ஏன் தாமதம் என கேட்ட அரசு பள்ளி ஆசிரியை மீது 8-ம் வகுப்பு மாணவன் தாக்குதல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2018

ஏன் தாமதம் என கேட்ட அரசு பள்ளி ஆசிரியை மீது 8-ம் வகுப்பு மாணவன் தாக்குதல்!


காடையாம்பட்டி அருகே பள்ளிக்கு தாமதமாக வந்ததை, ஆசிரியை கேட்டதால் ஆத்திரமடைந்த 8ம் வகுப்பு மாணவர், கையில் கிடைத்த பொருட்களை ஆசிரியை மீது வீசி தாக்குதல் நடத்தினார். இது தொடர்பாக ஓமலூர் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே பொட்டியபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 8 ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியையாக புவனேஸ்வரி உள்ளார். இவருக்கும், அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை கிரிஜாவிற்கும் இடையே, வகுப்புகள் நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் தலைமை ஆசிரியை புவனேஸ்வரியும், ஆசிரியை கிரிஜாவும் அவ்வப்போது மோதிக்கொள்வர்.

இது பற்றிய தகவல் அறிந்த கிராம மக்கள், ஆசிரியைகளின் மோதலால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறி, உடனடியாக இருவரையும் வெவ்வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யுமாறு உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இதுபற்றி கண்டு கொள்ளாமல் அதிகாரி காலதாமதம் செய்து வந்தார். இதனால், இருவரும் மாணவர்களை தூண்டி விட்டு, அவ்வப்போது தங்களுடைய வன்மத்தை தீர்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளிக்கு தாமதமாக வந்தார். அப்போது வகுப்பு ஆசிரியை கிரிஜா, அந்த மாணவரை ஏன் தாமதமாக வந்தாய் என கேட்டு கண்டித்துள்ளார். மேலும், பெஞ்ச் மீது ஏறி நிற்குமாறு கூறினார்.

இதனால் ஆவேசமடைந்த அந்த மாணவர், தான் கையில் வைத்திருந்த தேர்வு அட்டை, தன்னுடைய பேக் மற்றம் கையில் கிடைத்த பொருட்களை  ஆசிரியை மீது வீசியெறிந்து தாக்குதல் நடத்தினார். மேலும், ஆசிரியையை ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளிக்கு வந்த போலீசார், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியர்கள் இடையே கோஷ்டி மோதல் இருப்பதும், அதன் எதிரொலியாக மாணவர்கள் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவரை அழைத்து போலீசார் எச்சரித்தனர். பின்னர், வகுப்பு ஆசிரியை கிரிஜாவிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. வகுப்புக்கு தாமதமாக வந்ததை கண்டித்த ஆசிரியையை, மாணவர் தாக்கிய சம்பவம் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

6 comments:

  1. இந்த மாதிரியான கேவலமான ஆசிரியர்கள் பள்ளியின் உள்ளே எப்படி எப்படி வந்தார்கள் முறையான கல்வி கற்று வந்தார்களா ? லஞ்சத்தின் உச்சக்கட்டம் இந்த விளைவுகள்.

    ReplyDelete
  2. ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி நடந்தால் என்ன சொல்வது. துடித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு வேலையே இல்லை 47 வயதாகியும் இன்னும் அலைந்துக்கொண்டிருக்கிறோம். யாரைத்தான் குற்றம் சொல்வது.

    ReplyDelete
    Replies
    1. இந்த அரசைத்தான் குறைசொல்ல வேண்டும்.

      Delete
  3. தப்பு செய்வது ஆசிரியர்கள் அதை தலைப்பு செய்தியாக போடாமல் மாணவன் தாக்குதல் என்று செய்தி போடுவது எந்த விதத்தில் நியாயம்

    ஆசியர்கள் என்ன சொல்லி கொடுகிறார்களோ அதைத்தானே மாணவன் செய்வான்

    எப்போது மாணவனுக்கு எச்சரிக்கை கொடுமை

    ReplyDelete
    Replies
    1. உண்மை தலைப்பை மாற்றி தான் போட்டு இருக்கிறார்கள்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி