திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பெரம்பலூர், ஸ்ரீரங்கம், லால்குடி, அறந்தாங்கி, ஒரத்தநாடு, நன்னிலம், வேப்பூர் உட்பட 10 இடங்களில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வந்தன.
இந்த கல்லூரிகள் 2019-ம் ஆண்டு அரசு கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இதில் பணியாற்றிய 91 கவுரவ விரிவுரையாளர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் 25 பேர் என மொத்தம் 116 பேருக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், வாழ்வாதாரத்துக்கே வழியில்லாமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பெரம்பலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் எம்.வினோத் `இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 2006-ம் ஆண்டு தனது ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களில் பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உறுப்புக் கல்லூரிகளை தொடங்கியது.
இந்த கல்லூரிகளை 2019-ம் ஆண்டு அரசாணை எண் 36-ன் படி அரசு கல்லூரிகளாக அறிவித்து உயர் கல்வித் துறை எடுத்துக்கொண்டது. இதில் சில கல்லூரிகளில் நடத்தப்படும் சில பாடப்பிரிவுகள் அரசாணையில் விடுபட்டுவிட்டது. இதனால், அரசாணையில் விடுபட்ட பாடப்பிரிவுகளில் பணியாற்றி வந்த 10 கல்லூரிகளைச் சேர்ந்த 91 கவுரவ விரிவுரையாளர்கள், 25 ஆசிரியரல்லாத பணியாளர்கள் என மொத்தம் 116 பேருக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
மாணவர்கள் நலன் கருதி விடுபட்ட பாடபிரிவுகளை தொடர்ந்து நடத்துங்கள். ஊதியம் கிடைக்க உயர் கல்வித் துறை அரசாணை பிறப்பித்து நடவடிக்கை எடுக்கும் என துறை உயர் அதிகாரிகள் அளித்த உறுதிமொழியையடுத்து, கல்லூரிகளில் விடுபட்ட பாடப்பிரிவுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், 6 ஆண்டுகளாகியும் விடுபட்ட பாடப்பிரிவுகளுக்கு உயர் கல்வித் துறை அரசாணை எதுவும் பிறப்பிக்காததால், இந்த பாடப்பிரிவுகளை நடத்தி வந்த கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியம் பெறுவதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறோம்.
உயர் கல்வித்துறை விடுபட்ட பாடப்பிரிவுகளை சேர்த்து ஒரு அரசாணை வெளியிட்டால் எங்களுக்கு இதர கவுரவ விரிவுரையாளர்களைப்போல, கருவூலம் மூலம் அரசு ஊதியம் வழங்கிவிடும். ஆனால், அவ்வாறு அரசாணை பிறப்பிக்காமல் எங்களுக்கு பல்கலைக்கழகத்தை ஊதியம் வழங்கச் சொல்லி அரசு சுற்றறிக்கை அனுப்புகிறது. ஆனால், அரசு எடுத்துக் கொண்ட கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர்களுக்கு நாங்கள் எதற்கு ஊதியம் வழங்க வேண்டும் என, பல்கலைக்கழக நிர்வாகம் ஊதியம் வழங்க மறுக்கிறது.
2024 மார்ச் மாதத்துக்குப் பிறகு ஓராண்டுக்கு மேலாகியும் எங்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய ரூ.25,000 தொகுப்பூதியத்தையும் இதுவரை வழங்கவில்லை. இதனால் கவுரவ விரிவுரையாளர்களான நாங்கள், அன்றாட வாழ்க்கையை கவுரவமாக நடத்த முடியாமல் தவிக்கிறோம்.
துணைவேந்தர் நியமிக்கப்படாத பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு இப்போது உயர் கல்வித்துறை இயக்குநர்தான் துணைவேந்தர். அவர் மனது வைத்தால் எங்களுக்கு ஊதியம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண முடியும் என்றார்.
பாரதிதாசன் பல்கலை வட்டாரத்தில் கூறியது; 10 உறுப்புக் கல்லூரிகளை அரசு எடுத்துக்கொண்ட பிறகு மாணவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம், தேர்வுக்கட்டணம் உள்பட அனைத்துவிதமான கட்டணங்களையும் அரசே பெற்றுக்கொள்கிறது. எனினும், விடுபட்ட பாடப்பிரிவுகளுக்கான ஊதியத்தை 6 ஆண்டுகளாக பல்கலைக்கழகமே கொடுத்து வருகிறது. ஆனால், நிதி நெருக்கடியில் பல்கலை. இருப்பதால், அரசு கல்லூரி விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க சிண்டிகேட் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது.’ என்றனர்.
தமிழக முதல்வர் நிகழாண்டில் புதிதாக 11 அரசுக் கல்லூரிகளை தொடங்கி, 99 பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமித்திருக்கிறார். அவர், திருச்சி பாரதிதாசன் பல்கலை. ஆளுகைக்கு உட்பட்ட அரசு கல்லூரிகளில் பணிபுரியும் விடுபட்ட பாடப் பிரிவுகளின் கவுரவ விரிவுரையாளர்களின் விவகாரத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Accepting a temporary position in a government institution often turns out to be a mistake. Throughout the year, regular government faculty rarely show respect to temporary staff, treating them as outsiders. To make matters worse, the government consistently delays salary payments. In many ways, by accepting such roles, we unintentionally become part of the system that discourages permanent recruitment and sustains this cycle of exploitation
ReplyDelete