சீருடை பணியாளர் தேர்வு வழக்கில் போலி அறிக்கை தாக்கல் செய்த விவகாரம் - நீதிமன்றம் அதிர்ச்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2019

சீருடை பணியாளர் தேர்வு வழக்கில் போலி அறிக்கை தாக்கல் செய்த விவகாரம் - நீதிமன்றம் அதிர்ச்சி!


சீருடை பணியாளர் தேர்வில் போலி அறிக்கை அளித்து தொடர்பாக சென்னை காவல் ஆணையர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2018ம் ஆண்டு கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடத்திய தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான விடை எழுதிய தனக்கு மதிப்பெண் வழங்கவில்லை எனக்கூறி, இரண்டாம் நிலை காவலர் அருணாச்சலம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அருணாச்சலம் எழுதிய விடை சரியானதா, தவறானதா என்பதை ஐஐடி கணித பேராசிரியை நியமித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி ஐஐடியில் கணித பேராசிரியராக பணிபுரியும் மூர்த்தி என்பவர் அளித்த அறிக்கையின்படி மனுதாரர் எழுதிய பதில் தவறானது என ஏற்கனவே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் சார்பில் அறிக்கை செய்யப்பட்டது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

போலி அறிக்கை கண்டுபிடிப்பு

இந்நிலையில் அருணாச்சலம் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வில் தாம் எழுதிய விடை தவறானது என ஐஐடி கணித பேராசிரியர் மூர்த்தி அளித்த அறிக்கையின் அடிப்படையில் எனது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் மூர்த்தி என்பவர் ஐஐடியில் பணியாற்றவில்லை, இதற்கு முன்னரும் மூர்த்தி என்ற பெயரில் ஐஐடியில் யாரும் பணியாற்றவில்லை என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணய உறுப்பினர் செயலர் செந்தாமரைக்கண்ணன் என்பவர் ஆஜராகி விளக்கமளித்தார். அதில், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆலோசகராக இருந்த குமார் என்பவர் அளித்த பரிந்துரையின் பேரில் மூர்த்தி என்பவரின் அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக கூறியிருந்தார். இருப்பினும் ஒரு போலி அறிக்கையை தக்கால் செய்ததன் காரணமாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரணக்கு எடுத்து இதுகுறித்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயத் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆஜர்

இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் திரிபாதி ஆஜரானார். இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆலோசகராக குமார் இருந்து வருவதாகவும், அவரது பரிந்துரையில் சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த 18 பேரை நியமித்ததாகவும் கூறினார். அவர்கள் யாரும் இந்த பணியில் ஆர்வம் காட்டாததால் அதற்கு பின்னரே மூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டதாக கூறினார். மோசடியில் ஈடுபட்டதால் தற்போது குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவலளித்த குமார் தனி அறையில் வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கியதாக புகார் அளித்துள்ளார். மேலும் தன்னையும் இந்த வழக்கில் சேர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சீருடை பணியாளர் உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் தயாரிப்பை தவிர அனைத்து நடைமுறைகளிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என கூறினார். மேலும் சீருடை பணியாளர் தேர்வு மோசடி விவகாரத்தில் என்ன விசாரணை நடைபெற்றது என்று கேள்வி எழுப்பி வழக்கை இன்று பிற்பகல் ஒத்திவைத்துள்ளனர்.

சென்னை காவல் ஆணையர் விசாரிக்க உத்தரவு

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சீருடை பணியாளர் தேர்வில் கேள்வியே தவறு என்பதால் 2,388 தேர்வர்களுக்கு அதற்கான மதிப்பெண்களை வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மோசடி அறிக்கைக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க தேர்வாணயத் தலைவருக்கு கடமை உள்ளது என்றும் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தேர்வாணய தலைவர் மீதான வழக்கை கைவிட முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார். தேர்வு வாரிய அதிகாரிகள், புரோக்கர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறிய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாது என்பதை தேர்வாணய தலைவர் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். போலி அறிக்கை அளித்த பேராசிரியர் மூர்த்தி ஒத்துழைப்பு தருவதால் அவரை கைது செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை காவல் ஆணையர் முறையாக விசாரணை நடத்தி ஏப்., 22ம் தேதி அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி