கிராம உதவியாளர்களுக்கு விஏஓ பதவி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2015

கிராம உதவியாளர்களுக்கு விஏஓ பதவி உயர்வு

தமிழக வருவாய்த்துறை வரலாற்றில் முதல் முறையாக, கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு அளிப்பதற்காக தகுதியானவர்கள் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கிராமங்களில் பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றிய கிராம உதவியாளர்கள் 1995- இல் முழுநேர அரசுப் பணியாளர்களாக்கப்பட்டனர். வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேருவோர் மட்டுமே எவ்வித பதவி உயர்வும் பெறாமல் இருந்தனர்.

2010-இல் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் தொடர்ந்து பணி முடித்த கிராம உதவியாளர்களை தகுதியின் அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 10 சதவீத இடங்களுக்கு பதவி உயர்வு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பதவி உயர்வு பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.

தற்போது, கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 20 சதவீத பணியிடங்களை பணிமாற்றம் மூலம் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான கிராம உதவியாளர்கள் இல்லாத நிலையில், அப்பணியிடங்களை நேரடி நியமனத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 10 ஆண்டுகள் பணி முடித்த, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிராம உதவியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் 5-லிருந்து 10 கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வில் கிராம நிர்வாக அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி