பள்ளிப் பதிவேடுகள் பராமரிப்புகளிலிருந்து ஆசிரியர்கள் விடுபடுவார்களா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2022

பள்ளிப் பதிவேடுகள் பராமரிப்புகளிலிருந்து ஆசிரியர்கள் விடுபடுவார்களா?

 

அண்மைக் காலமாகத் தமிழகப் பள்ளிக் கல்வியில் கால மாற்றத்திற்கு ஏற்ப பல்வேறு புதிய மாற்றங்கள் தோற்றுவிக்கப்பட்டு வருவது அறியத்தக்கது. இணைய வழியிலான செயல்முறைகளால் காலவிரயமும் தாள் பயன்பாடும் முற்றிலும் தவிர்க்கப்பட்டு உரியவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய தகவல்கள் அனைத்தும் முறையாகக் கிடைக்க வழிவகை செய்யப்படுவது சிறப்பு. இதன்மூலம் தாள் பயன்பாட்டுக்காகப் பெருமளவில் மரங்கள் அழிக்கப்படுவது ஓரளவு தடுக்கப்படும் என்று நம்பலாம். ஏனெனில், மரங்களில் இருந்து ஒரு டன் காகிதம் தயாரிக்க வேண்டுமென்றால் 17 வளர்ந்த மரங்களை வெட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒருவர் ஆண்டுக்கு 10 கிலோகிராம் அளவில் காகிதத்தைப் பயன்படுததுவதாகக் கூறப்படுகிறது. சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 2,400 மரங்கள் பல்வேறு காரணங்களுக்காக பூமியில் வெட்டி அழிக்கப்படுகின்றன.

இன்றைக்கும் உலகில் 90% காகிதத் தொழிற்சாலைகள் மரங்களை நம்பியே இருக்கின்றன. புவி வெப்பமடைதல் காரணமாக உலகெங்கிலும் ஏற்பட்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பரவலானதன் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், அரபு நாடுகள், பின்லாந்து, ஜப்பான், கொரியா எனப் பல நாடுகளில் மரக்கூழ் காகிதத் தொழிற்சாலைகள், மறுசுழற்சி காகிதத் தொழிற்சாலைகளாக மாறி வருவது அறியத்தக்கது. ஐரோப்பிய நாடுகளில் மறுசுழற்சி காகிதத் தயாரிப்பு 66% அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

காகித மறுசுழற்சிக்கு மாறுவதால் கிடைக்கும் நன்மைகள் அதிகம். இந்த முறையில் 1 டன் காகிதம் தயாரிக்கப்பட்டால், 4 ஆயிரத்து 100 கிலோவாட் மின்சாரத்தைச் சேமிக்க இயலும். காற்று மாசுபாடு 74% மற்றும் நீர் மாசுபாடு 34% குறைகிறது. இப்படிச் சுற்றுச்சூழலைக் காக்கும் பல்வேறு சிறப்புகள் மறுசுழற்சி முறையில் நிறைய உள்ளன. 

இத்தகைய சூழலில், காகிதப் பயன்பாட்டையும் நுகர்வையும் பல்வேறு உலக நாடுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு தற்போது மாற்று வழிமுறைகள் பலவற்றைக் கையாளத் தொடங்கியுள்ளது. இணைய வழி வர்த்தகம் மற்றும் பணப் பரிமாற்றப் பயன்பாட்டைப் பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்க பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருவது எண்ணத்தக்கது. குறிப்பாக, வங்கி நடைமுறைகள் மற்றும் சேவைகளில் இன்று பெருமளவு காகிதப் பயன்பாடுகள் குறைக்கப்பட்டு வருகின்றன. 

அதுபோல், அலுவலக நிர்வாக நடைமுறைகளில் தகவல் தொடர்புகள், புள்ளிவிவரங்கள், கடித போக்குவரத்துகள், கேட்புகள், ஏலங்கள், அரசாணைகள், அறிவிப்புகள் முதலான அனைத்தும் எண்ம முறையில் இணைய வழியில் மட்டுமே நடந்து வருவதும் சிந்திக்கத் தக்கது. ஊடக உலகில் கோலோச்சிய பல்வேறு காகிதப் பயன்பாட்டு அச்சு ஊடகங்கள் பலவும் தம் செய்திகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றை எண்ம வடிவில் மின் நாளிதழ்கள் மற்றும் மின் பருவ இதழ்களாக தவிர, மின் புத்தகங்களாக வழங்கி வருவதை எளிதில் புறந்தள்ளி விடமுடியாது. கல்வியிலும் பள்ளியிலும் இதுபோன்ற புதியன புகுதலைத் தவிர்க்க இயலாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது இன்றியமையாதது ஆகும். காகிதமில்லா நிர்வாக ஆளுமைக்கு உலகமே மாறிக் கொண்டிருக்க, கரையான்களுக்கு இரையாகிச் செல்லரித்துப் போய் அழியும் காகிதப் பயன்பாட்டு முறைமைகளை வறட்டுப் பிடிவாதத்துடன் கட்டிக் கொண்டு அழுவதென்பது கொஞ்சம் கூட நியாயமில்லை. நிலையில்லாத, எளிதில் அழியக் தக்க, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் காகிதப் பயன்பாடுகளை நிர்வகிப்பதும் பாதுகாப்பதும் மிகக் கடினமானது. செலவினமும் அதற்கான ஆவணக் காப்பறைகளுக்கான இடவசதிகளும் அதிகம்.

மேலும், இணையவழியில் பதியப்படும் தகவல்கள் அழியாமல் நீண்ட காலம் இருக்கும். தேவைப்படும் நேரங்களில் எங்கிருந்தும் பெறவும் அனுப்பவும் இயலும். இதன்காரணமாகப் பல்வேறு துறைகளில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பதிவேடுகள் மற்றும் கோப்புப் பயன்பாடுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டு ஊழியர்களின் பணிப்பளு எளிதாக்கப்படும் நிகழ்வுகள் நாடோறும் நடைபெற்று வருகின்றன. 

அதேவேளையில், ஆசிரியர் தொழில் எளிதல்ல. படிவங்களோடும் பதிவேடுகளோடும் மட்டும் பராமரிப்பது அவர்களது வேலையாகாது. உயிரும் உணர்வும் கோடானு கோடி கனவும் நிறைந்த பள்ளிவயதுக் குழந்தைகளின் உடல், உள்ள மற்றும் சமூக ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அரும்பாடு படவேண்டிய சமுதாயப் பொறுப்பும் கடமையும் ஏனையோரைவிட நிரம்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களின் தலையாயப் பணி என்பது கற்பித்தல் செயலாகும். மற்றவை அனைத்தும் அவர்களுக்கு இரண்டாம்பட்சமே எனலாம். 

ஆனால், அண்மைக்கால நடப்புகள் அப்படியாக இல்லை. பதிவேடுகள் பராமரிப்புக்காகவும் படிவங்கள் நிரப்புவதற்காகவும் இவற்றையே இணையம் மூலமாகப் பதிவேற்றங்கள் மேற்கொள்ள போராடுவதற்காகவும் அலுவல் மற்றும் அலுவல் சாரா நேரங்களை அதிகம் செலவிடும் போக்குகள் மிகுந்துள்ளன. பள்ளியின் முதன்மைக் குறிக்கோளாகவும் இலக்காகவும் காணப்படும் கற்றல், கற்பித்தல் நிகழ்வு பல நேரங்களில் நடைபெறாமலேயே கழிவது என்பது ஏற்பதற்கில்லை. 

மாநில, மாவட்ட அளவில் எந்தவொரு வழிகாட்டலும் இல்லாமல் தனிநபர் மற்றும் தனியார் வியாபார இடங்களில் அதிக விலைக்குக் கூவிக் கூவி விற்கப்படும் பல்வேறு வகையான படிவங்களையும் பதிவேடுகளையும் போட்டி போட்டுக் கொண்டு கால்கடுக்க தம் சொந்த பணத்தில் வாங்கும் அவலநிலைக்கு இன்றைக்கு தலைமையாசிரியர் மற்றும் பாட, வகுப்பு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்காக அரசு எந்தவொரு தனிப்பட்ட நிதியையும் முன்பொரு காலத்தில் வழங்கியதுபோல் இப்போது அளிக்க முன்வருவதில்லை.  

தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஆட்சியாளர்களால் கொண்டு வரப்படும் கவர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பள்ளிகளில் கொட்டி மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளுக்கு ஊறுவிளைவிக்கும் விதமாக ஆசிரியப் பெருமக்களை நிகழ்ச்சி நடத்துபவராகவும் நிழற்படங்கள் சேகரிப்பவராகவும் அவற்றை உடனடியாக இணையத்தில் பதிவேற்றங்கள் செய்பவராகவும் உருமாற்றி வரும் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. தேசியக் கலைத்திட்டம் மற்றும் மாநிலப் பாடத்திட்டம் ஆகியவற்றில் இவையனைத்தும் இடம்பெற்றுள்ளது நோக்கத்தக்கது. வெற்று விளம்பரங்களுக்கு வகுப்பறைகள் தக்க இடமல்ல. ஆசிரியர்கள் என்பவர்கள் இருபெரும் அரசுகளின் விளம்பர தூதுவர்கள் அல்லர். அவர்களுக்கென பல சமூகப் பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. அவற்றை செவ்வனே ஈடேற வைக்கவே போதுமான நேரம் இல்லாத சூழலில் இதுபோன்ற தொடர் இடையூறுகள் வெகுவாக மாணவர்கள் நலனைப் பாதிக்கும். 

மாணவர்களை விடவா பதிவேடுகளும் பதிவேற்றங்களும் இன்றியமையாதது? உயிரோட்டமிக்க வகுப்பறைகளில் கற்றலையும் கற்பித்தலையும் சாகடித்துவிட்டு படிவங்களுக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தால் கல்வி எப்படி உருப்படும்? இதில் கொடுமை என்னவென்றால் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலை ஒன்று. அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் இரண்டு. இரண்டும் வேறுவேறல்ல. ஒன்றேதான்! 

காட்டாக, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அரசால் வழங்கப்படும் விலையில்லாதப் பாடப்புத்தகங்கள் பெற்று வழங்கப்பட வேண்டும் என்பது பணி. இந்தப் பணியைச் செம்மையாக நிறைவேற்றி முடித்ததும் ஆசிரியர்கள் உரிய பதிவேட்டில் வகுப்புவாரியாகப் பெயர் பட்டியல் தயாரித்து, மாணவர்களிடம் கையொப்பம் பெற்று, சுருக்கப் பட்டியல் உருவாக்கிப் பராமரிக்கவும் உயர் அலுவலர்கள் மேற்கொள்ளும் பார்வைகளின்போது சமர்ப்பிக்கவும் பணிக்கப்படுவது ஒருபுறம். 

மற்றொரு புறத்தில் இதே பணியினை இதேபோல் தக்க தரவுகளைக் கையில் வைத்துக்கொண்டு இணைய இணைப்புக்காக அலைந்து திரிந்து ஊன் உறக்கம் தொலைத்து மன அமைதி இழந்து அதற்கென சிறப்பாக வடிவமைத்துத் தந்திருக்கும் இணையதளத்திற்குச் சென்று மணிக்கணக்கில் நேரம் செலவழித்து அத்தனையும் ஒழுங்காகப் பதிவேற்றம் செய்து முடிக்க அறிவுறுத்துவது வேடிக்கையாக உள்ளது. 

இந்த இரட்டைச் சவாரியினை தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளித் தலைமையாசிரியர்கள் சற்றேறக்குறைய 50 க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவர், ஆசிரியர் சார்ந்த பதிவுகளை மேற்சுட்டிக்காட்டப்பட்ட இருவேறு வழிகளில் அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. 

தற்போது பள்ளி, ஆசிரியர் மற்றும் மாணவர் சார்ந்த அனைத்துத் தகவல்கள் தொகுப்புக் கிடங்காகக் கல்வித் தகவல் மேலாண்மை மையம் (EMIS) உள்ளது. பள்ளி சார்ந்த நிழற்படங்கள், ஆசிரியர், மாணவர் சார்ந்த வருகைப்பதிவுகள், பள்ளி முழு விவரங்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் முழுத் தகவல்கள், மாணவர் கல்விசார் விவரங்கள், அரசின் நலத்திட்ட கேட்பு மற்றும் வழங்கல் பதிவுகள், அனைத்து வகையான பதிவேடு விவரங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாக இது உள்ளது சிறப்பு வாய்ந்தது. தற்போது இது இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது காகிதப் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கவல்ல இணைய வழிக் கல்வித் தகவல் மேலாண்மைக் கருவியாகும். 

இது செயலியாகவும் இணையதளமாகவும் இருவேறு வகையில் ஆசிரியர்களிடையே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் காலவிரயம் மற்றும் தரவுகளில் துல்லியமின்மை போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட்டு அனைத்து வகையான பள்ளிகளிலும் இருந்து பெறப்படும் சரியான தகவல்களின் அடிப்படையில் அண்மையில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மாணவ நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளுக்கு உகந்த வகையில் அளிக்க முடிகிறது. நையா பைசா செலவின்றி ஆசிரியர்களுக்கான இணைய வழியிலான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் மூலம் நடத்தி முடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த புதிய நடைமுறைகளில் காணப்படும் குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதற்காக இதை முற்றிலுமாகப் புறந்தள்ளுவதென்பதும் மறுதலிப்பது என்பதும் இன்றைய சூழலில் சாத்தியப்படாதது ஆகும். ஏனெனில், நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளிலும் இணைய வழி மேலாண்மைப் புகுத்தப்பட்டு விட்டது. தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையில் பெரும் பகுதியைத் தமதாக்கிக் கொண்ட பள்ளிக்கல்வித்துறையானது இன்னும் கற்காலத்திலேயே இருக்க நினைப்பது பேதைமை. இணைய வழியிலான செலவுகள் மற்றும் சேவைகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் விரைந்து கிடைத்திட அரசு தக்க நடவடிக்கை எடுப்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும். கல்வித்துறையில் முன்வைக்கப்படும் இதுபோன்ற புதிய மாற்றங்களை ஆசிரியர் பெருமக்கள் திறந்த மனத்துடன் அணுகவும் ஏற்கவும் திரளாக முன்வருதல் நல்லது. தரமான சேவை கிடைக்குமிடத்தில் மேற்கொள்ளப்படும் இணைய வழிச் செயற்பாடுகள் குறைந்த கால அளவில் விரைந்து நிகழக் கூடிய ஒன்றாகும். இதை அரசு உறுதி செய்வதும் ஆசிரியர்கள் ஆர்வமுடன் பழகுவதும் இன்றியமையாதது.

ஏறத்தாழ பல்வேறு அலமாரிகளிலும் பொருள் வைப்புகளிலும் பாதுகாப்புப் பெட்டகங்களிலும் பெரிய இடத்தை அடைத்துக்கொண்டு துர்நெடியடிக்கும் பதிவேடுகள் மற்றும் கோப்புகள் மீதான தொடர் பராமரிப்புகள் மட்டுமல்லாமல் இயற்கை இடர்பாடுகள், திடீர் விபத்துகள், கரையான் உள்ளிட்ட பூச்சிகள், மடித்து மக்கிப் போகும் வினைகள் ஆகியவற்றிலிருந்து விட்டு விடுதலையாகும் உணர்வினை எமிஸ் ஆசிரியர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. 

குறிப்பாக, ஒவ்வொரு தலைமையாசிரியரும் பள்ளி இருப்புப் பதிவேட்டில் உள்ளவற்றைப் பயபக்தியுடன் பாதுகாத்து ஒப்படைத்துவிட்டுப் பழுதில்லாமல் பணிநிறைவு பெறவேண்டும் என்கிற பய உணர்வுடன் இருந்துவரும் அவலநிலைக்கு இது முற்றுப்புள்ளி வைப்பதாக இருப்பது வரவேற்கத்தக்கது. 

இந்த நிலையில் பழைய நடைமுறைகளைக் காலமாற்றத்திற்கேற்ப களைய முன்வராமல் விடாப்பிடியாகப் பதிவேட்டுப் பராமரிப்பு முறையையும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது நல்லதல்ல. பதிவேற்றப் பராமரிப்பு முறைக்கு ஆசிரியர்கள் அனைவரையும் பழக்கிய பின், அந்த புதிய நடைமுறைகளை வலுப்படுத்துவதும் முறைப்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் உயர் அலுவலர்களின் செயல்முறைகளாக இருக்க வேண்டுமேயொழிய செல்லரித்துப் போகும் பழம்நடைமுறைகளைக் கைவிடாமல் ஆசிரியர்களைக் கிடுக்கிப்பிடி போடுவது தான் மிகுந்த மன அழுத்தத்தை அலுவலகப் பணிகள் தருவதாக ஆசிரியர்கள் வேதனைப்படுகின்றனர். 

இந்த மன அழுத்தம் கற்பித்தலைப் பாதிக்கிறது. கற்பித்தல் நிகழாத போது கற்றல் எங்கே நிகழும்? தரமான கற்பித்தலும் நல்ல கற்றலும் இல்லாத பள்ளிகளை யார் தாம் தேர்ந்தெடுப்பர்? கற்றலடைவின் பெரும் வீழ்ச்சிக்கும் அடிப்படைத் திறன்களில் போதிய அடைவின்மைக்கும் அரசுப்பள்ளிகள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையின்மைக்கும் இந்தப் பதிவேட்டுப் பணிச்சுமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

ஆக, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை காலம்காலமாகக் கோலோச்சிய, ஏனைய மாநிலங்களுக்கு வழிகாட்டிய தமிழ்நாட்டு நல்ல, தரமான, பயனுள்ள, வாழ்க்கைக்குதவும் கல்வி முறையினை ஆசிரியர் தம் கற்பித்தல் திறனால் மேம்படுத்த நல்வாய்ப்புகள் உருவாக்கித்தர முன்வருதல் இன்றியமையாத ஒன்று.

பல்துறை அறிவும் ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற ஆசிரியப் பெருமக்களிடம் கற்பித்தலை மூட்டைக்கட்டி வைக்கச்சொல்லி அவர்களை வெற்று எழுத்தர்களாகவும் கணினித் தட்டச்சுச் செய்பவராகவும் மாற்றி வருவது சமுதாய வளர்ச்சிக்கும் நாட்டின் கல்வி நலனுக்கும் உகந்ததல்ல. புழுதிகளோடும் பதிவேடுகளோடும் காலந்தோறும் போராடிக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களை விடுவித்து மாணவர்களுடன் மட்டுமே அதிக நேரம் பயனுள்ள முறையில் கற்பிக்கவும் கற்கவும் செலவிட நல்வாய்ப்பை வழங்கினால் நிச்சயமாக ஒரு புதிய விடியல் இங்கு பிறக்கும் என்பது திண்ணம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு இதற்கும் வழிவகை காண வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எழுத்தாளர் மணி கணேசன்
7010303298

1 comment:

  1. ஆமா ஆசிரியர் பணி எளிதல்ல.. 24 மணி நேரமும் ஒரு 1000 கிலோ மூட்டையை தலையில் சுமந்தவாறு உள்ளனர்.. வீட்டில் தூங்கும் போது கூட பதிவேடுகளை நெஞ்சில் வைத்துக் கொண்டே தூங்குகின்றனர்.. உன் பேனா உன் உருட்டு..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி