என்பார்வை : நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.௨ - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2014

என்பார்வை : நாளில் மட்டுமா ஒற்றுமை? : அக்.௨ - காந்தி பிறந்த தினம், காமராஜர் நினைவு தினம்

வழிகாட்டிகளை விட வாழ்ந்து காட்டிகள் உன்னதமானவர்கள். மகாத்மா காந்தி உயரிய வாழ்ந்துகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகமே அவரை 'மகாத்மா' என்று கொண்டாடிய போது சுயசரிதை எழுதித் தன் தவறுகளை மக்கள் முன் வைத்த மகான் அவர். உலகின் தலைசிறந்த தலைவர்களுள் முதன்மையானவராய் நம் தேசப்பிதா திகழ்வதன் காரணம், வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லாமல் வாழ்ந்தவர் அவர் என்பதே. காந்தி வழியில் வாழ்ந்து காந்தியத்தின் உன்னதத்தை உணர்த்தி 'தென்நாட்டு காந்தி' என்று மக்களால் போற்றப்படும் கர்மவீரர் காமராஜர், மகாத்மா போற்றிய புனிதாத்மா.அக்டோபர் 2 ஆம் நாள் காந்தி பிறந்தநாள், அதேநாள் தான் காமராஜர் மறைந்த நாள். நாளில் மட்டுமா ஒற்றுமை? கொள்கையில், தனிமனித வாழ்க்கையில், நேர்மையில் என்று எல்லாவற்றிலும் ஒற்றுமையோ ஒற்றுமை!சிறுவயது ஒற்றுமை
காந்தி ராட்டையைச் சாட்டையாக்கி ஆங்கிலேயரை நாட்டைவிட்டு ஓடச்செய்து விடுதலை வேள்விக்குத் தன்னையே தந்தார். 

அவர் சிறுவயது வாழ்க்கை, சோகங்கள் நிறைந்தது. பதின்மூன்று வயதில் கஸ்தூரிபாயை மணக்கக் காலம் அவரை நிர்பந்திக்கிறது. பதினாறு வயதில் தந்தையை இழந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை உயர்ந்த லட்சியமுள்ள இளைஞனாய் மாற்றியவர் அன்னையார் புத்திலிபாய்தான். பதினெட்டுவயதில் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்திற்கு சென்றபோது தாயாருக்கு தந்த சத்தியத்தின்படி வாழ்நாள் முழுக்கத் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடித்தார்.

காமராஜரும் ஆறுவயதில், தந்தைகுமாரசாமி நாடாரை இழக்கிறார். தாயார் சிவகாமி அம்மையாரின் அன்பில் வளர்ந்தார். குழந்தைப் பருவத்தில் காந்தியும், காமராஜரும் தந்தையின் அன்பின்றித் தாயின் அன்பில் வாழக்காலம் பணித்தது.காந்தி பொதுவாழ்க்கையும், அவரது தனி வாழ்க்கையும் ஒளிவுமறைவற்ற உன்னதமான வாழ்க்கையாகத் திகழ்ந்தது. உள்ளத்தில் தூய்மையோடும், செயலில் நேர்மையோடும், பேச்சில் சத்தியத்தோடும், 'என் வாழ்வுதான் இந்தச்சமூகத்திற்கு நான் விட்டுச்செல்கிற செய்தி' என்று வாழ்ந்தவர். காமராஜர் அப்பழுக்கற்ற தலைவராக பொதுவாழ்வில் நேர்மைக்கு இலக்கணமாக திகழ்ந்தார்.
கூச்சம் கூடிய தலைவர்கள் "ராஜீயத்துறையில் நான் செய்திருக்கும் சோதனைகள் நாகரிக உலகத்திற்கு இப்பொழுது தெரிந்தே இருக்கின்றன. என்னளவில் அவற்றை நான் முக்கியமாகக் கருதவில்லை. அவை எனக்குத் தேடித் தந்திருக்கும் மகாத்மா பட்டத்தையும் நான் மதிக்கவில்லை. அப்பட்டத்தினால் நான் எந்தச்சமயத்திலும் ஒரு கண நேரமாவது பரவசம் அடைந்ததாக நினைவு இல்லை” என்று சத்திய சோதனை நூலுக்கு எழுதிய முன்னுரையில் காந்தி கூச்சத்தோடு எழுதியுள்ளார்.

காமராஜர் முதலமைச்சரான பின்னும் தாய் சிவகாமிஅம்மையாருக்குச் செலவுக்கு ரூ.120 தான் அனுப்பினார். 'வருகிறவர்களுக்குக் குளிர்பானம் வாங்கித்தரவேண்டும், ரூ.150 தந்தால் நலம்' என்று தாய்
வேண்டியபோதும் மறுத்தவர் காமராஜர். மகாத்மாவைப்போல், மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்தபோது கூச்சத்தோடு மறுத்து "என் கடமையச் செய்றதுல பாராட்டு ஏன்னேன்” என்று சொன்னவர் காமராஜர்.

போராட்டமே வாழ்வு உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு சாவு மணியடிக்க காந்தி நடத்திய ௨௪௦ மைல் தண்டி யாத்திரை அவரது மனஉறுதிக்கு சான்று. விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனையாய் அமைந்த மாபெரும் போராட்டத்தை அவர் அகிம்சா வழியில் நடத்திய திறத்தை உலகே வியந்து போற்றியது. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம் அவரது தன்னிகரற்ற ஆளுமைக்கு மற்றுமொரு சான்று.காந்தியின் மீதும் அவர் சத்தியாகிரகத்தின் மீதும் அளவு கடந்த பாசம் கொண்ட காமராஜர்,1927ல் நீல்சிலை அகற்றும் போராட்டம் நடத்த மகாத்மாவிடம் அனுமதி வேண்டினார். ஆனால்அரசாங்கமே அச்சிலையை எடுத்துவிட்டதால், அப்போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படவில்லை. 1930 ல் காந்தி அறிவித்த உப்புச்சத்தியாகிரகத்தில் ராஜாஜியோடு வேதாரண்யத்தில் பங்கேற்று சிறைசென்றார். அறம் பேணிய தலைவர்கள் தனிவாழ்விலும் பொதுவாழ்விலும் அறத்தைக்கடைபிடிக்க வேண்டும் என்று போதித்த காந்தி, தென்னாப்ரிக்கா சென்று திரும்பியபின் எளிய கதர்வேட்டிக்கு மாறினார். வாரம் ஒருநாள் பேசா விரதம் மேற்கொண்டார். ஆங்கிலேயரின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அண்ணலின் அகிம்சை முன் செயலற்று ஒடுங்கின. ''பிரம்மச்சரியத்தை பூரணமாக அனுசரிப்பதே பிரம்மத்தை அடைவதற்கு மார்க்கம்'' என்று நம்பிய காந்தி இல்லறத்திலும் அதை கடைபிடித்தார். இல்லறத் துறவியாய் வாழ்ந்தார்.காமராஜரும் அப்படித்தான். தாயார் திருமண ஏற்பாடுகள் செய்தபோதும், பொதுவாழ்க்கைக்குப் பிரம்மச்சரியமே ஏற்றது என்று மறுத்து இறுதிவரைத் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தார். உணவிலும் ஒற்றுமை நாம் உண்ணும் உணவிற்கும் நம் எண்ணத்திற்கும் தொடர்பு உண்டு என காந்தி நம்பினார். ''ஒருவன் எதைச் சாப்பிடுகிறானோ அது போலவேஆகிறான்” என்று அடிக்கடிச் சொன்னதுண்டு. மிகையான உணவு நோயைக் கொண்டுசேர்க்கும் என்று எண்ணி, வாரத்தில் ஒருநாள் உண்ணா நோன்பினைக் கடைபிடித்துப் புலன்களை அடக்கும் ஆற்றலைப் பெற்றார்.

காமராஜர் உணவின் மீது பெரும்பற்றுக் கொண்டவரில்லை. எளிமையான உணவு முறையையே என்றும் அவர் கடைபிடித்தார். சிறு வயது முதலே வறுமையில் வாழ்ந்ததால் சைவஉணவுப்பிரியர், மாதம் முழுக்கக் கத்தரிக்காய் சாம்பார் என்றாலும் முகம்சுளிக்காமல் சாப்பிடமுடிந்தது. பதவி வேண்டாம் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, பதவியை நாடாமல் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர் காந்தி. லால்பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்குப்பின் பிரதமராகும் வாய்ப்பு வந்தும்கூட அதை இந்திராகாந்திக்குத் தருவதற்குக் காரணமாய் இருந்தார் காமராஜர் என்பதில் இருவருக்கும் என்ன ஒற்றுமை! இருவரும் என்றும் பதவியைச் சுகமாய் நினைத்தவர்களில்லை.இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்றார் காந்தி. 1957 முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி தரும் பொருட்டுக்கிராமங்கள் தோறும் பள்ளிகள் அமைத்து மதியஉணவு தந்து கல்விக்கண் திறந்த ஒப்பற்ற காந்தியத் தலைவனாகக் காமராஜர் திகழ்ந்தார்.காந்தியின் வாழ்க்கை அகிம்சையை மையமிட்ட மகத்தான வாழ்க்கை என்றால், காமராஜரின் வாழ்க்கை காந்திய வழியில் மக்களை ஆண்ட மகத்தான வாழ்க்கை. மனிதராய் பிறந்து புனிதராய் தன்னைச் செதுக்கிக்கொண்ட மகான் காமராஜர், மகாத்மா பிறந்தநாளைக் கொண்டாடிய நிறைவில் தென்னாட்டுக் காந்தியாகவே தேசப்பிதாவின் ஆத்மாவோடு கலந்து போனார்.

-முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர்,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,திருநெல்வேலி.mahabarathi1974@gmail.com 99521 40275


வாசகர்கள் பார்வை

கொண்டாடும் வாசகர்கள்

என் பார்வையில் மலர்ந்த கவிமணி கட்டுரை வெகு அற்புதம். தனக்கு கிடைத்த பொற்கிழியை அறக்கட்டளை அமைக்க கொடுத்தது பாராட்ட வேண்டியது. நான் வகுப்பறையில் இவரைப் பற்றி பாடம் நடத்தியதை நினைவிற்கு கொண்டு வந்த என் பார்வைக்கு நன்றி. இது போன்ற கட்டுரை மூலம் தமிழின் பெருமைகளை உலகறிய செய்து தமிழ் தொண்டு செய்யும் தினமலர், வாசகர்கள் கொண்டாடும் நாளிதழ்.
-- பி. சுப்புலட்சுமி, தேவகோட்டை

ஆச்சரியமான தகவல்கள்

என் பார்வை பகுதியில் வெளியான கவிமணியின் கடைசி கவிதை கட்டுரை அருமை. தனக்கு அரசு ஓய்வூதியம் கிடைப்பதால், அண்ணாமலை செட்டியார் பாராட்டி வழங்கிய பொற்கிழியை கவிமணி வாங்க மறுத்ததும், தொடர்ந்து வற்புறுத்தி வழங்கியதால் நிதியை தனது தாயாரின் பெயரில் அறக்கட்டளை துவக்க வழங்கியது போன்ற தகவல்கள் ஆச்சரியப்பட வைத்தது.

- அ. கற்பூரபூபதி, சின்னமனூர்

மக்கள் மனதில் நாகேஷ்நகைச்சுவை நாயகன் நாகேஷ் கட்டுரை சிறப்பாக இருந்தது. கிராமத்தில் வாழும் பெரியவர்கள் நகைச்சுவையாகப் பேசுபவர்களை நாகேஷ் மாதிரி சிரிப்பு காட்டுகிறான்யா என்று உதாரணமாக சொல்வார்கள். ஒல்லியான தேகத்தை வைத்து கொண்டு தன் திறமையான நகைச்சுவை நடிப்பால் அசத்தி மக்களின் உள்ளங்களில் நிலைத்தவர் நாகேஷ். இவ்வளவு திறமையான நடிகருக்கு உயரிய விருது கிடைக்கவில்லை என்ற கட்டுரையாளரின் ஆதங்கம், இக்கட்டுரையை படித்த அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். இது போன்ற அருமையான கட்டுரையை வெளியிடும் தினமலர் நாளிதழுக்கு நன்றி.

- ம.கவிக்கருப்பையா, பெரியகுளம்

விஞ்ஞான விழிப்புணர்வுவேட்டி, புடவை அணிவது என்பது மானத்தை மறைப்பதற்கு மட்டுமல்ல நமது கலாசாரத்துடன் இணைந்தது. இன்று நாகரிக மோகத்தில் விரும்பிய உடைகளை விரும்பிய நேரங்களில் அணிந்து சுற்றிவருகிறோம். இந்த உடைகளில் பொதிந்துள்ள விஞ்ஞானபூர்வமான உண்மைகளை மிக தெளிவாக கட்டுரை விவரித்தது. அறிவியல் பூர்வமான விஷயங்களை எளிமையாக எழுதிய ஜெயவெங்கடேஷ் பாராட்டிற்குரியவர்.

- வி.எஸ்.ராமு, செம்பட்டி

எழுத்தாளருக்கு நன்றிதினமலர் என்பார்வை பகுதியில் வெளிவந்த நகைச்சுவை நடிப்பின் நாயகன் நாகேஷ் கட்டுரை படித்தேன். அரிய செய்திகளைத் தாங்கி வந்த இனிய பொக்கிஷம். ஒருவரை அழவைப்பது சுலபம், சிரிக்க வைப்பது தான் மிகச் சிரமம். அந்த கடினமான வேலையை எளிமையாக செய்து காட்டியவர் நாகேஷ் தனது வேகமான அங்க அசைவுகளின் மூலமாக உலகத்தையே வயிறு குலுங்க சிரிக்க
வைத்தவர். எழுத்தாளர் இரா.மோகன் சிறப்பாக எழுதுகிறார்.
- எல். பிரைட், தேவகோட்டை

விரிவான விளக்கம்
ரேபிஸ் அறிவியல் அவமானம் என்ற செய்தி அதிர்ச்சி தந்தது. தெரு நாய்கள் பற்றிய செய்தியும், ரேபிஸ் நோய் என்றால் என்ன அதை யார் எப்படி தடுக்க வேண்டும் என்ற விளக்கம் அருமை. எல்லாவற்றையும்விட ரேபிஸ் கடி ஏற்பட்டால், அதற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்று விரிவாக சொன்னது அருமை. பிரசுரித்த தினமலர்
நாளிதழுக்கு பாராட்டுக்கள்.- மு. உஷாமுத்துராமன், மதுரை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி