பணி நிரந்தரம் இப்படிதான் இருக்கவேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் திட்டவட்டம்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2025

பணி நிரந்தரம் இப்படிதான் இருக்கவேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் திட்டவட்டம்:

அடிப்படை சம்பளம் அகவிலைப்படி அரசு சலுகைகளோடு காலமுறை சம்பளம் நிர்ணயித்து வழங்க வேண்டும்: 


இதை சட்டசபை தொடரில் அறிவிக்க வேண்டும்:


தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தல்:


திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி முதல்வர் ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


கடந்த காலங்களில் தற்காலிகமாகவும் தொகுப்பூதியத்திலும் பகுதிநேரமாகவும் பணிபுரிந்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் பின்னர் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டதைப் போலவே, 2012 ஆம் ஆண்டில் அதே பாடங்களில் நியமித்து பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் அனைவரையும் காலமுறை சம்பளத்தில் பணியமர்த்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


அதுபோல பகுதிநேர பணியாளர்களாக தற்காலிகமாகவும், தொகுப்பூதியத்திலும், தினக்கூலி அடிப்படையிலும் அரசின் பல்வேறு துறைகளிலும் பணிபுரிந்த துப்புரவு பணியாளர்கள், மணியகாரர், தலையாரி, எழுத்தர், நூலகர் என பலர் பின்னர் காலமுறை சம்பளத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட வரலாறு தமிழ்நாட்டில் உள்ளது.


இன்னொரு பக்கம் சிறப்பாசிரியர்களாக பணிபுரியும் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, கணினி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற காலமுறை சம்பளத்தில் மேற்கண்ட இதே பாடங்களில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி அமர்த்த வேண்டும்.


சமவேலை, சமஊதியம் என்ற விதிப்படி ஒரே கல்வித்தகுதி உடைய ஒரே பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை ஒரே மாதிரியான சம்பளத்தில் பணி அமர்த்த வேண்டும்.


ஆனால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக 10 ஆயிரம் ரூபாய் சம்பளமாகவும், மேலும் 2,500 ரூபாய் உதவித்தொகையாகவும் என இரண்டு முறையில் தனித்தனியாக இந்த பணம் வழங்கப்படுகிறது.


மொத்தமாக 12,500 ரூபாய் சம்பளமாக வழங்கக்கேட்டும் இதுவரை வழங்க வில்லை.


இதனால் ஒவ்வொரு முறையும் சம்பளம் தாமதம் ஆகிறது.


எனவே, ஆசிரியர்களுக்கு சம்பளம் IFHRMS முறையில் வழங்குவதுடன் இணைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். 


பணிப்பதிவேடு பராமரிக்க வேண்டும்.


2012 ஆம் ஆண்டு முதல் 14ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணி செய்கின்ற போதும் அரசின் சலுகைகள், பணப்பலன்கள் இதுவரை கிடைக்க வில்லை.


மேலும் மே மாதம் சம்பளம், போனஸ், பண்டிகை கடன் போன்றவை ஒருமுறைகூட வழங்கவில்லை.


அதுபோல மரணம் அடைந்த ஆசிரியர் குடும்பத்திற்கு நிவாரணம், வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு, பணிக்கொடை போன்றவையும் வழங்கவில்லை.


இதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாயை வைத்து கொண்டு இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்த முடியவில்லை.


இதனால் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள 12ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.


ஏழாவது ஊதியக்குழுவில் பகுதிநேர தொகுப்பூதியத்தில் உள்ளவர்களுக்கும் 30 சதவீதம் சம்பள உயர்வு உண்டு என குறிப்பிட்டு இருந்தாலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கிடைக்க வில்லை.


எட்டாவது ஊதியக்குழுவே அமுல் செய்ய உள்ள நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இன்னும் அடிப்படை சம்பளத்துடன் கூடிய அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வில்லை.


எனவே தொகுப்பூதிய முறையை கைவிட்டு இனிமேல் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி என காலமுறை சம்பளம் நிர்ணயித்து வழங்க வேண்டும்.


அப்படி செய்தால்தான் இனி அகவிலைப்படி உயர்த்தும்போது சம்பளம் உயரும். அதனுடன் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் அனைத்து சலுகைகள், பணப்பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும்.


இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு வழங்குகின்ற Pay Band Level 10 ன்படி ரூபாய் 20,600 என்ற அடிப்படை சம்பளத்தையே, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முறைப்படுத்தி வழங்க வேண்டும்.


பணிப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இதை தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செய்ய வேண்டும்.


பல லட்சம் மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காகவும், ஆசிரியர்களின் 14ஆண்டு பணி அனுபவத்தையும் கருத்தில் கொண்டும், 12ஆயிரம் பேர் குடும்ப நலன், எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இதை கல்வி சேவையாக செய்ய வேண்டும்.


பணி நிரந்தரம் செய்வதாக திமுக தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்து இருப்பதால் அதற்கு அரசாணை வெளியிட வேண்டும்.


இதற்காக வருகின்ற சட்டசபை கூட்டத் தொடரில் அரசு கொள்கை முடிவு என பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து சிறப்பாசிரியர்களாக பணியமர்த்த வேண்டும்.


எதிர்கட்சியாக திமுக இருந்தபோது வைத்து இந்த கோரிக்கையை சட்டசபையில் இப்போது திமுக ஆட்சியில் மற்ற அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைக்கிறது.


2021 சட்டசபை தேர்தலில் திமுக கொடுத்த

பணி நிரந்தரம் வாக்குறுதியை இந்த சட்டசபை ஆட்சி காலத்திலேயே நிறைவேற்றி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதுதான் முதல்வர் ஸ்டாலினுக்கு பெருமை சேர்க்கும். இல்லை என்றால் குறையாக குற்றச்சாட்டாக மாறும்.


திமுக தேர்தல் வாக்குறுதி 181ன்படி பணி நிரந்தரம் நிறைவேற்ற கோரிக்கை நேரிலும் ஈமெயிலிலும் தபாலிலும் கொடுத்து வலியுறுத்தி வருகின்றோம். பல போராட்டங்களும் நடத்தி வலியுறுத்தப்பட்டுள்ளது.


ஆனாலும் 53 மாதங்கள் முடிந்த பின்னரும் பணி நிரந்தரம் செய்ய வில்லை.ஆட்சி இன்னும் ஏழு மாதங்கள் தான் உள்ளது. அதிலும் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டால் அரசாணை பிறப்பிக்க இயலாது. எனவே போர்க்கால அடிப்படையில் அமைச்சரவை முடிவாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


--

எஸ்.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல்: 9487257203

4 comments:

  1. எந்த அடிப்படையில் பணியில் சேர்ந்திங்க? தேர்வு மூல்மாகவா? இல்லை வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு மூப்பு அடிப்படையிலா? சேரும்போது சம்பளத்திற்கு மூன்று அரை நாள் வேலை நிரந்திரம் கேட்க மாட்டோம் என்று அரசிடம் தெரிவித்து கையொப்பம் இட்டு தானே வேளைக்கு சேர்ந்திங்க? வெறும் நேர்காணல் வைத்து நிரப்பப்பட்ட பணியிடம் அனைத்தும் அதிமுக ஆட்சியில். அதில் பணம் விளையாடியதாகவும் , சிபாரிசு நடந்ததாகுவும் பத்திரிகை செய்தி , இப்படி இருக்கையில் பலருக்கு அந்த வேலை கூட மறுக்கப்பட்டது தவறான தேர்வு முறையினால். ஆகவே சம்பள உயர்வு மற்றும் முழு நேர பனி மட்டுமே நியாயம். மற்றும் அனைத்து பள்ளிகளிலும் பகுதி நேர ஆசிரியர்கள் புதிதாக நியமிக்க தீர்மானம் தேவை. தமிழக கல்வித்துறை மற்றும் கல்வி அமைச்சர் அவர்கள் நல்ல முடிவை வழங்க பொதுமக்கள் வேண்டுகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Tet passed 2013 teachers waiting for job,, no response till date

      Delete
    2. அதி புத்திசாலி தனமாக பேசுவதாக நினைப்பு 2011- 2012 ஆகிய ஆண்டுகளில் சிறப்பாசியர்கள் எந்த முறையில் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை தெளிவாக கூறவும் டெட் எப்பொழுது சிறப்பாசிரியர்களுக்கு நடந்தது என்பதையும் கூறுங்கள் ஒப்பந்த பணி எனில் 5 ஆண்டில் ஏன் ஒப்பந்ததை முடித்து விட்டு வேறு பணியாளர்கள் நியமிக்காமல் 14 ஆண்டாக எங்கள் வாழ்வை பாதாளத்தில் தள்ளி இரு ஆட்சியாளர்களும் எங்களை இப்படி நடத்துவதை மனதில் வைத்து பேசவும் மக்கள் நலன் நண்பரே.

      Delete
  2. மேற்கூறியவை உண்மை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி