பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமில்லை, காலை9.15மணிக்கு தொடங்கும் என தேர்வுத்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2014

பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமில்லை, காலை9.15மணிக்கு தொடங்கும் என தேர்வுத்துறை அறிவிப்பு.


இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன.இந்த ஹால் டிக்கெட்டுகள் திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தேர்வை பள்ளிகள் மூலமாக 10 லட்சத்து 35 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்களாக 66 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.பொதுத்தேர்வுக்காக தேர்வு மையங்களை தயார் செய்தல், விடைத்தாள் புத்தகத்தில் கூடுதல் பக்கங்களைத் தைத்தல், தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம், வினாத்தாள்களை கட்டுக்காப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லுதல்உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. வினாத்தாள்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டுக்காப்பு மையங்களுக்கு காப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளை எடுத்துச் செல்லவும், தேர்வுக்குப் பிறகுவிடைத்தாள்களை எடுத்து வரவும் அரசு செலவில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.இந்த நடைமுறை பத்தாம் வகுப்புத் தேர்விலும் தொடரும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.அதேபோல், பிளஸ் 2 தேர்வில் அறிமுகம் செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள், பார்கோடு எண் உள்ளிட்ட அனைத்து புதியஅம்சங்களும் பத்தாம் வகுப்புத் தேர்விலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.வினாத்தாளை தேர்வு மையங்களுக்கு விநியோகிப்பதற்கான வழித்தடங்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.வழக்கமாக, ஒரு கல்வி மாவட்டத்துக்கு 3 அல்லது 4 மையங்களே இருக்கும்.ஆனால், இந்த ஆண்டு 8 மையங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

விடைத்தாள் பக்கங்கள் 30-ஆக அதிகரிப்பு:

இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் புத்தக பக்கங்களின் எண்ணிக்கை 38-ஆக அதிகரிக்கப்பட்டது.அதேபோல, பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கையும்30-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகத்தில் 16 பக்கங்கள் மட்டுமே இருக்கும்.45 நிமிஷங்கள் முன்கூட்டியே தேர்வு: பத்தாம் வகுப்புத் தேர்வு வழக்கமான காலை 10 மணிக்குப் பதிலாக காலை 9.15 மணிக்கே தொடங்க உள்ளது. தேர்வு தொடங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கோரப்பட்டது.ஏற்கெனவே அறிவித்தபடி, 45 நிமிஷங்கள் முன்னதாக காலை 9.15 மணிக்குத் தேர்வு தொடங்கும். இதில் மாற்றம் எதுவும் இல்லை என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி