பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவர் குத்திக் கொலை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2014

பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மாணவர் குத்திக் கொலை!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை பள்ளி வகுப்பறைக்குள் 8-ஆம் வகுப்பு மாணவர் கோ. பாஸ்கரன் (14) கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.


வகுப்பறைக்குள் புகுந்து கொலை செய்த முன்னாள் மாணவர்
செ. மாரீஸ்வரன் (19) சுவர் ஏறி குதித்து தப்பியோடி விட்டார். அவரை கைது செய்யக் கோரி கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த கோபால் மகன் பாஸ்கரன். இவர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அயன்கரிசல்குளத்தைச் சேர்ந்த செல்வம் மகன் மாரீஸ்வரன், அதே பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 வரையில் படித்துவிட்டு இடையிலேயே நின்று விட்டார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாஸ்கரன் உள்ளிட்ட மாணவர்கள் 5 பேரை திருசெந்தூருக்கு மாரீஸ்வரன் அழைத்துச் சென்றாராம். அங்கு தகாத பழக்க வழக்கத்தில் ஈடுபட்டதாகவும், மயக்க மருந்து கொடுத்து அங்கேயே அவர்களை மாரீஸ்வரன் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தப்பி வந்த பாஸ்கரன் உள்ளிட்டோர் கிராமத்தினரிடம் விவரங்களைத் தெரிவித்தனர். பின்னர் மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சம்பவம் குறித்து கிராமத்தினர் மாரீஸ்வரனைக் கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்தார் பாஸ்கரன்.

அப்போது சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து வகுப்பறைக்குள் நுழைந்த மாரீஸ்வரன் கத்தியால் பாஸ்கரனை வயிறு மற்றும் முகத்தில் பல்வேறு இடங்களில் குத்தியும், வெட்டியும் உள்ளார். பின்னர் அவர் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பி விட்டார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாஸ்கரனை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே பாஸ்கரன் உயிரிழந்தார்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் உள்ளிட்ட அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியர் சம்சுதீனிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.

மறியல் போராட்டம்: தகவலறிந்த அயன்கரிசல்குளம் கிராம மக்கள் பாஸ்கரனை கொலை செய்த மாரீஸ்வரனை கைது செய்யக்கோரி அருப்புக்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம மக்களிடம் எஸ்.பி. பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார்.

இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடரும் துக்கம்

கடந்த 26-ஆம் தேதி கோபாலின் தாய் இறந்தார். இதற்காக மும்பையில் இருந்து வியாழக்கிழமை வந்த கோபால் தாயின் சடலத்தை அடக்கம் செய்தார்.

இதனால் பாஸ்கரன் அன்று பள்ளிக்குச் செல்லவில்லை. வெள்ளிக்கிழமை அவரை வற்புறுத்தி தாயார் தேவி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். பேருந்தில் ஏறி பள்ளிக்குச் சென்ற அரை மணிநேரத்திற்குள் பாஸ்கரன் கொலை செய்யப்பட்டு விட்டதாக தகவல் வந்துள்ளது.

முதல்நாள் தாயார் இறந்திருந்த நிலையில், மறுநாள் மகன் கொலை செய்யப்பட்டதால் கோபால் குடும்பமும், அந்த கிராமமும் சோகத்தில் ஆழ்ந்தது.

""திருச்செந்தூரில் பாஸ்கரனை தவிக்க விட்டுவிட்டு வந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் கொடுத்த புகாரை மாசார்பட்டி போலீஸார் உடனே விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது நாங்கள் எங்கள் மகனை இழந்திருக்க மாட்டோம்'' என்றார் கோபால்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி