School Morning Prayer Activities - 24.09.2025 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2025

School Morning Prayer Activities - 24.09.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2025

திருக்குறள் 

குறள் 512: 


வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை 

ஆராய்வான் செய்க வினை. 


விளக்க உரை: 


பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளைஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்ய வேண்டும்.


பழமொழி :

The more you give, the more you gain. 


நீங்கள் அதிகம் கொடுத்தால், அதிகம் பெறுவீர்கள்.


இரண்டொழுக்க பண்புகள் :


1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.


2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.


பொன்மொழி :


தன்னை உயர்ந்தவனாகவும் மற்றொரு மனிதனை தாழ்ந்தவனாகவும் கருதுபவன் மனநோயாளி - அண்ணல் அம்பேத்கர்


பொது அறிவு : 


01 பழங்காலத்தில் "சேரன் தீவு" என்று அழைக்கப்பட்ட நாடு எது?


இலங்கை-Sri Lanka


02. உலக தாய்மொழி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?


பிப்ரவரி 21- February 21


English words :


Take down –remove something, write down the spoken words, ஒரு பொருளை அகற்றுதல், சொல்லுவதை எழுதுதல்


Grammar Tips: 


Prepositions


In - should come before 


* Times of the day - e.g : in Morning

* Months - e.g : in January

* Years - e.g : in 2004

* Seasons - e.g : In Summer


அறிவியல் களஞ்சியம் :


 பூமியை விட்டு விலகும் நிலவு


ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்ற அளவில் நிலவு, பூமியை விட்டு விலகி செல்கிறது. இதனால் பூமி சுற்றும் வேகமும் குறைகிறது. இதனால் ஒரு நாளுக்கான நேரம் 25 மணியாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆண்டுதோறும் நிலவு நகர்வதால் 7 கோடி ஆண்டுக்கு முன் ஒரு நாளுக்கு 23.5 மணி நேரமாக இருந்தது. ஆனால் இதுகுறித்து நாம் கவலைப்பட தேவையில்லை. ஆண்டுக்கு 3.8 செ.மீ., என்பது பூமி - நிலவு இடையிலான 3.84 லட்சம் கி.மீ., துாரத்தில் வெறும் 0.00000001 சதவீதம் தான். எனவே இது நடக்க லட்சக்கணக்கான ஆண்டுகளாகும் என தெரிவித்துள்ளனர்.


செப்டம்பர் 24


2014 – மங்கள்யான் விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் வெற்றிகரமாக செவ்வாய் சுற்றுவட்டத்தில் செலுத்தப்பட்டது.


நீதிக்கதை


 புள்ளிமான்கள்


ஒரு காட்டில் இரண்டு புள்ளி மான்கள் ஒரே மாதிரியாக இருந்தன. இணைப்பிரியாத நண்பர்களாக இருந்தன. எங்கு சென்றாலும் சேர்ந்தேதான் செல்லும். ஒரு நாள் மழை பெய்தது. மான்களால் விளையாட முடியவில்லை. மழை நின்ற பிறகு வெளியே சென்று இன்னும் மழை வருமா என்று இரண்டு மான்களும் மேலே பார்த்தன. அப்போது மேகத்திற்குள்ளிருந்து வெளியே வந்தது சூரியன். மான்கள் இரண்டும் சூரியனிடம், இன்னும் மழை வருமா? என்று கேட்டன. அதற்கு சூரியன், நான் வந்து விட்டேனே, இனி எப்படி மழை வரும்? என்று சொல்லி மான்களைப் பார்த்து சிரித்தது.


எங்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் என்றது ஒரு மான். நீங்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள்! அது தான் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது! தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் யார்? நாங்கள் தான் அழகான இரண்டு புள்ளிமான்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றன புள்ளிமான்கள்.


சரி, உங்களில் யார் திறமையானவர்கள்? என்று கேட்டது சூரியன். நாங்கள் இருவருமே திறமையானவர்கள் தான்! என்றது புள்ளிமான்கள். சூரியன் சற்று யோசித்துவிட்டு சரி, அப்படியென்றால் நான் ஒரு போட்டி வைக்கிறேன். அதோ அங்கு ஒரு மரம் இருக்கிறது பாருங்கள். உங்களில் அந்த மரத்தை யார் முதலில் தொடுகிறார்களோ அவர்கள் தான் திறமையானவர்கள். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நான் ஒரு பரிசு தருவேன் என்றது.


சூரியன் பரிசு தருவதாகச் சொன்னதும் இரண்டு மான்களும் ஓடத்தொடங்கின. ஆனால் மரத்தைத் தொடாமல் நின்று கொண்டிருந்தன. சூரியன் ஏன் மரத்தைத் தொடாமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டது. ஒரு புள்ளி மான் சொன்னது, நான் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்றது. இன்னொரு புள்ளிமானும், நானும் என் நண்பனுக்கு விட்டுக்கொடுத்து விட்டேன் என்று சொன்னது.


இதைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சூரியன் சொன்னது, அழகான இரண்டு புள்ளி மான்களே! உங்கள் ஒற்றுமையைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நான் ஒரு வானவில்லை பரிசாகத் தருகிறேன். நீங்கள் எப்போது விரும்புகிறீர்களோ அப்போதெல்லாம் வானவில்லே வருக என்று சொன்னால் போதும். வானத்தில் அழகான வானவில் தோன்றும். நீங்கள் அதைப்பார்த்து ரசிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூரியன் விடை பெற்றது. மான்கள் இரண்டும் மகிழ்ந்தன. அவற்றிற்கு விருப்பமான நேரத்தில் வானவில்லை வரச்செய்து பார்த்துப் பார்த்து ரசிக்கும்.


நீதி :

நண்பர்களே விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.


இன்றைய செய்திகள் - 24.09.2025


⭐பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார்: பள்ளிக்கல்வி இயக்குனர்.


⭐தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவித்து மக்கள் நியாயமாக பயன் அடைய விடுங்கள்-மு.க.ஸ்டாலின்.


⭐ அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை. எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.


🏀 விளையாட்டுச் செய்திகள்


🏀 இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான கடைசி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.


Today's Headlines


⭐Director of our  School Education said the second semester textbook will ready for school students 


⭐M.K. Stalin requested  the central government to release the funds which is due for Tamil Nadu and let the people benefit fairly


⭐ Americans get priority in US job opportunities. This comes as a shock to Indians who are the largest recipients of H-1B visas. 


 SPORTS NEWS

🏀 In the last match between India and Australia women's teams, the Australian team won the 3-match ODI cricket series 2-1 and won the trophy.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி