4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. சிறப்புச் சலுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 14, 2015

4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. சிறப்புச் சலுகை

தேர்வுகளை ஜனவரிக்கு ஒத்திவைக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, முதலாமாண்டு முதல் பருவத் தேர்வை எழுதுவோர் விருப்பப்பட்டால் இப்போது எழுதலாம்.


இல்லையெனில், இரண்டாம் பருவத் தேர்வுக்குப் பின்னர் ஏப்ரல்-மே மாதங்களில் முதல் பருவப்பாடங்களை எழுதிக் கொள்ளலாம். தொடர் மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக, பல்கலைக்கழகங்கள் பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தன. மழை ஓய்ந்த பின்னர், இணைப்புக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு (2013 நடைமுறை) முதல் பருவத் தேர்வுகளை டிசம்பர் 15 முதல் 21-ஆம் தேதி வரை 6 பாடங்களுக்கான தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதாவது, டிசம்பர் 15-இல் பொறியியல் வேதியியல், 16-இல் பொறியியல் கிராஃபிக்ஸ், 17-இல் பொறியியல் இயற்பியல், 18-இல் தொழில்நுட்ப ஆங்கிலம், 19-இல் கணிதம், 21-இல் கணினி புரோகிராம் என தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், தொடர்ச்சியாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னைஅண்ணா பல்கலைக்கழகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் இடைவெளி வரும் வகையில் டிசம்பர் 16, 18 ஆகிய இரண்டு தேர்வுகளை ஒத்திவைப்பதாக பல்கலைக்கழகம் அறிவித்தது. இதை ஏற்க மறுத்து, மாணவர்கள் போராட்டத்தை இரவு வரை தொடர்ந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எம்.ஐ.டி. போன்ற கல்லூரிகளுக்கு மட்டும் முதலாமாண்டு முதல் பருவத் தேர்வுகளை ஜனவரிக்கு மாற்றி வைத்துள்ளது. ஆனால், இணைப்புக் கல்லூரிகளுக்குமட்டும் டிசம்பரில் இடைவெளி இன்றி தொடர்ச்சியாக வரும் வகையில் உள்ளது.


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாடப் புத்தகங்கள், உடைகள், உடைமைகளை இழந்திருப்பதோடு, தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இணைப்பு கல்லூரி முதலாமாண்டு முதல் பருவத் தேர்வுகளையும் ஜனவரிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்றனர். சிறப்புச் சலுகை: போராட்டம் தொடர்ந்ததால், பல்கலை அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சிறப்புச் சலுகை அளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கூறியது: 4 மாவட்டங்களில் 148 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பயிலும் மாணவர்கள் வெள்ளப் பாதிப்பில் புத்தகங்களையும்,உடைமைகளையும் இழந்ததோடு, மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டும், 148 கல்லூரிகளில் படிக்கும் முதலாமாண்டு முதல் பருவ மாணவர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மாணவர்கள் விருப்பப்பட்டால் இப்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி தேர்வு எழுதலாம்.


இல்லையெனில், இரண்டாம் பருவத் தேர்வுக்குப் பிறகு ஏப்ரல்-மே மாதத்தில் முதல் பருவத் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். இவ்வாறு எழுதுவதால், "அரியர்' எழுதுபவர்களாக கருதப்பட மாட்டார்கள். முதல் முறை எழுதுபவர்களாகவே கருதப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி