தமிழகத்தில் குரூப் 1, 1 ஏ முதல்​நிலை தேர்வை 1.86 லட்​சம் பேர் எழு​தினர்: டிஎன்​பிஎஸ்சி தலை​வர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2025

தமிழகத்தில் குரூப் 1, 1 ஏ முதல்​நிலை தேர்வை 1.86 லட்​சம் பேர் எழு​தினர்: டிஎன்​பிஎஸ்சி தலை​வர் தகவல்

 

குரூப்-4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மற்றும் 1-ஏ முதல்நிலை தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குரூப்-1 தேர்வில் எளிமைப்படுத்தப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள் வழங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் 2 மாதத்துக்குள் வெளியிடப்படும். தொடர்ந்து, 3 மாதங்களில் முதன்மை தேர்வு நடைபெறும்.


டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் சரியான முறையில் திட்டமிடப்பட்டு சிறப்பாக நடத்தப்படுகின்றன. முன்பெல்லாம் 90 தேர்வுகள் வரை நடைபெறும். தற்போது அனைத்தையும் ஒருங்கிணைத்து 7 தேர்வுகள்தான் நடத்தப்படுகின்றன. இதன்மூலம், மாணவர்கள் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம். தேர்வு நடத்துவதற்கான நேரம், செலவு உள்ளிட்டவையும் குறைந்துள்ளது.


தேர்வை எளிதாக எதிர்கொள்ள, ஒவ்வொரு பாடத் திட்டத்தையும் 10 பகுதிகளாக பிரிக்கிறோம். அனைத்து காலி பணியிடங்கள் வரும் வரை காத்திருக்காமல், தொடக்கத்தில் உள்ள காலி இடங்களை உத்தேசமாக வைத்து தேர்வு நடத்தப்படுகிறது. பின்னர் காலி பணியிடம் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படுகிறது. குரூப்-4 தேர்வுக்கு காலி பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்த 2024-ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 10,701 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டில் ஜனவரி முதல் இதுவரை 10,227 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டு இறுதிக்குள் மேலும் 12,231 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி