பகுதி நேர ஆசிரியர்களுக்கு பாடவேளை அடிப்படையில் ஊதியம் வழங்கும் முறையை மாற்றி தொகுப்பூதியம் வழங்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2018

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பாடவேளை அடிப்படையில் ஊதியம் வழங்கும் முறையை மாற்றி தொகுப்பூதியம் வழங்க கோரிக்கை!


பாலிடெக்னிக் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பாடவேளை அடிப்படையில் ஊதியம் வழங்கும் முறையை மாற்றி தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (செப்டம்பர் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 46 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் காலியான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் பகுதி நேர ஆசிரியர்களைக் கொண்டு தான் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

1700க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பாடவேளைக்கு ரூ.300, செயல்முறை பாடவேளைக்கு ரூ.150 என்ற விகிதத்தில் மாதத்திற்கு ரூ.15,000க்கு மிகாமல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஆண்டுக்கு 7 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும். மீதமுள்ளகாலங்களில் தேர்வுப் பணி, விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு சென்றால் மட்டும் அவர்களுக்கு ஓரளவு ஊதியம் கிடைக்கும். இல்லாவிட்டால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு எந்த ஊதியமும் கிடைக்காது.சில மாதங்களில் மிக அதிக பாடவேளைகள் பாடம் நடத்தினாலும் கூட, ஊதிய உச்சவரம்பாக ரூ.15,000 நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், அத்தொகை மட்டுமே ஊதியமாக கிடைக்கும்.

இந்நிலையை மாற்றி ஒவ்வொரு மாதமும் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் கிடைக்கும் வகையில், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் போதிலும், அதை ஏற்க ஆட்சியாளர்கள் மறுக்கின்றனர்” என்று விமர்சித்துள்ளார்.தமிழக அரசின் கலை-அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகியவற்றில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் இதே விகிதத்தில் தான் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே கவுரவ விரிவுரையாளர்களுக்கு தொகுப்பூதிய முறை அறிமுகம் செய்யப்பட்டு, மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இவை எதுவும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள ராமதாஸ், “பொறியியல் மற்றும் கலை அறிவியலில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்த பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் முழுவதும் பணி செய்து கிடைக்கும் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலான ஊதியத்தை வைத்துக் கொண்டு எவ்வாறு குடும்பம் நடத்த முடியும்.

இவர்களில் பலர் மாதாந்த அதிகபட்ச ஊதியம் ரூ.4000 வழங்கப்பட்ட காலத்திலிருந்து பணியாற்றி வருபவர்கள் ஆவர். வாழ்க்கையின் பெரும்பகுதியை பகுதி நேர ஆசிரியர்களாகவே கழித்து விட்ட இவர்களால் இனி வேறு பணிகளுக்கு செல்வதும் சாத்தியமற்றது.

எனவே, பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும்பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும். உடனடியாக அது சத்தியமில்லை என்றால் பாடவேளை அடிப்படையில் ஊதியம் வழங்கும் முறையை மாற்றிதொகுப்பூதியமாக மாதம் ரூ.30,000 வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி