ஆதிதிராவிடர் நலத்துறையின், 25 தொடக்கப் பள்ளிகள், ஓராசிரியர்பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. பிற பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 60 தொடக்கப் பள்ளிகள்; 15 நடுநிலைப் பள்ளிகள்; ஒன்பது மேல்நிலைப் பள்ளிகள்; எட்டு உயர்நிலைப் பள்ளிகள், இயங்கி வருகின்றன. இவற்றில், 25 தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளியாகவும்; ஏழு நடுநிலைப் பள்ளி கள், தலைமை ஆசிரியர்கள் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன. மாணவர் சேர்க்கை குறைவு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி, தரம் குறைந்து வருகிறது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த கிராமவாசிகள், தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து, தனியார் பள்ளிகளை நாடத் துவங்கி உள்ளனர். இதனால், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் உள்ளூர் ஆசிரியர்கள், பெற்றோரை சமாதானப்படுத்தி, தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என, அறிவுரை கூறி வருகின்றனர். எனினும், பொருளாதார நிலையில் கடுமையாக பின் தங்கியுள்ள குழந்தைகளே தற்போது, அதிக அளவில் இங்கு படித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் குறைந்தபட்ச வருவாய் உள்ள பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை,தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப துவங்கிவிட்டனர். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைவாக இருப்பது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெளிவாக தெரியும். இருந்தாலும், காலி பணியிடங்களை நிரப்ப, எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என, கூறப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப, ஆதிதிராவிடர் நல ஆசிரியர் சங்கம் போராடி வருகிறது.
ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளை பொறுத்தவரையில், மொத்தம், 210 ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; ஆனால் 140 ஆசிரியர்களே இருக்கின்றனர். நடுநிலைப் பள்ளிகளில், 15 தலைமை ஆசிரியர்களுக்கு, எட்டு பேர்தான் உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்கள், 270க்கு, 258 பேர் உள்ளனர். மூடு விழா மாவட்டத்தில் அதிகபட்சமாக, மதுராந்தகம் தாலுகாவில் மட்டும், 15 ஓராசிரியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை நீடித்தால், ஓராசிரியர் பள்ளிகள் விரைவில் மூடு விழா காணப்படும் என, ஆசிரியர் சிலர் கருதுகின்றனர். இருக்கின்ற பள்ளிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நிகழ் கல்வி ஆண்டில் ஆறு தொடக்கப் பள்ளிகள் துவக்கப்பட்டதோடு, ஆறு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதுகுறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதை சுட்டி காட்டி, துறைச் செயலர் மற்றும் இயக்குனரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது; அரசு, செவி சாய்ப்பதாக தெரியவில்லை.
இதனால், மாணவர்களின் தொடக்கக் கல்வி தரமாக அமையவில்லை எனில், அவர்களின் எதிர்காலம் இருண்டகாலமாகி விடும் என்ற கவலை அரசுக்கு இல்லை, என்றார். ஆசிரியர் பற்றாக்குறை குறித்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி ஒருவர் கூறுகையில்,மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில், பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார். ஆசிரியர் பற்றாக்குறை குறித்து, ஆதிதிராவிடர் நல செயலர், இயக்குனருக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். வரும் கல்வியாண்டில், புதிய ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பதில் வந்துள்ளது. அதுவரை, மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம், என்றார்.
B.T posting filling very soon
ReplyDeleteTet passed SCA candidate in social Science paper 2 Pls contact 8056817432
ReplyDelete