தேர்வு ரத்தான 10ம் வகுப்புக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடையாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2023

தேர்வு ரத்தான 10ம் வகுப்புக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடையாது

 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு:


கொரோனா வைரஸ் பரவலால், 2020 - 21ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.


மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 9.30 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது.


இவ்வாறு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை திரும்ப பெற்று, ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் வழங்க வேண்டும்.


சி.பி.எஸ்.இ., மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.


தற்போது, ரயில்வே துறையில் 1.03 லட்சம் பணியிடங்களுக்கும், தபால் துறையில் 40 ஆயிரம் பணியிடங்களுக்கும், பெங்களூரு ரயில் 'வீல்' தொழிற்சாலையில் 4,103 பயிற்சியாளர் பணிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம்.


எனவே, கொரோனாவால் தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.


அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஏற்கனவே இதே பிரச்னை தொடர்பான வழக்கில், தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட முடியாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.


இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி