அரபிக்கடலில் உருவாகிறது புயல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2021

அரபிக்கடலில் உருவாகிறது புயல்

 

அரபிக்கடலில், வரும் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். அது புயலாக வலுப்பெற்று, குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கலாம்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய தென் மாவட்டங்களில், 3.1 கி.மீ., உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யும்.


மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும். தென்மேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், இன்று கடலோரம் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் இயல்பான அளவை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை அதிகரிக்கும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.


வரும் 14ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்.தெற்கு அரபிக்கடல் பகுதியில் 5.8 கி.மீ., வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 14ம் தேதி வரை, மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். மாலத்தீவு பகுதியில் நாளையும் நாளை மறுநாளும் சூறாவளி காற்று வீசும்.


எனவே மேற்கண்ட நாட்களில், அரபிக்கடலில் சூறாவளி காற்று வீசும் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரம் மற்றும் விளாத்திகுளத்தில், 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


இதற்கிடையில் அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று புயலாக மாறும் என, பல்வேறு வானிலை அமைப்புகள் கணித்துள்ளன. இந்த புயல், வடமேற்கில் நகர்ந்து, குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி