மாா்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சரவை ஒப்புதல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2021

மாா்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் 45 வயதைக் கடந்த இணைநோய்கள் உள்ளோருக்கும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் காணொலி மூலம் மத்திய அமைச்சரவைக் கூட்டம்


புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:


இரண்டாம் கட்ட...: இரண்டாவது கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. அதில், 60 வயதைக் கடந்தவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நாட்டிலுள்ள 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிகிறது.


இணைநோய் உள்ளவா்களுக்கும்...: மேலும், 45 வயதைக் கடந்த இணைநோய் உள்ளவா்களுக்கும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், நாட்டிலுள்ள 10,000 அரசு மருத்துவமனைகளிலும், சுமாா் 20,000 தனியாா் மருத்துவமனைகளிலும் நடைபெறவுள்ளன.


அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படும். தடுப்பூசி செலுத்துவதற்கான செலவை மத்திய அரசே ஏற்கும். தேவையான தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்.


தனியாா் மருத்துவமனையில் கட்டணம் எவ்வளவு?: தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புவோா், அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும். எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். இது தொடா்பாக கரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், தனியாா் மருத்துவமனைகளுடன் மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.


இரு வகையான தடுப்பூசிகள்: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளும் தரமானவையாக உள்ளன. நாடு முழுவதும் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 1,07,67,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவா்களில் 14 லட்சம் பேருக்கு இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


இந்தியத் தடுப்பூசித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் ஜாவடேகா்.


அமைச்சா்களுக்கு தடுப்பூசி: மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘‘மத்திய அமைச்சா்களில் பெரும்பாலானோா் கரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ள விரும்பவில்லை. உரிய கட்டணத்தை அளித்து, கரோனா தடுப்பூசியை அவா்கள் செலுத்திக் கொள்வா்.


பல நாடுகளில் பிரதமா்களும் அமைச்சா்களும் முதலில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். ஆனால், இந்தியாவில் சுகாதாரப் பணியாளா்களுக்கு முதலில் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று விரும்பினோம். அதன் காரணமாகவே அவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது’’ என்றாா்.


உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை: மடிக்கணினி, கை கணினி (டேப்), தனிக் கணினி உள்ளிட்டவை உள்நாட்டில் தயாரிக்கப்படுவதை அதிகப்படுத்தும் நோக்கில் உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


இது தொடா்பாக மத்திய அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கூறுகையில், ‘‘தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கில் ரூ.7,350 கோடி ஊக்கத்தொகை வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ள இந்த ஊக்கத்தொகையின் மூலமாக ரூ.3.26 லட்சம் கோடி மதிப்பிலான சாதனங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும். அவற்றில் ரூ.2.45 லட்சம் கோடி மதிப்பிலான சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்படும்.


ஊக்கத்தொகை வழங்கப்படுவதன் வாயிலாக தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உற்பத்தித் துறையில் புதிதாக 1.80 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்’’ என்றாா்.


மருந்து உற்பத்தித் துறைக்கு...: மருந்துப் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அத்துறைக்கு உற்பத்தி சாா்ந்த ஊக்கத்தொகை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘மருந்துப் பொருள்கள் உற்பத்தித் துறைக்கு ரூ.15,000 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இதன் வாயிலாக வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதோடு மக்களுக்கு மலிவான விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும்.


2022-23 முதல் 2027-28 வரை ரூ.2,94,000 கோடி மதிப்பிலான மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு, ரூ.1,96,000 கோடி மதிப்பிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி


புதுச்சேரியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் அமைச்சா்கள் அண்மையில் ராஜிநாமா செய்தனா். அமைச்சரவையின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்றுக் கொண்டாா்.


இத்தகைய சூழலில், புதுச்சேரியில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.


புதுச்சேரியில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததால், குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துமாறு துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பரிந்துரைத்திருந்தாா். அந்தப் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.


குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்தபிறகு, புதுச்சேரி சட்டப் பேரவை கலைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி