2022ல் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு பணி செய்த 400 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 3, 2023

2022ல் பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு பணி செய்த 400 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சி

 

கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீடு செய்த ஆசிரியர்களில் 400 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதால் இந்த ஆண்டு விடைத்தாள் மதிப்பீடு பணிக்கு ஆசிரியர்கள் வர தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 அரசு தேர்வு முடிந்து ஏப்.,10 முதல் விடைத்தாள் மதிப்பீடு பணி தொடங்க உள்ளது. இந்த பணி மே 4 வரை நீடிக்கும். மாநில அளவில் 79 விடைத்தாள் திருத்தும் மையங்களில் 25 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். விடைத்தாள் மதிப்பீடு பணியில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர், கூர்ந்தாய்வு அலுவலர், முதன்மை தேர்வாளர் என ஒரு மாணவரின் விடைத்தாளை 3 பேர் கூர்ந்தாய்வு செய்த பின்னரே மதிப்பெண் உறுதி செய்யப்படும். இந்த பணியில் முழுக்க முழுக்க அரசு, உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மதிப்பீடு பணிக்கு நியமிக்கலாம்.

ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி:


இந்நிலையில் கல்வித்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடந்த 2022 மே மாதம் விடைத்தாள் மதிப்பீடு பணியில் ஈடுபட்ட 400 ஆசிரியர்களுக்கு விளக்கம் (17 ஏ) கேட்டு 2023 பிப்ரவரியில் இருந்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.


இது அடுத்த மதிப்பீடு பணிக்கு தயாராகும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஏப்., 10 ல் துவங்க உள்ள விடைத்தாள் மதிப்பீடு பணிக்கு ஆசிரியர்கள் வர தயங்குவதாக தெரிவிக்கின்றனர்.


ஆசிரியர்களிடையே அச்ச உணர்வு:


தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் கூறியதாவது, 2022 மே மாதம் நடந்த விடைத்தாள் மதிப்பீடு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களில் 900 பேர் மீது புகார் எழுந்தது.


மாணவர்கள் மறு மதிப்பீடு செய்யும் போது விடைத்தாளில் மதிப்பெண் இருந்தும், முன்பக்க 'கோடிங்' சீட்டில் குறைவாக மதிப்பெண் போட்டிருந்தால், அந்த விடைத்தாள்களை பார்த்த ஆசிரியர்களுக்கு தான் நோட்டீஸ் வழங்குவர். அந்த வகையில் கடந்த ஆண்டே 500 பேரிடம் தேர்வுத்துறை இயக்குனரகம் நேரடி விசாரணை செய்து விட்டது. எஞ்சிய 400 பேருக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி