சின்னம்மை தாக்கம் அதிகரிப்பு: வைரஸ் உருமாறி தீவிரம் பெற்றதா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2015

சின்னம்மை தாக்கம் அதிகரிப்பு: வைரஸ் உருமாறி தீவிரம் பெற்றதா?

தமிழகத்தில், கோடையின் தாக்கம் துவங்கும் முன், 'சிக்கன் - பாக்ஸ்' எனப்படும், சின்னம்மை வேகமாக பரவி வருகிறது. கொப்பளங்கள் ஆறினாலும், தழும்புகள் மாறாததால், வைரஸ் உருமாறி தீவிரம் பெற்றுள்ளதா என, சுகாதார அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஒரு மாதமாக...:

பொதுவாக, கோடைகாலத்தில், சின்னம்மை பாதிப்பு ஏற்படும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் இந்த பாதிப்பு இருக்கும். தற்போது, கோடையின் தாக்கம் துவங்கும் முன், ஒரு மாதமாகவே சின்னம்மையின் தாக்கம் வந்து விட்டது. சிறார்கள் மட்டுமின்றி பெரியவர்களையும் தாக்குகிறது. முன், சிறு அளவிலான கொப்பளங்கள் வரும்; ஒரு வாரத்தில் ஆறி, இயல்பு நிலைக்கு வந்துவிடும்.தற்போது, கொப்பளங்கள் பெரிதாக வருகின்றன. புண்போல மாறி, குணமாக, இரண்டு வாரங்களுக்கு மேலாகிறது. தழும்புகள் மாறாத வடுவாக படிவதால், மக்கள் அஞ்சும்நிலை ஏற்பட்டு உள்ளது. பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ கூறுகையில், ''தாக்கம் அதிகமாக உள்ளது உண்மை தான். தழும்புகளும், மாறாத வடுவாக பதிந்து விடுகின்றன. மற்ற வைரஸ் போன்று, சின்னம்மை பாதிப்பை ஏற்படுத்தும், 'வெர்சில்லா ஜோஸ்டர் வைரஸ்' உருமாறி தீவிரம் பெற்று விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து, ஆராய வேண்டும். தீவிரம் பெற்றால், தேசிய தடுப்பூசி திட்டத்தில், சின்னம்மை தடுப்பையும் சேர்க்க வேண்டும்,'' என்றார்.

தடுப்பூசி போடலாம்:

சரும நோய் நிபுணர்கள் கூறியதாவது: வெயில் காலத்தில் சின்னம்மை வரும். பாதிக்கப்பட்டோர் தும்மினாலும், இருமினாலும் காற்றில் எளிதாக மற்றவர்களுக்கு பரவும். பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவது நல்லது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது நல்லது. ஒரு வாரத்தில் குணமாகிவிடும். உடலில் தழும்புகளும் ஏற்படாது. வீடுகளில் இருந்தால், குடும்பத்தில் மற்றவர்களுக்கும் பரவும்; தழும்புகள் ஏற்படும்; தோல் நிறம் மாற வாய்ப்புண்டு. டாக்டர் ஆலோசனைப்படி, 'ஏ சைக்ளோவீர்' மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம். சின்னம்மை பாதிப்பு அதிகம் இருந்தால், அப்பகுதியினர் சின்னம்மை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்; அரசு மருத்துவமனைகளில், இலவசமாக போடப்படுகிறது. பாதிக்கப்பட்டோர், ஜூஸ், நீர் ஆகாரங்களை அதிகம் குடிப்பது நல்லது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தப்பிக்க என்ன வழி?

* கோடைகாலத்தில் அதிக காரம், புளிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* வீடு காற்றோட்டமாக இருக்க ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும்.
* பழம், ஜூஸ், மோர் போன்ற நீர் ஆகாரங்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்; காய்ச்சல் இருந்தால் பழம் வேண்டாம்.
* அசைவ உணவுகளை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது; காய்கறி, கீரை வகைகளை அதிகமாக சேர்க்க வேண்டும்.
* பிறந்த, மூன்று மாதத்தில், குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசி, கட்டாயம் போட வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்றால், உடனடியாக போடுங்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி