12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் எவ்வளவு? கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2023

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் எவ்வளவு? கல்வித்துறை அறிவிப்பு

* சுயநிதி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு கிடையாது.

* மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை பெற்று வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் www.dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என உத்தரவு.


2022-23-ம் கல்வியாண்டுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13-ந்தேதி தொடங்க இருக்கிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுத இருக்கிறார்கள். இந்த தேர்வை எழுத இருக்கும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட வேண்டிய தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.


அதன்படி, செய்முறை கொண்ட பாடங்களை உள்ளடக்கிய பாடத் தொகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.225-ம், செய்முறை இல்லாத பாடங்களை உள்ளடக்கிய பாடத் தொகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம், மதிப்பெண் சான்றிதழ் கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ.175-ம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.


இந்த தேர்வு கட்டணங்களில் இருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் மாணவர்கள், கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேசாத மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி., எஸ்.சிஏ., எஸ்.எஸ்., எஸ்.டி., எம்.பி.சி. பிரிவை சேர்ந்த மாணவர்கள், அதேபோல், பி.சி., பி.சி.எம் பிரிவில் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவாக உள்ள மாணவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்திருக்கிறது.


சுயநிதி, மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு கிடையாது. மாணவர்களிடம் இருந்து தேர்வு கட்டணத்தை பெற்று வருகிற 20-ந்தேதி மாலை 5 மணிக்குள் www.dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி