மத்திய அரசு அடுத்த அதிரடி வீட்டு தங்கத்துக்கும் வருகிறது வேட்டு: 30 சதவீதம் அபராத வரி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2019

மத்திய அரசு அடுத்த அதிரடி வீட்டு தங்கத்துக்கும் வருகிறது வேட்டு: 30 சதவீதம் அபராத வரி


கருப்பு பணத்தை மீட்கும் மற்றொரு முயற்சியாக, கணக்கில் காட்டப்படாத தங்கத்துக்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் அதிரடி திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 நாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க, மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காகத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையே கொண்டு வரப்பட்டது. மேலும், கணக்கில் காட்டப்படாமல் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவதற்கான சலுகை திட்டத்தையும் கடந்த 2016ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, கருப்பு பணத்தை தானாக முன்வந்து தெரிவித்தால். 30 சதவீத வரி, 7.5 சதவீத கூடுதல் வரி, 7.5 சதவீதம் அபராதம் என மொத்தம் 45 சதவீதம் வரியை செலுத்தி விட்டு, மீதத் தொகையை வெள்ளையாக தங்கள் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

அது பற்றி மத்திய அரசு எந்த விசாரணையும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்காது. ஆனால், புலி வாலை பிடித்த கதையாகி விடும் என்ற அச்சத்தில், கருப்பு பண புள்ளிகள் அதிகளவில் இந்த திட்டத்தை பயன்படுத்தவில்லை. இதனால், இத்திட்டம் முழு வெற்றி பெறவில்லை. அரசியல்வாதிகள் சிலர் மட்டுமே, இத்திட்டத்தை பயன்படுத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றினர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் முன்பாக, நாட்டில் ரூ.15.4 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இதில், ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம் கோடி வரை வங்கிக்கு திரும்பாது என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஆனால், கிட்டதட்ட முழு அளவிலான பணமும் வங்கிக்கு திரும்பியது. இதனால், மத்திய அரசு ஏமாற்றம் அடைந்தது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதும், பெரும்பாலான கருப்பு பணப்புள்ளிகள் தங்கள் பணத்தை தங்கமாக மாற்றி
பதுக்கி விட்டனர்.

இதன் மூலம், பல லட்சம் கோடி பணம்  மீண்டும் தங்கமாக பதுங்கி விட்டது. இவ்வாறு கணக்கில் காட்டாமல் இந்தியர்கள் வைத்துள்ள தங்கத்தின் அளவு 20 ஆயிரம் டன்னுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், கணக்கில் காட்டாமல் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோர் ஆண்டாண்டு காலமாக சேமித்து  வைத்திருந்த தங்கம் இவற்றை எல்லாம் கணக்கில் சேர்ந்தால், இந்தியாவில் 25 ஆயிரம் டன் முதல் 30 ஆயிரம் டன் வரை ‘கருப்பு தங்கம்’ இருக்கலாம் என மதிப்பிடப்பட்டு உள்ளது. தற்போதைய மதிப்புப்படி, இவற்றின் மதிப்பு 71 லட்சம் கோடி முதல் 106 லட்சம் கோடி வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டு உள்ளது. இவற்றை கணக்கில் கொண்டு வர மத்திய அரசு, விரைவில் புதிய அதிரடி திட்டத்தை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த திட்டத்தின் விவரங்கள் வருமாறு:
* தனிநபர் ஒருவர் எந்த ரசீதும் இல்லாமலும், கணக்கில் காட்டாமலும் வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து வரி செலுத்த வேண்டும்.
* இதற்கான வரி எவ்வளவு என்பதை அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால், 30 சதவீதம் முதல் 33 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
* இந்த திட்டம் மூலம் தங்கம் வடிவில் இருக்கும் கருப்பு பணம் கணக்கில் வரும்.
* கணக்கில் காட்டப்படாத பணத்தை அரசிடம் தெரிவிக்க மத்திய அரசு ஏற்கனவே கொண்டு வந்த பிரதமரின், ‘கரீப் கல்யாண் யோஜனா திட்டம்’ ஒரு குறிப்பிட்ட அளவில்தான் வெற்றி பெற்றது. அதனால், தங்கம் வடிவில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்க இந்த புதிய திட்டத்தை அரசு கொண்டு வருகிறது.
* இது நல்ல திட்டமாக இருந்தாலும், இதை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.
* மக்கள் பலர் ஆண்டாண்டு காலமாக தங்க நகைகளை சிறிது சிறிதாக வாங்கி சேமித்து, தங்கள் வாரிசுகளுக்கு கொடுத்து வருகின்றனர். இதற்கான ரசீது பலரிடம் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரசீது இல்லாத தங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும் என அறிவித்தால், அது மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தும்.
* மேலும், கணக்கில் காட்டப்படாத தங்கத்தை அரசிடம் தெரிவித்தால், அதன் பின் வருமான வரித்துறை அதிகாரிகளின் தொந்தரவுக்கும் ஆளாக நேரிடும்.
* பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், கணக்கில் காட்டப்படாத பணத்தை அரசிடம் தெரிவித்த பின்பும், பலருக்கு அவர்களின் டெபாசிட் செய்த பணம் எப்படி வந்தது என விளக்கம் கேட்டு வருமான வரித்துறையிடம் இருந்து லட்சக்கணக்கான எஸ்எம்எஸ்.்கள் வந்தன.
* அதனால், அரசின் இந்த திட்டமும் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.
* கணக்கில் காட்டப்படாத பணத்தை தெரிவிக்க குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்தது போல், தங்கத்தை தெரிவிக்கவும் கெடு நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.
* கருப்பு பணத்தை மீட்பதில் மோடி அரசு தோல்வியடைந்து விட்டதாக கடந்த மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
* விரிவான தங்க கொள்கை குறித்து நிதி ஆயோக் 2 ஆண்டுகளுக்கு முன்பே திட்டம் வகுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த தங்க திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி