தமிழகத்தில் மகாபலிபுரம், ஏற்காடு, காஞ்சி, குமரி, குற்றாலம், தஞ்சை உட்பட தேசிய கல்விச் சுற்றுலாவுக்காக 100 நகரங்கள் பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2021

தமிழகத்தில் மகாபலிபுரம், ஏற்காடு, காஞ்சி, குமரி, குற்றாலம், தஞ்சை உட்பட தேசிய கல்விச் சுற்றுலாவுக்காக 100 நகரங்கள் பட்டியல் வெளியீடு

 

ஒரே பாரதம், உன்னத பாரதம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கல்விச் சுற்றுலாவுக்கு 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் உள்ள மகாபலிபுரம், ஏற்காடு உட்பட 6 இடங்கள் இடம்பெற்றுள்ளன.

தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்காக ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற திட்டம் மத்திய அரசால் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தேசிய கல்விச் சுற்றுலாவுக்கு தகுதியான 100 நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தேசிய கல்விச் சுற்றுலாவுக்கு உகந்த 100 இடங்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவர்களை இந்த பட்டியலில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு சுற்றுலாத் தலங்களின் வரலாறு, பண்பாடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்து நம் நாட்டின் பன்முகத் தன்மையின் சிறப்பு குறித்த புரிதலை உணர வைக்க வேண்டும்.

கரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பின்னரே, சுற்றுலா செல்ல கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும். அதுவரை இணையவழியில் சுற்றுலா மையங்கள் தொடர்பாக தகவல்களை அறிந்துகொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி யுஜிசி உயரதிகாரிகள் கூறியதாவது:

ஒரே பாரதம், உன்னத பாரதம்திட்டம் நாட்டின் பன்முகத்தன்மை, தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் அம்சமாகும். அதன்படி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கல்விச் சுற்றுலாவுக்கு தகுதியான 100 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் இருந்து மகாபலிபுரம், ஏற்காடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, குற்றாலம், தஞ்சாவூர் ஆகிய6 இடங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பகுதிகளுக்கு கல்லூரிமாணவர்கள் சுற்றுலா செல்லும்போது அந்த மாநில மக்களின் நாகரிக வாழ்க்கை முறை பற்றி புரிதல் கிடைக்கும். மாநிலங்களுக்கு இடையேயான இணக்கமும் பரஸ்பரம் மேம்படும்.

அடுத்தகட்டமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு பிற மாநிலங்களின் முக்கியமான விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க வைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி