பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம்: ஐ.ஐ.டி., தரத்திற்கு மாற்றப்படுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2013

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம்: ஐ.ஐ.டி., தரத்திற்கு மாற்றப்படுமா?

ஐ.ஐ.டி., பாடத் திட்ட தரத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. தயார் செய்யப்பட்டுள்ள வரைவு பாடத் திட்டம், வரும், 24ம் தேதி நடக்கும் அதிகாரிகள் கூட்டத்தில், இறுதி செய்யப்படுகிறது.தற்போதுள்ள பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. எனவே, தற்போதைய காலத்திற்கு ஏற்றார் போல், புதிய பாடத் திட்டங்களை அறிமுகப்படுத்த, தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்காக, சென்னை, ஐ.ஐ.டி.,யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் நாகபூஷணம் தலைமையில், பாட வாரியாக, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகத்தின் மேற்பார்வையில், பாடத் திட்டம் தயாரிக்கும் பணி, நடந்து வருகிறது.பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய, இரு வகுப்புகளுக்கும், தலா, 24 பாடத் தலைப்புகளில், வரைவு பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, சமீபத்தில், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.வரைவு பாடத் திட்டம் குறித்து, 500க்கும் மேற்பட்டோர், பல்வேறு கருத்துகளை தெரிவித்திருப்பதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, தரமான கருத்துகள், பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும், துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை எழுதி, வெற்றி பெறும் வகையில், தரமான பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளன என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், "ஐ.ஐ.டி., கணித பாடத் திட்டங்களை பின்பற்றி, இவர்களின் பாடத்தை உருவாக்கி உள்ளோம். பிளஸ் 2 மாணவர்கள், புதிய கணிதத்தை படிக்கும் போது, ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான தகுதியை பெற முடியும்" என,தெரிவித்தார்.வரைவு பாடத் திட்டம், தற்போது இறுதி செய்யப்பட்டு உள்ளது. வரும், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு, பாடநூல் கழக அலுவலகத்தில் நடக்கும், அரசு உயர்மட்ட கூட்டத்தில், வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது. அரசின் ஒப்புதல், மிக விரைவில் கிடைத்துவிடும் என, கல்வித் துறை எதிர்பார்க்கிறது.அரசின் அனுமதி கிடைத்ததும், பாடப் புத்தகம் எழுதும் பணி துவங்கும். புத்தகம் எழுதுவதற்கு, ஒரு ஆண்டு வரை ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வரும் கல்வி ஆண்டில் (2014-15), பிளஸ் 1 வகுப்பிற்கு அறிமுகப்படுத்த இருந்த, புதிய பாடத் திட்டம், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2015-16) அமல்படுத்தப்படுகிறது. இதனால், பிளஸ் 2 வகுப்பிற்கு, 2016-17ம் கல்வி ஆண்டில் தான், புதிய பாடத் திட்டம் அமலுக்கு வரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி