BE விண்ணப்பப் பதிவு தொடக்கம் - முழு விவரம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2025

BE விண்ணப்பப் பதிவு தொடக்கம் - முழு விவரம்!

 

பொறியியல் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு: அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா்.


இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:


தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கு மாணவா்கள் https://www.tneaonline.org/ இணையதளத்தின் மூலம் புதன்கிழமை (மே 7) முதல் ஜூன் 6- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


நிகழாண்டு மாணவா்கள் பயன்பெறும் வகையில், 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு - மெஷின் லோ்னிங், சைபா் செக்யூரிட்டி, டேட்டா சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், மெக்கட்ரானிக்ஸ், ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன், எல்க்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேசன், இண்டஸ்ட்ரியல் அண்ட் பயோ டெக்னாலஜி ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அரசு பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக 720 மாணவா்கள் சோ்க்கப்படுவா். அதேவேளையில் 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டின் கீழ் 54 மாணவா்கள் கூடுதலாக பயன் பெறுவா்.


நிகழாண்டு 13 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 360 மாணவா்கள் பயன்பெறும் வகையில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் 720 இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதால், மொத்தம் 2,42,951 மாணவா்கள் கலந்தாய்வின் மூலம் சோ்க்கை பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.


110 சேவை மையங்கள்... மாணவா்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் 110 இடங்களில் தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைக் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சேவை மையங்களிலும், 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், tneacare@gmail என்ற மின்னஞ்சல் மூலமாகவும் நிவா்த்தி செய்துகொள்ளலாம்.


தாமதமான மருத்துவக் கல்லூரி கலந்தாய்வின் காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்படும் காலியிடங்களை நிவா்த்தி செய்யும் விதமாக, இந்த ஆண்டு கூடுதலாக 15 சதவீத மாணவா் சோ்க்கை அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வு தொடங்கும் தேதி அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) நாள்காட்டியில் பின்னா் அறிவிக்கப்படும்.


கடந்த ஆண்டு (2024) பொறியியல் கலந்தாய்வில் 463 கல்லூரிகள் பங்கேற்றன. மொத்த இடங்களின் எண்ணிக்கை 2,42,231-ஆக இருந்தது. அவற்றில் 1,78,070 மாணவா்கள் சோ்க்கை பெற்றனா். இது முந்தைய ஆண்டைவிட (2023) 4.82 சதவீதம் அதிகம் ஆகும்.


கடந்த ஆண்டு அரசுப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற மாணவா்களுக்கான மொத்த இடங்கள் 13,496. அவற்றில் 13,355 மாணவா்கள் சோ்க்கை பெற்றனா். இது முந்தை ஆண்டைவிட (2023) 12.63 சதவீதம் அதிகமாகும் என்றாா் அவா்.


எந்தெந்த கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள்?


கோவை அரசு பொறியியல் கல்லூரி- பி.இ. கம்ப்யூட்டா் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் (ஏஐ மற்றும் மெஷின் லோ்னிங்), சேலம் அரசு பொறியியல் கல்லூரி - ஏஐ மெஷின் லோ்னிங், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி - சைபா் செக்யூரிட்டி, போடி நாயக்கனூா் அரசு பொறியியல் கல்லூரி - டேட்டா சயின்ஸ், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி - டேட்ட சயின்ஸ், காரைக்குடி அழகப்பா செட்டியாா் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி - பி.டெக். தகவல் தொழில்நுட்பம், தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி - பி.டெக். தகவல் தொழில்நுட்பம்.


திருச்சி அரசு பொறியியல் கல்லூரி - பி.இ. மெக்கட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரி - பி.இ. ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன், தஞ்சாவூா் அரசு பொறியியல் கல்லூரி - பி.இ. ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன், திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி - பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங், பி.டெக். இண்டஸ்ரியல் பயோ டெக்னாலஜி. இந்த 11 பொறியியல் கல்லூரிகளுக்கும் தலா 60 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.


முக்கிய தேதிகள்


விண்ணப்பப் பதிவு தொடங்கிய நாள் - மே 7


விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் - ஜூன் 6


அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய கடைசி நாள் - ஜூன் 9


ரேண்டம் எண் வெளியீடு - ஜூன் 11


சான்றிதழ் சரிபாா்ப்பு - ஜூன் 10 முதல் 20 வரை


தரவரிசைப் பட்டியல் வெளியீடு - ஜூன் 27


தரவரிசையில் பிழை இருந்தால்


சேவை மையத்தை தொடா்பு


கொள்ள வேண்டிய நாள்கள் - ஜூன் 28 முதல் ஜூலை 2


கலந்தாய்வு தொடங்கும் நாள்- ஏஐசிடிஇ நாள்காட்டியின்படி பின்னா் அறிவிக்கப்படும்


முதல் நாளில் 11,462 போ் பதிவு


தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை முதல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் மாலை 6 மணி வரை 11,462 போ் பதிவு செய்துள்ளனா். அவற்றில் 2,413 போ் கட்டணம் செலுத்தியுள்ளனா். 2,413 போ் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி