பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்று முடிகிறது: சான்றிதழ்களை ஜூன் 9 வரை பதிவேற்றலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2025

பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்று முடிகிறது: சான்றிதழ்களை ஜூன் 9 வரை பதிவேற்றலாம்

 

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் (ஜூன் 6) முடிவடைகிறது. இதுவரை 2.95 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் சான்றிதழ்களை ஜூன் 9-ம் தேதி வரை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.


இந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 2500 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்தனர்.


தினமும் சராசரியாக 20 ஆயிரம் பேர், 30 ஆயிரம் பேர் என்ற அளவில் விண்ணப்பங்கள் பதிவாகி வந்தன. 6-வது நாளில் மொத்த விண்ணப்பப் பதிவு ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், 14-வது நாளில் 2 லட்சத்தைத் தாண்டியது.


இந்நிலையில், 30-வது நாளான நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, பொறியியல் படிப்புக்கு மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 134 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அவர்களில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 5 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்துவிட்டதாகவும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.


தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் இன்றுடன் (ஜூன் 6) முடிவடைகிறது. கடைசி தேதிக்குள் விண்ணப்பித்த மாணவர்கள் வருகிற 9-ம் தேதிவரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.


இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு ஜூன் 11-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். ஜூன் 20-ம் தேதிவரை அவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைனில் சரிபார்க்கப்படும். இப்பணி முடிந்து ஜூன் 27-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும். பின்னர் கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி