தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வில் பாடப் பகுதிகள் கடினமாக இருப்பதாகவும், குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தேர்வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் வி.ஏ.ஓ. தேர்வில் பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது.குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்துக்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத் திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) இரவு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும்வி.ஏ.ஓ. தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வி.ஏ.ஓ. தேர்வில் இதுவரை பொது அறிவு, புத்திக்கூர்மை, சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்களும், கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிகளில் இருந்து 50 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்களும் ஒதுக்கப்பட்டிருந்தன.தற்போது புதிய பாடத்திட்டத்தின்படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதேபோல் குரூப் 2 தேர்வில் அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப் பகுதிக்கேஒதுக்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள்பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்திக் கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மாற்றங்கள் குறித்து தேர்வர்கள் கூறியது:புதிய மாற்றங்களின்படி, குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் தமிழ் மொழியில் இருந்து இனி கேள்விகள் அதிகம் இடம்பெறாது. இது தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பொது அறிவு மற்றும் பிற பகுதிகளில் கேட்கப்படும் கேள்விகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அதை தமிழ் மொழிப் பகுதியில் கேட்கப்படும் எளிதான கேள்விகளால் அதிக மதிப்பெண்கள் எடுத்து ஈடு செய்ய முடியும். சிந்தித்து விடை எழுதுதல், புத்திக் கூர்மையை சோதிக்கும் பகுதிகள் வரவேற்கத்தக்க அம்சங்களாகும். தமிழ் மொழிப் பகுதி நீக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி