இரவு நேர பாடசாலை தமிழ்நாட்டிற்கு தேவையா? நடிகர் விஜய்க்கு அரசு பள்ளி ஆசிரியரின் பதிவு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2023

இரவு நேர பாடசாலை தமிழ்நாட்டிற்கு தேவையா? நடிகர் விஜய்க்கு அரசு பள்ளி ஆசிரியரின் பதிவு!!!

நடிகர் விஜய் அவர்களின் சமீபத்திய கல்வி சார்ந்த நற்செயலில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை நான் மனதார பாராட்டுகிறேன்.ஆனால் இரவு நேர பாடசாலை தமிழ்நாட்டிற்கு தேவையா? என்பது முதல் வினா? இது குறை கூறுவதற்கான பதிவல்ல .. என அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் தனது பதிவில் கூறியுள்ளார்.


அரசு பள்ளி ஆசிரியர் செல்வம் தனது பதிவில் கூறியுள்ளதாவது: "நடிகர் விஜய் அவர்களின் சமீபத்திய கல்வி சார்ந்த நற்செயலில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை நான் மனதார பாராட்டுகிறேன்.ஆனால் இரவு நேர பாடசாலை தமிழ்நாட்டிற்கு தேவையா? என்பது முதல் வினா.


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கவும்,மெல்ல மலரும் குழந்தைகளுக்கு அடிப்படை திறன்களை மேம்படுத்தவும் தமிழ்நாடுஅரசு இல்லம் தேடிகல்வி என்ற அமைப்பை ஏற்படுத்தி அதற்கு சிறப்பு பணி அலுவலராக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் அவர்களை நியமித்து 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பான இரவு நேர கற்பித்தல் நடைபெற்று வருகிறது.


ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தகுதியான ஆசிரியர்கள் பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமிக்கப்பட்டு அதனை அந்தந்த பள்ளி எமிஸ் இணையத்தில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.இது போல தமிழகம் முழுவதும் 2 லட்சம் தன்னார்வலர்கள் பணிபுரிகிறார்கள்.

மேலும் தன்னார்வலர் ஆசிரியர்களுக்கு ரூ.1000 மதிப்பூதியமும் வழங்கப்படுகிறது. அரசால் நியமிக்கப்படுவதால் இப்பணியில் நிரந்தரம் அல்லது அரசுப்பணியில் முன்னுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் (பலர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை உள்ளத்தோடும்)ஆர்வமாக பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஊரிலும் குடியிருப்புகளில் மாணவர்கள் கற்க ஏற்ற இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு 20 முதல் 30 மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் மாலை நேரத்தில் வழங்கப்படுகிறது. இதனை கண்காணிக்க வட்டாரம்,மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ,வட்டார வளமைய பயிற்றுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எமிஸ் இணையதளத்தில் மாலை நேர வருகை பதிவு ஏற்றப்பட்டு 100 சதவீதம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.மேலும் 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே மாலை நேர சிறப்பு வகுப்புகள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது.


இல்லம் தேடி கல்வி தன்னார்வல ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்,கற்பித்தல் துணைக்கருவிகள் வழங்கப்படுகின்றன.சிறப்பாக செயல்படும் தன்னார்வலர் ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது.எல்.கே.ஜி,யுகே.ஜியில் ஆசிரியர் நியமனத்தில் தன்னார்வல ஆசிரியர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது.


இதுதான் தமிழக பள்ளிகளில் கள நிலவரம்.எனவே இவ்வளவு திட்டமிடலுடன் நடைபெற்றுவரும் சிறப்பு வகுப்புகளுக்கு மத்தியில் இரவு நேர வகுப்புகள் எந்த அளவு வெற்றி அடையும் என்பது கேள்விக்குறியே...இது குறை கூறுவதற்கான பதிவல்ல .

நூறு சதவீதம் இத்துறையைப்பற்றி அறிந்தவன் என்ற முறையிலும் ஈடுபாட்டுடன் செயல்படும் ஊழியனாகவே கூறுகிறேன்.இன்று இன்னும் முக்கிய தேவையாக இருப்பது உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதலும் உதவிகளுமே.அகரம் அறக்கட்டளை நூறு சதவீதம் வெற்றிகரமாக செயல்பாட்டு வருகிறது.


அதே போல உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்விக்கான உதவி இன்றைய அவசியம்.மிகப்பெரிய ரசிகர் வளத்தை வைத்துள்ள நீங்கள் மாணவர்களின் உயர்கல்வி நற்பணிகளை நோக்கி நகர வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏 தங்கள் கல்விப்பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் actor vijay அண்ணா.


- ஆசிரியர் செல்வம்

5 comments:

  1. பேச வேண்டும் என்பதற்காக சகட்டுமேனிக்கு வார்த்தை ஜாலத்தில் அள்ளி வீசுகிறீர்கள் இல்லாம் தேடி கல்வி என்பது எந்த அளவுக்கு சிறப்பாக நடைபெறுகிறது என்பது ஊர் அறிந்த விஷயம். அவர் அவர் விரும்பிய பணியை செய்ய விரும்புகிறார் அதில் குறை கூறுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. எவ்வாறு இல்லாம் தேடி கல்வி சிறப்பாக செயல்படுகிறது என்று நினைக்கிறீர்களோ. அவ்வாறு அவரது பணியும் சிறப்பாக நடைபெறும் என கருத்தில் கொள்வோம். அவரது பணி தமிழகத்தில் ஏதேனும் ஒரு மாணவன் ஆவது பயன்பெறும் ஆகவே தங்களது பணியை நீங்கள் தொடருங்கள் அவரது பணி அவர் தொடரட்டும்.

    ReplyDelete
  2. தலைமை ஆசிரியர் இல்லை உதவி ஆசிரியர் இல்லை பல வகுப்புகளுக்கு ஓர் ஆசிரியர் பல பாடங்களுக்கு ஓர் ஆசிரியர் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கற்பித்தல் முறைகள் கற்றல் முறைகள் இணைய வசதி இல்லாத இடத்தில் போதிய சிக்னல் இல்லாத இடத்தில் எமிஸ் பணிகள் ஆசிரியர்கள் தேர்வு முறை பணி நியமன முறைகளில் குளறுபடிகள்

    ஒட்டுமொத்த கல்வியும் கற்பித்தலும் கற்றலும் சீரழிந்து விட்டது


    ஆசிரியர்களும் சங்கங்களும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கின்றனர்


    நம் கண் முன்னே குழந்தைகளின் கல்வியும் உரிமையும் பறிக்கப்படுவது தெரியவில்லையா????

    ReplyDelete
  3. ஒவ்வொரு நாளும் கல்வித்துறை மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாடுகளும் தலைமை ஆசிரியர்களை விழி பிதுங்கி நிற்கச் செய்கிறது மன உளைச்சலுக்கு ஆளாகச் செய்கிறது!!!!

    ReplyDelete
  4. சில வருடங்களில் தற்காலிக தலைமை ஆசிரியர் பதவி இடம் ஒன்று உருவாகினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை...


    ReplyDelete
  5. இல்லம் தேடி கல்வி எங்கடா சிறப்பாக செயல்படுகிறது....????!
    1. மாணவர்கள் ஒழுங்காக செல்வதே கிடையாது.
    2.அப்படியே சென்றாலும் தன்னார்வர்களின் வீட்டு வேலை செய்வதும் அவர்களின் குழந்தைகளை தூக்கி வைத்து கொள்வதுமே நிகழ்கிறது.
    3.தன்னார்வலர்களுக்கே சரிவர படிக்கவும் எழுதவும் தெரியவில்லை.
    4.தொடக்க பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதே கிடையாது...
    எந்நேரம் பார்த்தாலும் கைப்பேசியை கையிலே வைத்து கொண்டு அதில் வரும் குறுச்செய்திகளுக்கு பதில் அளிப்பதிலேயே நாட்கள் செல்கிறது....
    5.தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் சம்பளம் விழலுக்கு இறைத்த நீர் போன்றது தான்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி