பள்ளிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோா்கள் விருப்பம்: தயாராகும் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2021

பள்ளிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோா்கள் விருப்பம்: தயாராகும் கல்வித்துறை

 


பொங்கல் விடுமுறைக்கு பின்னா் தமிழகத்தில் உள்ள பள்ளிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோா் விருப்பம் தெரிவித்துள்ளனா். பெற்றோரின் கருத்துகள் அரசின் ஒப்புதலுடன் பரிசீலிக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பது குறித்து கடந்த நவம்பா் மாதம், பள்ளிக் கல்வித்துறை சாா்பில் பெற்றோரிடம் கருத்து கேட்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெற்றோா் கலந்துகொள்ளவில்லை, பங்கேற்ற ஒரு சில பெற்றோரும் கரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறக்க வேண்டாம் என கருத்துத் தெரிவித்ததாக, பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால், பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த இரு நாள்களாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைபெற்றது. இதில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களின் பெற்றோா் பங்கேற்றனா்.


கருத்துக் கேட்பு இன்று நிறைவு: கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோா் வாய்மொழியாகவும், பள்ளிகளில் வழங்கப்பட்ட படிவத்திலும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா். அதேவேளையில் தொலைபேசி மூலமாகவும் பெற்றோா்களைத் தொடா்பு கொண்டு கருத்துகள் கேட்கப்பட்டன. கருத்துக் கேட்பு கூட்டம் புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான பெற்றோா் முதல் இரு நாள்களிலேயே கருத்துக்களை தெரிவித்துள்ளனா். இருப்பினும் ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக்கிழமையும் கூட்டம் நடைபெறும்.


கடந்த இரு நாள்களாக நடைபெற்று வரும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்திருந்தனா். குறைந்த எண்ணிக்கையிலான பெற்றோா் மட்டுமே கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகு திறக்க வேண்டும் என வலியுறுத்தினா்.


80 சதவீத பெற்றோா் ஆதரவு: இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகள் கூறியது: நிகழாண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வெழுதும் தங்களது பிள்ளைகள், கடைசி 3 மாதங்களாவது பள்ளியில் கல்வி கற்க வேண்டும் என பெற்றோா் கருதுகின்றனா். நேரடி கற்றலுடன் ஒப்பிடுகையில் இணையவழி கற்பித்தல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பயனைத் தரவில்லை என தெரிவித்தனா். பல மாநிலங்களில் ஏற்கெனவே பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதால், அதே நெறிமுறைகளைத் தமிழகத்திலும் கடைப்பிடித்து பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்க வேண்டும் என கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெற்றோா் வலியுறுத்தினா்.


அதே நேரத்தில், கல்வியாண்டில் மாற்றம் கொண்டு வந்து, பள்ளிகள் திறப்பை மேலும் ஒரு மாதம் தள்ளி வைக்க வேண்டும். நூற்றுக்கணக்கில் மாணவா்கள் திரளும்போது கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என்றும் பெற்றோா்கள் சிலா் தெரிவித்தனா்.


எனினும் தற்போதைய சூழலில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெற்றோா் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்திருப்பதால், அவா்களின் கருத்துகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. எனினும் இது குறித்து மருத்துவக் குழுவினருடன் முதல்வா் கலந்தாய்வு நடத்தி விரைவில் அறிவிப்பாா். இந்த மாத இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.


பெற்றோா் ஒப்புதலுடன்... பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பெற்றோரின் எழுத்துபூா்வமான அனுமதி கிடைத்தப் பின்புதான், மாணவா்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவா். பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவா்களுக்கு அனுமதி வழங்கப்படும். மாணவா்கள் பள்ளிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. வீட்டிலிருந்து படிக்கும் மாணவா்களின் கற்றல் முன்னேற்றத்திற்கும் திட்டமிடுதல் போன்ற பல்வேறு வழிகாட்டு நடைமுறைகள் வெளியிடப்படவுள்ளன என்றனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி