ஜூன் மாதமாகியும் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை தொடங்காதது ஏன்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2022

ஜூன் மாதமாகியும் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை தொடங்காதது ஏன்?

 

தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் 13-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது.


தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவது, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.


காரணம் என்ன?

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏப்ரல் மாத இறுதியிலோ, மே மாதத்தின் தொடக்கத்திலோ மாணவர் சேர்க்கை தொடங்குவது வழக்கம். ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், மே மாதத்தில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது தான் அவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள், ஆசிரியர் தேவைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும். கடந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போதும் கூட, மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கி விட்டது. ஆனால், இப்போது கொரோனா பரவல் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்காததற்காக காரணங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.


உடனே மாணவர்கள் சேர்க்கையை தொடங்குக

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27-ஆம் தேதியும் அரசு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருவார்கள். இவற்றில் 11-ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு இன்னும் 5 வேலை நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றுக்கு மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்காமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மாணவர் சேர்க்கை உடனே தொடங்கப்பட வேண்டும்.


மதிக்காத தனியார் பள்ளிகள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே மாதத்தில் தான் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், அதை தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை. தனியார் பள்ளிகளில் கடந்த டிசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. பெயர் பெற்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சில மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து விட்டன. மற்ற பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கையும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.


அரசு பள்ளிகளின் மீது நாட்டம்

கொரோனா பரவல் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றினார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் அரசு பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மே மாதத் தொடக்கத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கியிருந்தால், நடப்பாண்டும் வழக்கத்தை விட கூடுதலாக பல லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பர். அந்த வாய்ப்பை அரசு பள்ளிகளில் இழந்து கொண்டிருக்கின்றன.


அரசு பள்ளிகள் நிலை

தமிழ்நாட்டில் 22 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை; 11 பள்ளிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார்; 24 பள்ளிகளில் தலா இருவர் மட்டுமே பயில்கின்றனர்; 41 பள்ளிகளில் தலா மூவரும், 50 பள்ளிகளில் தலா நால்வரும் மட்டுமே பயில்கின்றனர். மொத்தமாக 669 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப் படுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக மாணவர் சேர்க்கையை முன்பே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், ஜுன் 13-ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், ஜூன் 14-ஆம் தேதி மாணவர் சேர்க்கைப் பேரணியை நடத்த வேண்டும் என்று ஆணையிடுவதும் குதிரைகள் அனைத்தும் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பான அபத்தச் செயலாகும். இது அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதிலாக குறைப்பதற்கே வழி வகுக்கும்.


தாமதிக்கக்கூடாது

எனவே, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். கிராமப்புறங்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒரு நடைமுறையாக கருதாமல், பெரும் இயக்கமாக மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.' என வலியுறுத்தியுள்ளார்.


3 comments:

  1. பெரும்பாலான தனியார் பள்ளிகளை நடத்துபவர்களே இந்த அரசியல்வாதி பண முதலைகள் தான் பிறகு எப்படி முன்கூட்டியே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிப்பார்கள்?

    ReplyDelete
  2. ஆசிரியர்கள் அனைவரும் விடைத்தாள் திருத்தும் பணியில் இருப்பதை மறந்து விட்டாரோ.

    ReplyDelete
  3. Amam paper thirutha Pola na Mattum admission niraiya panniduvangalo

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி