தாய்மொழியில் பொறியியல் படிக்க தமிழ் உட்பட 8 மொழியில் புத்தகம் தயார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2021

தாய்மொழியில் பொறியியல் படிக்க தமிழ் உட்பட 8 மொழியில் புத்தகம் தயார்

 


புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், தாய்மொழியில், பொறியியல் படிப்புகளை படிக்கும் வாய்ப்பு, வரும் கல்வியாண்டு முதல் கிடைக்க உள்ளது. அதற்காக, தமிழ் உட்பட எட்டு மொழிகளில் பாடப் புத்தகங்கள் தயாராகி வருகின்றன.


புதிய தேசிய கல்விக் கொள்கையை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தாய் மொழிகளில் கல்வி கற்பதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதேபோல், மற்ற மொழிகளை கற்கவும் ஊக்குவிக்கப்படுகிறது.கடந்தாண்டு, நவ.,ல் வெளியிடப்பட்ட இந்த கல்விக் கொள்கையில், பொறியியல் கல்லுாரிகளிலும், தாய்மொழியில் பாடங்கள் கற்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வு


இதையடுத்து, பல்வேறு பிராந்திய மொழிகளில், பொறியியல் படிப்புகளை கற்றுத் தருவதற்கு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்ஒப்புதல் அளித்துள்ளது.வரும் கல்வியாண்டு முதல், தாய்மொழியில் பொறியியல் பாடங்களை படிக்கும் வாய்ப்பு, மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.


பிராந்திய மொழிகளில் பாடங்களை கற்றுத் தர விரும்பும் கல்லுாரிகள், கவுன்சிலில் விண்ணப்பித்து, அனுமதி பெறலாம். உரிய வசதிகள் அந்தக் கல்லுாரிகளில் உள்ளதா என்பன போன்றவை ஆராயப்பட்டு, உரிய அனுமதியை, கவுன்சில் அளிக்கும். அதே நேரத்தில், பிராந்திய மொழியில் கற்றுத் தர வேண்டும் என்பது கட்டாயமில்லை; அது, கல்லுாரி மற்றும் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றது


.வரும் கல்வியாண்டிலேயே, பிராந்திய மொழிகளில் பாடங்களை கற்றுத் தரும் வகையில், பொறியியல் படிப்புகளுக்கான பாடப் புத்தகங்களை மொழி பெயர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தெலுங்கு என, எட்டு மொழிகளில் பாடப் புத்தகங்கள் தயாராகி வருகின்றன.நாடு முழுதும், 130 ஆசிரியர்கள், இதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


தாய்மொழியில் பொறியியல் படிப்பு குறித்து, சமீபத்தில், ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுதும், 83 ஆயிரம் மாணவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 44 சதவீத மாணவர்கள், தாய்மொழியில் படிக்க ஆர்வம் காட்டியுள்ளனர்.அதிகபட்சமாக, 12 ஆயிரத்து, 487 மாணவர்கள், தமிழ் மொழியில் படிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கடுத்து, ஹிந்தி மொழியை, 7,818 பேர் தேர்வு செய்து உள்ளனர்.

ஆர்வம்


ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தகவல் தொழில்நுட்ப மையத்தில் படிக்கும் மாணவர்களில், 20 சதவீதம் பேர், தாய்மொழியில் கற்பதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ''ஹிந்தியில், 130 பாடப் பிரிவுகளுக்கான பாடப் புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதற்கடுத்து, தமிழில், 94 பாடப் பிரிவுகளுக்கான புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.


''மற்ற மொழிகளுக்கான பாடங்கள் 'ஸ்வயம்' இணையதளத்தில், இடம்பெற்றுள்ளன,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். பிராந்திய மொழிகளில் மொழி பெயர்த்தாலும், சில முக்கியமான தொழில்நுட்ப வார்த்தைகளை, ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடும்படி, மொழிபெயர்ப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி