School Morning Prayer Activities - 06.12.2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2022

School Morning Prayer Activities - 06.12.2022

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 06.12.2022

திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: அன்புடைமை

குறள் : 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

பொருள்:
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள்.


பழமொழி :

Who hath a good trade though all waters may wade.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு


இரண்டொழுக்க பண்புகள் :

1. உலகின் மிக சிறந்த வைரம் நல் எண்ணங்கள்.

 2. வைரம் நமக்கு போதிப்பது உறுதியாக இருந்தால் மட்டுமே ஒளிர முடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருப்பேன்


பொன்மொழி :

படித்ததை பிரதிபலிக்காமல் படித்துக்கொண்டே இருப்பது, ஜீரணிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதைப் போன்றது. --எட்மண்ட் பர்க்


பொது அறிவு :

1. பாலாறு எந்த இடத்தில் உற்பத்தியாகிறது? 

சிந்தாமணி

2. களிமண்ணை போல் கையால் பிசையக்கூடிய உலோகம் எது? 

சுத்த தங்கம்.

English words & meanings :

creak -squeak, high pitched sound. both noun and verb. சுண்டெலி போல் கீச்சிடு. பெயர்ச் சொல், வினைச் சொல். creek - stream of water. சிறிய உப நதி. noun. பெயர்ச் சொல்.


ஆரோக்ய வாழ்வு :

ஒரு வேகவைத்த முட்டையில் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு உள்ளது. இது உங்கள் உடல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது மற்றும் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் வேகவைத்த முட்டை உங்கள் உடலை குளிர்காலத்திற்கு ஏற்றதாக ஆக்குகிறது. வேகவைத்த முட்டையில் நல்ல கொழுப்பு உள்ளது. இதை மிதமாக எடுத்துக் கொண்டால், உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.


NMMS Q

A26, B25, .........., ___?____. a) Z1. b) Y1. c) Z. d) Z26 

 விடை: Z1 


டிசம்பர் 06 இன்று

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள்



பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.


நீதிக்கதை

குருவி கொடுத்த விதை

ஓர் ஊரில் பண்ணையார் ஒருவருக்கு அந்த ஊரில் இருந்த அனைத்து நிலங்களும் சொந்தமாக இருந்தது. அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்தான். அவனுக்கு சிறிய குடிசையும், கொஞ்ச நிலமும் இருந்தது. 

பண்ணையாரிடம் முனியன், ஐயா! உங்கள் அனைத்து நிலங்களில் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும் காலியாக உள்ளது. என் நிலத்தில் விதைப்பதற்கு சிறிது தானியம் தாருங்கள் என்றான். 

சொந்தமாகப் பயிரிட வேண்டாம், என் நிலத்திலேயே உழுது பயிரிடு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும் என்று கோபத்துடன் சொன்னார் அவர். சோகத்துடன் வீட்டுக்கு சென்று தன் மனைவியிடம், நமக்கு தானியம் தரவில்லை. நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி என்று சொல்லி வருத்தப்பட்டான். 

அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியதை முனியனும், அவன் மனைவியும் பார்த்தனர். பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நாம் அதற்குத் தொல்லை செய்யக்கூடாது என்றான் முனியன். கூட்டில் அந்தக் குருவி நான்கு குஞ்சுகள் பொறித்தது. 

திடீரென்று அந்தக் குருவிக்கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்ததை பார்த்த குருவிக்குஞ்சுகள் கத்தியது, அதைக்கேட்ட உழவன் பாம்பை பிடித்துக் கொல்வதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் கால் ஒடிந்து இருந்தது. அதை அன்போடு எடுத்து அதற்குக் கட்டுப்போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்து உணவு கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டான். 

அந்தக் குருவியின் கால்கள் சரியானதும், அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் இருந்தனர். அச்சமயம் அவர்கள் வீட்டுக்கு அவன் வளர்த்த குருவி வந்தது. அவன் கையில் 3 விதையை கொடுத்து இதை உன் வீட்டுத் தோட்டத்தில் ஒன்றும், வீட்டின் முன்புறத்தில் ஒரு விதையையும், மற்றொரு விதையை வீட்டின் ஜன்னல் ஓரத்திலும் நட்டு வை. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி என்று சொல்லிவிட்டுப் பறந்தது. குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான். 

மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்தன. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்பு, அந்த பூசணிக்காயை இரண்டு துண்டாக வெட்டிப்பார்த்தான். அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக்காயை ஒன்று சேர்த்ததும். பழையபடி அது முழுப் பூசணிக்காய் ஆனது. 

இது மந்திரப் பூசணிக்காய். நமக்கு உணவு வேண்டும் என்றால் பிளந்தால் உணவு கிடைக்கும் என்றான். இதேபோல், மீதமுள்ள 2 பூசணிக்காயையும் பிளந்து பார்த்தனர். அதில், ஒன்றில் அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகளும், மற்றொன்றில் பொற்காசுகளும் இருந்தன. 

அதன் பிறகு முனியன் குடும்பம் பெரும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தனர். இதனை அறிந்த பண்ணையார், உழவனிடம் முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல் என்று கேட்டார். 

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான். அதை கேட்ட அவர் வீட்டில் மேல் பகுதியில் குருவிக்கூடு ஒன்றை அவரே செய்தார். ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கி நான்கு குஞ்சுகள் பொறித்தது. பாம்பு வரவே இல்லை. அதனால் அவரே, அந்த குருவிக்கூட்டை கலைத்து மூன்று குஞ்சுகளை கொன்றார். ஒரு குருவியின் காலை உடைத்துக் கீழே எறிந்தார். 

பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்து வேளை தவறாமல் உணவு அளித்தார். கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது. அவர் குருவி விதை கொடுக்கும் என்று எதிர்பார்த்தபோது, கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ஒன்றை வீட்டின் பின்புறமும், இரண்டாவதை வீட்டின் முன்புறமும், மூன்றாவதைக் கிணற்றோரமும் நடு என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது. மூன்று தானியங்களையும் நட்டார். 

மறுநாளே மூன்று பெரிய பூசணிக்காய்கள் காய்த்து இருந்தன. மூன்று பூசணிக்காயையும் வெட்டினார். அதில் ஒன்றில் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் வீணாக்கியது. பின்பு இரண்டாவதில் இருந்து தீ வெளிப்பட்டு அவரையும் அந்த மாளிகையையும் ஒரு நொடிக்குள் சாம்பல் ஆக்கியது. மூன்றாவதில் பாம்பு, தேள், பூரான் போன்றவை இருந்தன. அதன்பிறகு, தனது பேராசை தவறு என உணர்ந்தார் பண்ணையார். 

நீதி :
பொறாமை குணம் இருத்தல் கூடாது.


இன்றைய செய்திகள் - 06.12.22

* சென்னை காலநிலை மாற்ற செயல் திட்டத்தின் இறுதி வரைவு அறிக்கை இரண்டு மாதங்களில் வெளியாகும் என்று சென்னை ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 8-ம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

* ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு, விவசாயிகள், அரசின் வேளாண் திட்டங்களில் கூடுதலாக 20 சதவீதம் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

* வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம்: அடுத்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது.

* பஞ்சாபில் வானில் பறக்க ஆசைப்பட்டு விமான மாடல்களை உருவாக்கி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் விவசாயி.

* உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு அதிபர் புதின் ஒப்புக் கொண்டால், ரஷ்ய பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது குறித்து மேற்கத்திய நாடுகள் பரிசீலிக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார்.

* உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி கால்இறுதிக்குள் நுழைந்தது.

* 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் ஷபாலி வர்மா.

Today's Headlines

* Chennai Smart City officials have said that the final draft report of the Chennai Climate Change Action Plan will be out in two months.

* Chennai Meteorological Department has issued a red alert warning in some places of Tamil Nadu on the 8th due to low-pressure areas.

*  Minister MRK. Panneerselvam has said that small farmers belonging to Adi Dravida and tribal classes can apply for an additional 20 percent subsidy in the government's agricultural schemes.

* Glass suspension bridge at Villivakkam Lake at a cost of Rs 8 crore: It will be commissioned in May next year.

* A farmer in Punjab who aspires to fly in the sky builds model airplanes and teaches technology to students.

* French President Emmanuel Macron has said the West should consider guaranteeing Russian security if President Putin agrees to talks to end the war in Ukraine.

* France entered the quarter-finals of the World Cup football tournament.

 *Women's Under-19 T20 World Cup: Shabali Verma to lead the Indian team
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி