுதான் என்னைத் தொடர வைக்கிறது" என்று பூரிக்கிறார் மினி கோர்மன்.


5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி