பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2024

பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்க நடவடிக்கை

 

கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால், அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.


கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 26 உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், நடப்பு கல்வியாண்டில் 10-ம் வகுப்பில் 2,100 மாணவ, மாணவிகளும், பிளஸ் 1 வகுப்பில் 1,700 மாணவ, மாணவிகளும், பிளஸ் 2 வகுப்பில் 1,600 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 5,400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான பொதுத் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளன. பொதுத் தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற, மேற்கண்ட 3 வகுப்புகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இம்மாதத்தில் ( பிப்ரவரி ) இருந்து சிறப்பு வகுப்புகள் மாநகராட்சி நிர்வாகத்தின் வரும் சார்பில் நடத்தப்பட உள்ளன.


பொதுவாக, இச்சிறப்பு வகுப்புகள் மாலை பள்ளி முடிந்த பின்னர் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும் மேற்கண்ட மூன்று வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பசி ஏற்படக் கூடாது, பசி ஏற்படுவதால் படிப்பின் மீது இருந்து கவனம் சிதறி விடக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம், கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு வகுப்புகள் நடக்கும் சமயத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி, நடப்பாண்டுக்கான சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.


இது குறித்து கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன் கூறும்போது, ‘‘கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும் வகையில், முக்கிய வினாக்கள் குறித்த வினா வங்கி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பொதுத்தேர்வு நெருங்குவதைத் தொடர்ந்து இவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.


மாணவ, மாணவிகளுக்கு பசி ஏற்படாமல் இருக்க மாலை நேர சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட உள்ளது. சிறு தானிய வகைகள், சுண்டல், பச்சை பயிறு போன்ற உடலுக்கு சத்து அளிக்கக் கூடிய சிற்றுண்டி உணவுகள், திரவ வகைகள் வழங்கப்படும். பொதுத் தேர்வு நடக்கும் வரை, தினசரி நடத்தப்படும் மாலை நேர சிறப்பு வகுப்புகளின் போது இந்த சிற்றுண்டி வழங்கப்படும்,’’ என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி