பசுவைப் பற்றி கட்டுரை எழுத தெரியாத மக்கு வாத்தியார்: ஐகோர்ட் ஆவேசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2015

பசுவைப் பற்றி கட்டுரை எழுத தெரியாத மக்கு வாத்தியார்: ஐகோர்ட் ஆவேசம்


இளைய சமுதாயத்துக்கு கல்விக் கண்ணை திறந்து வைக்கும் பணியில் உள்ள ஆசிரியரால் பசுமாட்டைப் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை எழுத முடியாததை கண்டு கொதித்துப் போன ஜம்மு-காஷ்மீர் மாநில ஐகோர்ட் அம்மாநில கல்வித்துறையில் உள்ள ஓட்டை உடைசலை கண்டு கொதிப்படைந்துள்ளது.

தெற்கு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது இம்ரான் உசேன் என்பவரை அம்மாநில அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.அடிப்படை கல்வியை டெல்லியிலும், ஆசிரியர் பயிற்சியை நாகலாந்திலும் முடித்ததாக கூறும் முஹம்மது இம்ரான் உசேன், மிக குறைவான மதிப்பெண்களையே பெற்றுள்ளார். அதனால், அவருக்கு அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, அவரை பணி நீக்கம் செய்யும்படிமாநில அரசின் கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்த நபர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இதை எதிர்த்து வாதாடிய முஹம்மது இம்ரான் உசேன், உருது மொழிப் பாடத்தில்74 சதவீதம் மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 73 சதவீதம் மதிப்பெண்களும், கணிதத்தில் 66 சதவீதம் மதிப்பெண்களும் பெற்றிருந்ததாக சான்றிதழ்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார்.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முசாபர் ஹுசைன் அட்டர், விசாரணை அறையில் இருந்த ஒரு வக்கீலை அழைத்து உருதுவில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து உருதுவுக்கும் மொழிப்பெயர்ப்பு செய்யும் வகையில் இரண்டு வரிகளை எழுதித்தரும்படி கூறினார். வக்கீலும் அவ்வாறே செய்தார்.ஆனால், அவை இரண்டையுமே முஹம்மது இம்ரான் உசேன் தப்பும் தவறுமாக மொழிபெயர்த்ததை கண்டு எரிச்சல் அடைந்த நீதிபதி, நான்காம் வகுப்பு கணிதத்தில் இருந்து ஒரு கணக்குக்கு விடை கூறும்படி நீதிபதி கேட்டார். அவர்'பேந்தப் பேந்த' விழித்ததை கண்டு கடுப்பாகிப்போன நீதிபதி, பசு மாட்டைப் பற்றி உருது மொழியில் ஒரு கட்டுரை எழுதும்படி கூறினார்.பேப்பரை வாங்கி வைத்துக்கொண்டு சில நிமிடங்கள்வரை மண்டையை சொறிந்துக் கொண்ட முஹம்மது இம்ரான் உசேன், இங்கு எனக்கு சரியாக எழுத வரவில்லை. வெளியே செல்ல அனுமதித்தால் உடனடியாக எழுதி கொண்டு வருகிறேன் என்று கூறினார்.நீதிபதியும் அதற்கு சம்மதித்தார்.

வெளியே சென்ற முஹம்மது இம்ரான் உசேன், பசு மாட்டைப் பற்றி எழுதி கொண்டுவந்த 'அரைகுறை' கட்டுரையை கண்டு திகைத்துப்போன நீதிபதி, இதைப்போன்ற நிலையில் இவர்களைப் போன்றவர்களிடம் கல்வி கற்கவரும் மாணவர்களின் நிலை என்னவாகும்? என்பதை கல்வித்துறை அதிகாரிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.வெறும், சான்றிதழ்களின் அடிப்படையில் மட்டும் ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் முறையை கைவிட்டு, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள்? என்பதை சில நாட்களுக்கு கண்காணித்து, அதன் பின்னர் பணி நியமனம் செய்யும் முறையை கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.மேலும், வெளிமாநில கல்வி நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ்களை சரிபார்க்க ஒருகுழுவை அமைத்து, கண்காணிக்க வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்த வரையில் அரசு அதிகாரிகள் கண்மூடித்தனமாகவும், மனசாட்சியற்ற முறையிலும், வெறும் சான்றிதழ்களின் அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தகுதியற்ற நபரை நியமனம் செய்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட முஹம்மது இம்ரான் உசேனை உடனடியாக பணி நீக்கம் செய்வதுடன், அவர் மீது போலீசில் புகார் அளித்து மோசடியாக சான்றிதழ் பெற்று அரசுப் பணியில் சேர்ந்த குற்றத்துக்காக வழக்குப்பதிவு செய்து தண்டிக்க வேண்டும். இவருக்கு இந்த சான்றிதழ்களை வழங்கிய நாகலாந்து ஆசிரியர் பயிற்சிப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் அதே பள்ளியில் பயிற்சி பெற்று ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. பணியில் உள்ள ஆசிரியர் அனைவரருக்கும் தாம் நடத்தும் பாடத்தில்
      முதலில் தகுதி தேர்வு நடத்து.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி