தமிழகத்தில் புதிய டிராக்டர் வாங்குவோர் ரூ.42 ஆயிரம் வரை சேமிக்கலாம் எனவும் ரூ.40 ஆயிரத்துக்கு டிவி வாங்குவோர் ரூ.4 ஆயிரம் வரை சேமிக்கலாம் என்றும் ஜிஎஸ்டி 2.0 சீர்த்திருத்தம் தெரிவிக்கிறது. இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்பது வரும் 22-ம் தேதி அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை குறைய இருக்கின்றன. இதையொட்டி தமிழகத்தின் வளர்ச்சிக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 புத்தகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் நேற்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறும்போது, நீண்ட நாள் கோரிக்கையான ஜிஎஸ்டி குறைப்பு என்பது ஒவ்வொரு குடிமகனின் வெற்றியாகும். தீபாவளிக்கு முன்பு இதை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் விரும்பினார். ஆனால் நவராத்திரிக்கு முன்பே வரிகுறைப்பு அமலாகும் என்றார். ஜிஎஸ்டி 2.0 புத்தகத்தில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி வரிகுறைப்பில் டிராக்டர்களுக்கான ஜிஎஸ்டி என்பது 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள புதிய டிராக்டருக்கு ரூ.42 ஆயிரம் வரை சேமிக்க முடியும். டிராக்டர் டயர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள டிராக்டர் டயர்களின் விலையில் ரூ.6,500 குறைந்துள்ளது. காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி துணிகளுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தஞ்சாவூர் பொம்மைகள், காஞ்சிபுரம் கைவினை பைகள், பவானி ஜமக்காளம், சுவாமிமலை வெண்கல சின்னங்கள், மணப்பாறை முறுக்கு, தென்னை நார் பொருட்கள் ஆகியவற்றுக்கும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ரூ.1 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரையும், ரூ.6 லட்சம் மதிப்பிலான சிறிய ரக கார்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையும், ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆட்டோக்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பரோட்டா, ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவு பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவு குறையும் என்றும் எதிர்பார்க்கலாம். தமிழக பள்ளிகளில் பயின்று வரும் 1.5 கோடி குழந்தைகள் பயனடையும் வகையில் குறிப்பேடுகள், ரப்பர், பென்சில், கிரெயான்ஸ் போன்றவற்றில் ரூ.850 வரை பெற்றோரால் இனி சேமிக்க முடியும். அதேபோல் ரூ.1,000 மதிப்பிலான மருந்துகளுக்கு ரூ.100 வரை ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புற்றுநோய்களுக்கான மருந்துகளுக்கு ரூ.1200 வரை விலை குறைகிறது. கட்டுமானத் தொழில்களில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சிமென்ட் கொள்முதலில் ரூ.5 ஆயிரம் வரை சேமிக்கலாம்.
தமிழகத்தில் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு இது நேரடியாக பயனளிக்கும். குறிப்பாக ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தொலைக்காட்சி பெட்டிகளுக்கு ரூ.4 ஆயிரம் வரையும், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான ஏசி-களுக்கு ரூ.3,500 வரையும் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஹீட்டருக்கு ரூ.7 ஆயிரம் வரையிலும் விலை குறையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி