மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2015

மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நடைமுறைக்கு வருமா?

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் நான்கு ஆண்டுகளாக, செயல்படுத்தப்படாமல் நிலுவையில் இருப்பதால், திட்டம் நடைமுறைக்கு வருவதில், சாத்தியமில்லாத சூழல் உருவாகியுள்ளது.பல்வேறு காரணங்களால், பள்ளிகளில் ஏற்படும் இடைநிற்றலை தவிர்க்க, மாணவர்களின் ஒட்டுமொத்த விவரங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை, 2011ம் ஆண்டு மாநில அரசு கல்வித்துறை மூலம் அறிமுகப்படுத்தியது.


இஎம்ஐஎஸ் (பள்ளி கல்வி இணையதளம்) என்ற திட்டத்தின் கீழ், இவ்வாறு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதும் ஒன்றாகும். இதில், மாணவர்களின் பெயர், முகவரி, ரத்த வகை, எடை, உயரம், தொடர்பு எண் என,ஒவ்வொரு தகவல்களாக ஆண்டுதோறும் பதிவு செய்யும் பணியும் நடக்கிறது.ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும், இந்த விவரங்களை பதிவு செய்வது பள்ளி நிர்வாகத்துக்கு ஒரு பிரச்னையாகவே உள்ளது.காரணம், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ், 2 வகுப்புகளை முடித்து செல்லும் மாணவர்களின் விவரங்களை விடுத்து, மீண்டும் புதிதாக மாணவர்களின் விவரங்களை சேர்க்கும் பணிகளால்தான். தவிர, விவரங்களை பதிவு செய்ய சர்வர் எல்லா நேரத்திலும், பயன்பாட்டில் இருப்பதில்லை. சில நேரங்களில், இரவு நேரத்தில் சர்வர் பயன்பாட்டுக்கு வருகிறது.


கல்வித்துறை குறிப்பிட்ட காலத்திற்குள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்துவதால், வேறுவழியின்றி எந்நேரத்திலும் விவரங்களை பதிவு செய்யவே காத்திருக்க வேண்டியுள்ளது. இணையதள வசதியில்லாத பள்ளிகளின் நிலை மேலும் மோசம். அவ்வாறுள்ள பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளிலும், கம்ப்யூட்டர் சென்டர்களிலும் அணுகி இப்பணிகளை செய்கின்றனர்.ஸ்மார்ட் கார்டு மட்டுமின்றி, ஆசிரியர்களின் புதுமையான கற்பித்தல்வழிமுறைகள், மாணவர்களுக்கான புத்தக தொகுப்புகள் உட்பட அனைத்திற்குமான பதிவேற்றங்களும் நடக்கின்றன. ஸ்மார்ட் கார்டுகளில்குறிப்பிட்டிருக்கும், 16 இலக்க எண்ணைக் கொண்டு அந்த இணையதளத்தில் மாணவர்களின் விவரங்கள் அறியப்படும்.


பள்ளி மாணவர்களுக்கான இத்திட்டத்தின் நோக்கம் பயனுள்ளதாக இருப்பினும், தற்போது இவை செயல்படுத்தப்படுமா என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதில், கடந்த கல்வியாண்டு முதல் புதிதாக ஆதார் எண் இணைக்கும் பணிகளும் துவங்கியுள்ளன. பெரும்பான்மையான குழந்தைகளுக்கு, பெற்றோரின் ஆதார் அட்டையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.சில நேரத்தில் குழந்தைகளின் ஆதார் எண் கட்டாயம் தேவை, சில நேரத்தில் பெற்றோரின் ஆதார் எண் போதுமானது, மற்றொரு நேரத்தில் ஆதார் எண்கள் கட்டாயமில்லை, ஆதார் முகாம் நடத்தப்படும் என பல்வேறுஅறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதால், தற்போது என்ன செய்வதென்றே தெரியாத நிலைக்கு பள்ளி நிர்வாகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.


இரண்டாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், இப்பணிகளால், பாடம் நடத்துவதும் பாதிக்கப்பட்டுள்ளது.திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்தில் கேட்கப்பட்ட விவரங்களே, தற்போதுவரை மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது. இருப்பினும், இத்திட்டத்திற்கான பணிகளில் முன்னேற்றம் இல்லை. எந்நிலையில் உள்ளதென்பதற்கான அறிவிப்புகளும் இல்லாததால், திட்டம் நடைமுறைக்கு வருமா என்பதே தெரியாமல், பள்ளி நிர்வாகத்தினர் செயல்படுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி