மாணவர்களை சுகாதார துாதுவராக நியமித்து, பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2019

மாணவர்களை சுகாதார துாதுவராக நியமித்து, பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தல்


மாணவர்களை சுகாதார துாதுவராக நியமித்து, பள்ளியைசுற்றியுள்ள பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழை துவங்கியுள்ளதால், அரசு மற்றும் அனைத்துவகை பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

அதன்படி, பள்ளிகளில் நடக்கும் காலை வழிபாட்டு கூட்டத்தில் டெங்கு காய்ச்ல் தடுப்பு முறைகள் சார்ந்து தலைமை ஆசிரியர் மாணவருக்கு உரிய அறிவுரைகள் வழங்குவது கட்டாயம்.உணவு உண்பதற்கு முன்பு கைகளை கழுவும் பழக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவது அவசியம். வகுப்பறைகளை துாய்மையாக வைக்க அறிவுறுத்த வேண்டும்.வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனை மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கலாம்.

தலைமை ஆசிரியர் இதனை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வார்.பள்ளி வளாகத்திலும், வீடுகளிலும் நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொண்டு, டெங்கு கொசுக்கள் உருவாகாமல் தடுக்கலாம்.தண்ணீர் தொட்டிகளை மூடி வைப்பதன் மூலம், கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க முடியும். என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள், பசுமைப்படை, ரெட் கிராஸ் மாணவர்களை சுகாதார துாதுவராக நியமித்து பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு, பெற்றோருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சுகாதாரம், தொற்று நோய்கள் குறித்தும் பலகைகள் மற்றும் பதாகைகளை பள்ளி வளாகத்திற்குள் வைப்பது அவசியம்.நோய் தடுப்பு நடவடிக்கையோடு, நோய்க்கான அறிகுறி தெரிந்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனை செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.

பள்ளிக்கு மாணவர்கள் காய்ச்சலோடு வந்தாலோ, பள்ளிக்கு வந்த பின்பு காய்ச்சல் ஏற்பட்டாலோ, அதை ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். தலைமை ஆசிரியர், பெற்றோருக்கு தகவல்தெரிவித்ததும், மாணவர்களை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம்.இவ்வாறு, அவர், தலைமையாசியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் டெங்கு விழிப்புணர்வை மாணவர்களை வைத்து எளிதாக ஏற்படுத்த முடியும்.குறிப்பாக, மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நன்கு அறிமுகமானவர் என்பதால், இந்த விழிப்புணர்வு பிரசாரம் எளிதாக கைகொடுக்கும் என சுகாதார துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி